Nov 30, 2010

சோறு கிடைக்குமா?... நாடாளுமன்றத்தில் விவாதிப்பார்களா?

இன்று ஒரு வலைபதிவு என் எண்ணங்களை மிகவும் பாதித்தது. 1.76 லட்சம் கோடி நாட்டுக்கு இழப்பு, ஊழல் என கூச்சலிடும் அரசியல் கட்சிகள் தயவு செய்து இதை விவாதிப்பார்களா?

சோறு கிடைக்குமா? இந்த படத்திற்கு என்ன பதில் சொல்ல முடியும்.


சோறு சாப்பிடாம படுத்த பூச்சாண்டி பிடிச்சுடும் என்று என்குழந்தைக்கு வம்புக்கு சோறுட்டினேன். அழுதுகொண்டே வீம்புக்கு சோறுண்ட குழந்தை நிம்மதியாய் தூங்குகிறது.

தூங்கும் முன் வலைபூக்களில் ஒரு மேலோட்டம் இட்டு செல்ல வந்தவளுக்கு மனம் கணத்துவிட்டது.

திரு. மாப்ள ஃகரிசுவின் சோறு கிடைக்குமா என்ற இந்த பதிவை படித்த பின்னர் எப்படி மனம் தூங்கும்?

இந்த இரவு எத்தனை குழந்தைகள் பட்டினி மயக்கத்தில் மயங்கி கிடக்கின்றனவோ ?

இறைவா நீ குறைந்தபட்சம் குழந்தைகளுக்காகவாவது பட்டினிகொடுமையை கொடுக்காமல் இருக்க நாங்கள் என்ன செய்யவேண்டும்?

*உலகில் சுமார் 25000 பேர் நாளொன்றுக்கு பசியால் இறக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம்


*உலகில் சுமார் 100 கோடி பேர் உயிர்வாழ தேவையான உணவின்றி பசியால் வாடுகின்றனர் என்கிறது சர்வதேச உணவு திட்ட ஆராய்ச்சி மையம்.


*உலகில் மிக வறுமையில் பசியால் வாடுவோரில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர் என்கிறது உலகவங்கியின் மதிப்பீடு

தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை என்றால் எனக்கு இந்த பதவி வேண்டாம் என்று சொல்லும் அரசியல்வாதியை அடையாளம் காண்பது எப்போது?

ஆண்டவனும் இல்லை, ஆள்பவனும் இல்லை, அடித்தட்டில் இருக்கும் நான் ?

தி.மு.க விரிவடைகிறது : கேரளாவில் புதிய பொறுப்பு

தி.மு.க தலைவர் முதலமைச்சர் மு. கருணாநிதியை, கேரள மாநில திமுக அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட குமாரி எசு.நாயர் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சோனியாகாந்தி எந்த மதம்? என்ன சாதி? (சாதி-மத பிரியர்களுக்கானது)

சோனியா காந்தி எந்த மதத்தை சேர்ந்தவர், எந்த மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை தெரிவிக்க கோரி தகவல் அறியும் உரிமை சட்டப்படி முன்னாள் அரியானா மாநில காவல்துறை உயர்அதிகாரி வத்வா தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி, மத்திய பொது தகவல் அதிகாரி ஆகியோருக்கு மனு கொடுத்தார்.

ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வத்வா பஞ்சாப்&அரியானா மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முகுல்முத்கல், ரங்கோன் கோகாய் ஆகியோர் தள்ளுபடி செய்தனர்.

பொதுவாழ்வில் இருப்பவர்களின் விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி அளிக்க முடியாது. மனுதாரர் பிரபல அரசியல்வாதியின் பொதுவாழ்வில் குறுக்கிடுகிறார். இது ரகசியமாக பாதுகாக்ககூடியது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அப்புறம் சாதி பிரியர்களுக்கு

சோனியாகாந்தி என்ன சாதி என்று தெரிந்துகொள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாதே என்ற கவலை வேண்டாம்.

ஒரு வழி இருக்கிறது.

தனித்தொகுதியில் சோனியாகாந்தி போட்டியிட முடியுமா? 


இந்த கேள்விக்கு நிச்சயம் பதில் கிடைக்கும்.

பாவம் அந்த இளைஞர் : மக்கள் தலைவருக்காக மவுனம் காக்கிறார்.

நாளிதழ்களில் நிருபர்களுக்கு என சில துறைகள் ஒதுக்கப்பட்டு விடும். அதில் இருந்து தான் செய்தி சேகரிக்க வேண்டும். எனக்கு மாநகராட்சி துறை ஒதுக்கப்படாததால் இதுவரை மாநகராட்சி கூட்டத்திற்கு சென்றதில்லை.

இன்று ஏதேசயாக சென்றேன். சட்ட மன்றம் போன்ற கம்பீரம் எல்லம் இருந்தது.
70 உறுப்பினர்கள் வருகையுடன் கலைகட்டியது.

மேயர் நடுவே அங்கியுடன் அமர்ந்திருக்க இடபுறம் துணைமேயரும், வலது புறம் மாநகராட்சி ஆணையரும் அமர்ந்திருந்தார்.

கூட்டம் துவங்கிய ஒருசில நிமிடங்களில் வழக்கம் போல கூச்சல் குழப்பம் என அமர்களப்பட்டது. வயதில் பெரிய உறுப்பினர்களின் வாக்குவாதம் கொஞ்சம் ரசிக்கும்படியாக தான் இருந்தது. ஆனாலும் ரகளை மட்டும் எரிச்சலை தந்தது.

மக்கள் பிரச்சனைகளை எப்படி அழகாக அமைதியாக விவாதிக்கலாம், ஆனால் இப்படி கூச்சல் போட்டுக்கொள்கிறார்களே என அருகில் இருந்த சக பத்திரிக்கையாளரிடம் கேட்டேன்.

தமிழகத்தில் கோவையில் மட்டும் தான் மாநகராட்சி கூட்டம் இவ்வளவு அமைதியாக நடக்கிறது. மற்ற மாவட்டங்களில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும் என்றார். ஓ இது தான் சிறந்த அமைதியோ என சிலாக்கித்துக்கொண்டேன்.

ஒரு அரை மணி நேரம் அமைதியாக பார்வையிட்டேன். ஏறத்தாழ எல்லா உறுப்பினர்களுமே பல முறை எழுந்து நின்று பேசி கூச்சல்போட்டனர். ஒரே ஒருவர் மட்டும் அமைதியாகவே இருந்தார். என்ன நினைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் என்று என்னால் யூகிக்க முடியவில்லை.

அவர் வேறு யாரும் இல்லை மேடையில் அமர்ந்திருந்த மாநகராட்சி ஆணையர் தான்.

ஒவ்வொரு கூட்டத்தின் போதும் கூச்சல் குழப்பத்தை 2 மணிநேரம் வேடிக்கை பார்ப்பது தான் இவரது பணி. (வேறு என்ன செய்ய முடியும் குறுக்க பூந்து சண்டையை தடுக்கவா முடியும்).

தனித்து போட்டியிட்டால் கட்சிகள் பலம் என்ன? கருத்துகணிப்பு முடிவுகள்

அ.தி.மு.க 110
தி.மு.க 70
சுயேட்சைகள் 30
பா.ம.க 6
ம.தி.மு.க 4
ம.கம்யூனிசுட்டு 4
கொ.மு.க 3
தே.மு.தி.க 3
இ.கம்யூனிசுட்டு 2
காங்கிரசு 1
பாரதிய சனதா 1
ச.ம.க (சரத்குமார்) 1
இதரம் 1

இந்த கணக்கீடு பொதுமக்கள், வாக்காளர்களிடம் நேரடியாக எடுக்கப்பட்டது அல்ல. தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிக்கையாளர்கள், அரசியல் ஆர்வலர்கள் இவர்களின் கருத்துக்கணிப்பு. கட்சிவாக்காளர்களின் நிலை, மற்றும் தற்போதைய அரசியல் அலை இவற்றை கருத்தில்கொண்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.

இது கட்சிகளின் வாக்கு சதவீதம் அல்ல. தனித்து போட்டியிட்டால் ஒவ்வொரு கட்சிக்கும் வாக்குகள் பிரிந்து செல்லும் அப்போது அதிக வாக்குகள் பெரும் நிலையை பொருத்து கட்சிகளின் வெற்றி கணக்கிட பட்டுள்ளது.

கட்சிகள் நிறுத்தும் வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கை பொருத்தும் வெற்றிகள் அமையும். அதே போல தேர்தல் நேரத்தில் நிலவும் (அனுதாப அலை அல்லது ஏதொ ஒரு அலை) பொருத்தும் கணக்கீடு வேறுபடும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு பிரபலங்கள், உள்ளூர் பிரபலங்கள் சுயேட்சை வேட்பாளர்களாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளனர்.

அதெல்லாம் இருக்கட்டும் தனித்து போட்டியிட எந்த பெரிய கட்சிக்கு தைரியம் உள்ளது?

கட்சிகள் தனித்து தான் போட்டியிட வேண்டும் என்ற சட்டம் கொண்டுவந்தால் ஒருவேளை கூட்டுக்கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வரலாம்.

Nov 29, 2010

பெண்போகத்தில் குளிர்காயும் பத்திரிக்கைகள்

விசயகுமார் - மகள் வனிதா இவர்கள் பிரச்சனையில் ஒரு பத்திரிக்கை குளிர்காய்கிறது.
சமயம் பார்த்து காத்திருந்து சகட்டுமேனிக்கு சகதியை தூற்றி வீசுகிறது.

அரசியல், சினிமா, விளையாட்டு இந்த மூன்றிலும் வாசகர்களின் நாட்டம் அதிகம். இந்த துறைகளில் உள்ளவர்களின் பொதுவாழ்க்கையையும் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்களையும் தெரிந்துகொள்வதில் வாசகர்களிடம் ஆர்வம் உள்ளது என்பது உண்மை.

அதே நேரத்தில் விளம்பரத்துக்காக பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது அருவறுப்பானதாகவே தெரிகிறது.

அலைகற்றை ஊழலால் இந்தியாவில் உள்ள பொதுசனம் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால் ராசாவின் தனிப்பட வாழ்க்கையால் பொதுசனம் பாதிக்கப்பட்டது என்று சொல்வது அபத்தமே.

அதே போல தான்.

நடிகைகளின் அந்தரங்களை வெளியிடுவதால் எந்த பொதுசனத்துக்கும் ஒரு பருக்கை சோறுகிடைக்கப்போவதில்லை. ஆனால் வெளியிடும் பத்திரிக்கை முதலாளி குறைந்தது பத்து வட்டல் சோறாவது திண்ணலாம்.

விசயகுமார் - வனிதா குடும்பத்தில் நடக்கும் சண்டை இந்தியாவில் வேறு எந்த குடும்பத்திலும் நடக்காத சண்டை அல்ல. அது பொதுநோக்கு சண்டையும் அல்ல. அப்படி இருக்க இந்த பத்திரிக்கைக்கு மட்டும் அதில் என்ன அலாதி பிரியம்.

தங்கள் குடும்பத்தில் சொத்து சண்டை இல்லை என்று கூறும் மனசாட்சி உள்ளவர்கள் விசயகுமார் - வனிதா சண்டையை விமர்சித்து எழுதட்டும்.

பின்குறிப்பு: தன் வீட்டு சொத்து சண்டையில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒருவர் அதை மீடியா வெளிச்சத்துக்கு கொண்டுவரவேண்டும் என்று 10 ஆண்டுகளாக போராடி வருகிறார். ஒரு மீடியாவும் கண்டுகொள்ளவில்லை. அதே அவர் பிரச்சனையில் எதாவது ஒரு பெண் சம்மந்தப்பட்டிருக்கட்டும், பல பத்திரிக்கைகளின் கிளை அலுவலகமே அவர் வீட்டில் இருக்கும். 

கோவை குழந்தைகள் கொலை வழக்கு : திடீர் திருப்பம்

கோவை குழந்தைகள் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் எதிர்பார்த்ததை போல மனோகர் அப்ரூவராக மாறியுள்ளார்.

கோவையில் குழந்தைகள் இருவர் கடத்தி கால்வாயில் தள்ளி கொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக டிரைவர்கள் மோகன்ராசு, மனோகரன் கைது செய்யப்பட்டனர். போலீசு என் கவுண்டரில் மோகன்ராசு சுட்டுக் கொல்லப்பட்டான்.

குழந்தைகள் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய விசாரணை கைதி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இரண்டாம் விசாரணை கைதியை வைத்து மேற்கொண்டு விசாரணைகள் நடந்தது.

காவல் உதவி ஆணையர் குமாரசாமியை தனி அதிகாரியாக கொண்ட தனிப்படை குற்றப்பத்திரிக்கை தயாரித்துள்ளது.

குழந்தைகளின் பாட்டி, மனோகரனின் நண்பர்கள், மோகன்ராசுவின் நண்பர்கள் உள்பட 60 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மனோகரன் தற்போது அப்ரூவராக மாறியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையிலேயே குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குழந்தைகள் கடத்தப்பட்டது முதல் கொலை செய்யப்பட்டது வரையிலான அனைத்து சம்பவங்களையும் ஒப்புதல் வாக்குமூலமாக தெரிவித்துள்ளான் மனோகரன்.

இன்னும் சில நாட்களில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.

ஆரம்பத்தில் மோகன்ராசு கடத்தினான், மனோகர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கொன்றான் என போலீசு தரப்பு கூறியது. மோகன்ராசு சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மனோகர் அப்ரூவராக மாறியுள்ளது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மனோகர் தரப்பு வாக்குமூலம் என்ன என்பதை பொருத்து குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்படும். தான் செய்யவில்லை, மோகன்ராசு தான் எல்லாம் செய்தான் என மனோகர் அப்ரூவராக மாறியிருந்தால் அதை மறுக்க மோகன்ராசுவின் ஆவி நிதிமன்றத்துக்கு வரப்போவதில்லை.

பொருத்திருந்து பார்ப்போம்.

பின்குறிப்பு : என்கவுன்டர் வழக்கில் அண்ணாதுரை அப்ரூவராவது எப்போது?

தி.மு.க பக்கம் போகுது பா.ம.க, கம்யூனிசுட்டு

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் தான் இருக்கிறது. அதற்குள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் இப்படி பல கட்டங்களை கட்சிகள் சந்திக்க வேண்டி உள்ளது.

முன்னதாக இன்னும் 2 மாதத்தில் தமிழக சட்டமேலவை தேர்தல் வேற இருக்கு. அதற்குள் கூட்டணியை முடிவுசெய்யவெண்டிய கட்டாயத்தில் கட்சிகள் உள்ளன.

ஏற்கனவே அதிமுக கூட்டணியில் தேமுதிக, காங்கிரசு கட்சிகள் பேச்சுவார்த்தையை முடித்து விட்டன. தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக, கம்யூனிசுட்டுகளுக்கு கூட்டணியில் இடம் இல்லாத நிலையில் இருதலைகொள்ளியாக தவித்து வருகின்றன.

காங்கிரசு போய்விட்டால் திமுகவிடம் இருக்கும் ஒரே கூட்டணி கட்சி விடுதலை சிறுத்தைகள் மட்டும் தான். கூட்டணி தான் வெற்றியை நிர்ணயிக்கும் என்பதை செயலலிதாவும், கருணாநிதியும் உறுதியாக நம்புகின்றனர்.

திமுக கூட்டணியில் கம்யூனிசுட்டுகளை இழுக்கும் முயற்சியை கருணாநிதி தொடங்க அது எளிதிலேயே முடிந்தது.

காங்கிரசு போனால் அடுத்த நிமிடம் திமுக கூட்டணியில் இரு இடதுசாரிகட்சிகளும் இருக்கும் என்ற உறுதியை உயர்மட்ட தலைவர்களே கொடுத்து விட்டனர்.

அதே போல பாமகவும் திமுக பக்கம் சாய்கிறது.

அதிமுக கூட்டணியில் போதிய இடம் கிடைக்காது என்பதை முன்னரே யூகித்துக்கொண்டனர். ஆனாலும் விசயகாந்த், காங்கிரசு, பாமக, கொமுக, இதரம் உட்பட கட்சிகளை இணைத்து மூன்றாம் அணி உருவாக்கும் முயற்சியை பாமக இன்னும் கைவிடவில்லை. இது நடக்காத பட்சத்தில் சேர்ந்த உதிரி கட்சிகளோடு திமுகவிடம் சரணடைவது என்பது என பாமக முடிவு செய்துள்ளது.

காலங்கள் செல்ல கோலங்களின் மாற்றம் வேகமாகவே இருக்கும்.

Nov 28, 2010

அலைகற்றை ஊழல் : தயாநிதிமாறனின் பங்கு என்ன?

இந்தியாவையே கலக்கி வரும் அலைக்கற்றை ஊழல் பிரச்சனையில் நாளும் புதுப்புதுதகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

குறைந்தபட்சம் 1.75 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அளவிலான தொகைக்கு எவ்வளவு லஞ்சம் கைமாறி இருக்கும்? இதை யோசிக்கும் போது இந்தியர்களை மட்டுமல்ல உலக மக்களையே கண்ணை கட்ட செய்கிறது.
அலைகற்றை ஊழல் என்பது ராசா என்ற ஒற்றை மனிதன் செய்திருக்க முடியாது என்பது தெளிவாக தெரிகிறது.

எனவே அலைகற்றை ஒதுக்கீடு மோசடியின் ஆரம்ப மூலத்தை கண்டறியும் முயற்சியில் பல பத்திரிக்கைகள் இறங்கியுள்ளன.

முதல் கட்டமாக தயாநிதிமாறன் வரை இதற்கான ஆழம் சென்று நிற்கிறது.

 2006 பிப்ரவரி 25 தேதி தயாநிதிமாறன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதிய கடிதம் முக்கிய சாட்சியாக எடுக்கப்பட்டுள்ளது.

அலைகற்றை ஒதுக்கீட்டு தொகை மற்றும் நெறிமுறைகளை சம்மந்தப்பட்ட துறை அமைச்சரே முடிவு செய்துகொள்ளும் உரிமையை கோரியுள்ளார் தயாநிதிமாறன்.

அப்போது தி.மு.கவின் முழு தயவில் தான் காங்கிரசு அரசு இருந்தது. இதனால் தயாநிதிமாறனின் கோரிக்கையை நிராகிரிக்க முடியாத நிலையில் வழக்கம் போல பிரதமர் மன்மோகன்சிங் ரப்பர் முத்திரையானார்.

அடுத்து என்ன திட்டம் போட்டுவைத்திருந்தாரோ தயாநிதிமாறன், அதற்குள் பதவி பறிபோனது. தயாநிதிமாறன் போட்ட அடித்தளத்திற்கு ராசா பதவி ஏற்ற முதல் நாளே கைமேல் பலன்(பணம்) கிடைத்துள்ளது.

அந்த தொகை உடனடியாக ராசா தன் தலைவருக்கு குருதட்சணையாக்கிருக்கிறார். பின்னர் தான் 8 அடி 16 அடி 32 அடி என தாண்டி பல லட்சம் கோடி வரை தாண்டியுள்ளார். இது போன்ற பல அதிர்ச்சி தகவல்களும் ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருக்கின்றன.

கூட்டி கழித்து பார்த்தால் இதற்கு அடித்தளம் அமைத்தவராக இப்போதைக்கு தயாநிதிமாறன் உறுதிசெய்யப்பட்டிருக்கிறார். அடுத்து இன்னும் ஆழமாக தோண்டப்படுகிறது.

அலைகற்றை ஒதுக்கீட்டில் நாட்டுக்கு இழப்பு 1.76 லட்சம் கோடி உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த இழப்பை ஏற்படுத்த ராசாவுக்கு எத்தனை லட்சம் கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்பதை பொருத்து ராசாவின் எதிர்காலம் அமைந்திருக்கிறது. இதில் தாயிநிதிமாறனும் கட்டாயமாக விசாரணை கூண்டில் ஏறவேண்டிய நாட்கள் நெருங்குகிறது.

அதிமுக-காங்கிரசு-தேமுதிக கூட்டணி : தொகுதி உடன்பாட்டில் சிக்கல்

அதிமுக கூட்டணியில் தேமுதிக காங்கிரசு கட்சிகள் இணைவது என ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டிருந்தது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் சனவரியில் அனைத்து கட்சிகளும் வெளியிட உள்ளன.

இந்நிலையில் 236 தொகுதிகளில் அதிமுக 136,  தேமுதிக 50, காங்கிரசு 50 என தொகுதி ஒதுக்கீட்டு உடன்பாட்டில் தான் இழுபறி இருந்துவருகிறது.

 50 ஆண்டு கால கட்சிக்கும் 5 ஆண்டு கால கட்சிக்கும் ஒரே அளவு தொகுதிகள் ஒதுக்கவதை காங்கிரசார் ஏற்றுக்கொள்ளவில்லை. தங்களுக்கு 60 ம் தேமுதிகவுக்கு 40 ஒதுக்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருந்து வருகிறது.

திமுக கூட்டணியில் 70 தொகுதிகள் கிடைத்தால் திமுக கூட்டணியிலேயே தொடர்வது, ஆட்சியில் பங்கு என்ற கணக்கீட்டில் உறுதியாக இருக்கிறது காங்கிரசு.

தமிழகத்தில் கூட்டணி இன்றி தனித்து போட்டியிட்டு பலத்தை கணக்கிட்டு பார்க்கும் சோதனை, அல்லது காங்கிரசு தலைமையில் கூட்டணி இந்த இரண்டு விடயங்களை ராகுல்காந்தி வலியுறுத்தி வருகிறார்.

 தனித்து போட்டியிட்டால் காங்கிரசு 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெரும் என்பதை தமிழக காங்கிரசின் அனைத்து தரப்பு தலைவர்களும் ஒருமனதாக விளக்கி விட்டனர். 


 தனித்து போட்டி என்று அறிவித்தால் கட்சியே உடைந்துவிடும், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக காங்கிரசே முகவரி இல்லாமல் போகிவிடும் என்பதையும் உளவுதுறை மூலம் ராகுலுக்கு புரியவைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி உள்ளனர் கட்சியினர்.

50 தொகுதிகள் கிடத்தாலும், அதிமுக கூட்டணியில் இடம்பிடித்து விசயகாந்த மூலம் அதிமுக ஆட்சியில் பங்கு கேட்கும் கணக்கை தான் காங்கிரசார் நம்புகின்றனர்.

அதிமுக 136 தொகுதியில் போட்டியிட்டால் நிச்சயமாக ஆட்சிக்கான பெரும்பான்மை கிடைக்காது. அதே நேரத்தில் சிறுபான்மை அரசை செயலலிதா விரும்ப மாட்டார். கூட்டணி ஆட்சிக்கு அதுவே சாதகம் என்பது காங்கிரசு,மற்றும் விசயகாந்தின் கணிப்பு.

ஆனால் கருணாநிதியை எதிர்த்து 20 வருடங்களாக அரசியல் நடத்திவரும் செயலலிதாவின் கணக்கு காங்கிரசையும், விசயகாந்தையும் தலைசுற்ற வைக்க இருக்கிறது.

செயலலிதா , கருணாநிதி யார் அதிக சொத்து சேர்த்தார்கள்

3 கோடி ரூபாயுடன் முதலமைச்சர் வாழ்க்கையை துவங்கிய செயலலிதாவுக்கு அப்படி 68 கோடி ரூபாய் சொத்து வந்தது என கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.


அதே நேரத்தில் திருக்குவளையில் இருந்து திருட்டு ரயில் ஏறிவந்தவருக்கு இன்று பல ஆயரம் கோடி சொத்து வந்தது எப்படி என்று ஏற்கனவே செயலலிதா கேட்டுவைத்துள்ளார்.



 ஆக மொத்தம் யார் அதிகமான சொத்து சேர்த்தது என்று பொதுமக்களே எளிதில் எடைபோட்டுக்கொள்ளலாம்.

Nov 27, 2010

ராசா அலைகற்றை ஊழல்: கருணாநிதி ஒப்புதல்

அலைகற்றை விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாகவே இருக்கட்டும். ஆனால் தற்போது ராசா ராசினாமா செய்துவிட்டர். பின்னர் ஏன் மீண்டும் நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரணை கேட்கிறீர்கள் என்று படுவெகுளிதனமாக கேட்டுள்ளார் கருணாநிதி.

நேற்று இரவு (தற்போது) வேலூரில் நடக்கும் கூட்டத்தில் தான் கருணாநிதி இப்படி பேசினார்.

முந்திரா ஊழலில் கிருசுணாச்சாரியார் பதவி விலகியதும் பின்னர் எந்த விசாரனையும் நடைபெறவில்லை. அப்படி இருக்கும்போது ராசாவை மட்டும் ஏன் விசாரிக்க வேண்டும் என்று கருணாநிதி கேள்வி எழுப்பினர்.

இந்த கேள்விக்கு அவரே தனது வழக்கமான சாதிசாயம்பூசிய பதிலையும் கூறினார்.

 கிருணாச்சாரியர் ஆரியர், ராசா தலித் அதனால் தான் இப்போது விசாரணைக்காக கூச்சலிடுகிறார்கள் என்பது தான் கருணாநிதியின் பதில்.

அப்புறம் கூட்டணி மாற்றங்கள் குறித்தும் சிலபல சுவாரசியங்களை பேசினார். அதனை கொஞ்சம் ஆய்வு செய்து
அடுத்த பதிவில் தருகிறேன்.

நன்றி.

இந்த பெண் குழந்தைகளுக்கு உடனடி தேவை செருப்பு


இன்றும் பல அரசு பள்ளி குழந்தைகள் காலில் செருப்பு இல்லாமல் தான் பள்ளிக்கு வருகின்றனர்.

அலைகற்றை ஒதுக்கீட்டில் 1.75 லட்சம் கோடி ஊழல் செய்த அரசியல்வாதிகளுக்கு இந்த ஏழைகளின் வலி தெரியாது.

 ஒரு கோப்பையை விட இந்த பிஞ்சுகளுக்கு உடனடி தேவை செருப்பு.

ஒரு அரசு பள்ளிக்கு சென்று ஒரு நாள் முழுவதும் அங்கு நடக்கும் வறுமையின் கொடுமையை பார்க்க சொல்லுங்கள். அப்புறம் ஆட்சிபீடத்தில் அமர்ந்து ஊர் பணத்தை மனசாட்சி இருந்தால் திண்ணட்டும். அப்படி அவர்கள் திண்பது எதுவென்று அவர்களுக்கே தெரியட்டும்.

சமுதாய அவலங்களை பார்க்கும்போது மனம் கொதிக்கிறது. வேறு என்ன செய்ய வலைபதிவு தான் ஒரே வடிகால். அதுதான் கொட்டி தீர்க்கிறோம்.

தமிழ் வலைபதிவர் சங்கம் : வாருங்கள் ஒன்றிணைவோம்

 நான்கு பேர் ஒன்று சேர்ந்தால் அரட்டை அடிப்பது. இது தான் வழக்கம், ஆனால் வலைபதிவர்கள் வெறும் அரட்டை அடிக்கும் கும்பலாக இருப்பதில் அர்த்தமில்லை. சமுதாய அக்கறையுடன் ஏதாவது ஆக்கபூர்வமாக செய்யவேண்டும் என்பது பல பதிவர்களின் எண்ணம்.

வலைபதிவர்கள் முதற்கட்டமாக என்ன செய்யலாம் எனது ஆலோசனைகள்

முதலில் தமிழ் வலைப்பதிவர்களின் எண்ணிக்கையை கூட்ட வேண்டும். 

இன்று தமிழ்வலைபதிவர்களின் எண்ணிக்கை மிககுறைவாகவே உள்ளது. பல நல்ல படைப்பாளிகளுக்கு வலைப்பூ இலவச சேவை இன்னும் அறிமுகமாகவில்லை. தமிழக கல்லூரிகளில் 98%பேருக்கும் பள்ளிகளில் 99% பேருக்கும் வலைபூ பற்றி தெரியாது.

இன்று எல்லா பள்ளி கல்லூரிகளிலும் கணிணி உள்ளது. வரும் காலங்களில் ஒவ்வொரு வீட்டிலும் கணிணி இருக்கும். ஏன் அடுத்த தேர்தலில் கணிணி தான் முக்கிய இலவச பொருளாக கூட அறிவிக்கப்படலாம்.

பள்ளிக்கு குறைந்தது ஒரு வலைப்பூவை ஏற்படுத்துவோம். மேட்டுபாளையம் நகரவை மகளிர் மேல்நிலைபள்ளியின் ரோசா பூந்தோட்டம் போல, இன்னும் உலகெங்கும் உள்ள தமிழ் பள்ளிகளின் மல்லிகை, செம்பருத்தி, கனகாம்பரம், செங்காந்தழ், என பல பூந்தோட்டங்களை வரவேற்போம்.

ஒவ்வொரு பள்ளியிலும் வலைபூவை அறிமுகப்படுத்தலாம். தங்கள் படைப்புகளை வெளிப்படுத்த முடியாமல் தட்டுதடுமாறும் சின்னஞ்சிறு கொடிகளுக்கு முல்லைக்கு தேர்கொடுத்த பாரி போல ஒரு துணைமரமாய் நிற்போம்.

இது போன்ற ஏராளமான நற்பணிகளை வலைபதிவர்களால் செய்ய முடியும்

அதற்கு நாம் செய்யவேண்டிது ஒன்றிணைவது.

எப்படி

1. முதலில் நாம் இணையத்தில் (வலைபூவில்) ஒன்றிணைய வேண்டும். இதற்கான தனி நெறிமுறைகள் வகுக்க வேண்டும். அதை செயல்படுத்த தனி ஒரு பொது வலைபூ ஏற்படுத்த வேண்டும். உறுப்பினராகும் பதிவர்களுக்கு அனைவருக்கும் இது பொதுவானதாக இருக்க வேண்டும். அது தான் நமது முதல் தலைமை அலுவலகம்

2. அரசியல், மதம், சாதி, நாடு இந்த வேறுபாடுகள் அந்த சங்கமத்தில் இருக்ககூடாது

3. மாதம் ஒரு முறையாவது ஆலோசனை கூட்டம் (பதிவு) நடைபெற வேண்டும்

4. சனநாயக நாட்டில் தனிமனித போராட்டத்திற்கு விலை இல்லை. குழுவாக சனமாக போராடினால் அதற்கு விலையே தனி.

5. இந்த சங்கமம் சமுதாய அக்கறையோடு மட்டும் அல்லாமல் இதில் உறுப்பினராகும் வலைபதிவர்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பை தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

6. சட்ட ஆலோசகர்கள், பத்திரிக்கையாளர்கள், மருத்துவ நிபுணர்கள், ஆட்சிபணி அதிகாரிகள், அறிவியலாளர்கள், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெண்கள், இப்படி அனைத்து சக்தியும் கொண்ட சர்வ வல்லமையுள்ள சங்கமமாக வலைபதிவு சங்கமம் உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

7. ஆத்மார்த்தமாக இணைந்து ஆக்கபூர்வமாக செயல்பட்டால் வலைபதிவர்கள் சனநாயகத்தை தாங்கும் நான்காம் தூணாக மாறமுடியும் என்பது எனது நம்பிக்கை.

யோசியுங்கள் ஆலோசனைகளை பகிருங்கள், நானும் எனக்கு தெரிந்த பிரபல பதிவர்களுக்கு தனிப்பட்ட முறையிலும் கடிதம் எழுதுகிறேன். நீங்களும் ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்குங்கள். விரைவில் ஒன்றிணைவோம்.

இதுகுறித்த உங்களது ஆலோசனைகளை பகிருங்கள்...

Nov 26, 2010

உங்கள் உரைக்காக காத்திருக்கிறோம்...

                                உங்கள் உரைக்காக காத்திருக்கிறோம்...

Nov 25, 2010

கோவை குழந்தைகள் கொலை : துணை முதல்வர் நேரில் பெற்றோருக்கு ஆறுதல் (படம்)

பிரபல வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

பதிவர் திரு. தொப்பிதொப்பி அவர்களின் தமிழ் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் என்ற பதிவுக்கு செலுத்தும் தலைவணக்கம் தான் இந்த பதிவு:

வலைபதிவர்கள் சமுதாய அக்கறையுடன் ஆக்கப்பூர்வமாக எதாவது செய்யவேண்டும் என்பது தான் அந்த பதிவின் சாராம்சம்

நான் கூட பலமுறை யோசித்திருக்கிறேன். சமுதாய அக்கறையுடைய நல்ல பதிவுக்கு நம்மால் பின்னூட்டம் என்ற ஒரு சிறு ஊக்குவிப்பு கூட கொடுக்கமுடிவதில்லையே ஏன்?

உன் எழுத்துக்களை நீ மட்டும் படித்தால் அது உனது வாழ்க்கை குறிப்பேடு. உன் எழுத்துக்களை நான்குபேர் படிக்க நீ படைத்தாலே நீ ஒரு சமுதாய பொறுப்பாளன் ஆகிறார். உன் கருத்துக்களை நான்கு பேர் படிக்கவேண்டும் என்றால் உனக்கு முதலில் வரவேண்டிய தகுதி சமுதாய பொறுப்பு.

 இது தான் இதழியல் கல்வியில் எங்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட பாடம். இது ஏதோ அச்சுத்துறைக்கு மட்டும் வகுக்கப்பட்ட இலக்கணம் அல்ல. எழுதும், கருத்தை பகிரும் அத்தனை எழுத்தாளர்களுக்கும் உள்ள இலக்கணம் தான்.

வலைபதிவுகளில் 2 விடயங்களுக்காக நான் பெருமை படுகிறேன்.

1 ஈழத்தமிழர் விவகாரத்தில் அவர்கள் காட்டிய உலகளவிய இணைப்பு, 


2. தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களை சேர்க்கும் முயற்ச்சியை தடுப்பதில் காட்டும் அக்கறை. 

இன்றும் பல கல்லூரிகளில் உள்ள தமிழ்துறைக்கு கூட தமிழ் ஒருங்குறி - கிரந்தம் குறித்த எந்த விவரங்களும் தெரியவில்லை. பல தமிழ்ஆர்வலர்களுக்கு இந்த விடயம் சென்று சேரவில்லை.

 தினசரி பல பத்திரிக்கைகளை படிக்கும் ஒரு பத்திரிக்கையாளனான எனக்கே வலைபூக்கள் வழியாக தான் தமிழ் ஒருங்குறியில் கிரத்தம் சேர்க்கும் முயற்சிகள் தெரியவந்தது. அதன் பின்னர் தான் பத்திரிக்கைகளில் எழுதினோம். ஆனால் அதை எத்தனை பத்திரிக்கைகள் வெளியிட்டன. இணைய தொடர்ப்பு இல்லாத எத்தனை தமிழ்ஆர்வலர்களை இந்த விடயம் சென்று சேர்ந்தது?

இன்று வெகுசன ஊடகங்கள் வியாபாரத்தின் பிடியில் சிக்கி விட்டன. இவற்றிற்கு சில வியாபார கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த வட்டத்தை தாண்டி வெளியில் வந்தால் அவர்கள் அந்த தொழிலில் தோற்றுப்போவார்கள். இது தான் நிதர்சன உண்மை.

இதற்கு மிகச்சிறந்த மாற்றாக நான் வலைப்பதிவுகளை காண்கிறேன்.

என்னால் பத்திரிக்கை துறையில் வெளிப்படுத்த முடியாத எண்ணங்களை வலைப்பூவில் வெளிப்படுத்த முடிகிறது. அந்த ஒரு காரணம் போதும் நான் வலைப்பதிவர்களுக்கு தலைவணக்கம் செலுத்த.
ஆனால் அதையும் தான்டி, வலைப்பதிவர்கள் சமுதாய அக்கறையுள்ளவர்களாக மாறினால் அதைவிட மிகச்சிறந்த ஆக்க சக்தி வேறு இல்லை என்றே தோன்றுகிறது.

கையெழுத்து பிரதியை எழுதி தங்களுக்குள் பகிர்ந்துகொண்ட ரயில் நண்பர்கள் ஒன்றினைந்து சமுதாயத்திற்கு சேவை செய்திருக்கிறார்கள்.

அப்படி இருக்கும்போது வலைபதிவர்களால் சமுதாய அக்கறையுடன் செயல்பட முடியாத என்ன?

எல்லாவற்றையும் விட நான் தமிழ்பதிவுலகுக்கு வைக்கும் முதல் வேண்டுகோள்

புதிய வலைப்பதிவர்களை ஊக்குவிக்கவேண்டும். அவர்களின் கன்னி எழுத்துக்களுக்கு நாம் ஒரு பின்னூட்டமாவது எழுதி கரம்பிடித்து தூக்கிவிடவேண்டும். அதுவும் கன்னி வலைப்பதிவுகளுக்கு பிரபல வலைபதிவர்களின் பின்னூட்டம் தரும் ஊக்கசக்திக்கு அளவே கிடையாது. நான் அதை உணர்ந்திருக்கிறேன்.

வலைபதிவர்கள் ஆக்கப்பூர்வமாக, ஆத்மார்ததமாக ஒரு பணியை செய்யலாம் அதுகுறித்து அடுத்த பதிவில் எழுதுகிறேன். ( தற்போது அலுவலக பணி நெருக்கடி. மன்னிக்கவும்.)


தமிழ் வலைபதிவர் சங்கம்

Nov 24, 2010

அ.தி.மு.க - விசயகாந்த் கூட்டணி உறுதியானது

இன்று நடக்க உள்ள போக்குவரத்து தொழில்சங்க பொதுதேர்தலில் அதிமுக தொழில்சங்கத்துக்கு அதரவு தெரிவிக்க வேண்டும் என்று தே.மு.தி.க மாவட்ட நிர்வாகிகளுக்கு விசயகாந்த் அறிவுறுத்தி உள்ளார். தே.மு.தி.க., தொழிற்சங்க தலைவர் வாயிலாக, இது தொடர்பான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி பேச்சுவார்த்தை மூலம் உறுதியாகி இருந்தது. ஆனால் அதை இரு கட்சி தலைமையிடமும் தேவைப்படும் நேரத்தில் வெளியிட்டால் போதும், இப்போது இதுகுறித்து எதுவும் பேசவேண்டாம் என்ற ஒப்பந்தம் செய்திருந்தன.

 காங்கிரசு மற்றும் மதிமுக இதர கட்சிகளின் நிலைபாடுகளுக்கு பின்னர் தே.மு.தி.க கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டிருந்தது.

வரும் சனவரி மாதம் சேலத்தில் தே.மு.தி.க மாநிலமாநாடு நடக்க இருக்கிறது. அன்று முறைபடி அ.தி.மு.கவுடன் கூட்டணி குறித்து விசயகாந்த் அறிவிக்க உள்ளார். அதை தொடர்ந்து செயலலிதாவும் கூட்டணிக்கு விசகாந்துக்கு வரவேற்பு அறிக்கை வெளியிடுவது என பேசிமுடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று நடக்கம் போக்குவரத்து தொழில்சங்க தேர்தலால் கூட்டணியில் குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே அ.தி.மு.கவுக்கு விசயகாந்த ஆதரவு தெரிவித்துள்ளார்.

Nov 23, 2010

புரிஞ்சா சிரிப்பு தானா வரும்

புரிஞ்சா சிரிப்பு தானா வரும்

சித்தூர் முருகேசனும் - சீதை சித்தப்பாக்களும்

ஒரு கனவு கண்டால், தினம் முயன்றால் ஒருநாள் நிசமாகும்.

இந்த வரிகளுக்கான அர்த்தம் சரியா தவறா என்பதற்கு உதாரணமாக ஒரு பதிவர் வலம்வந்துகொண்டிருக்கிறார்.

அப்துல்கலாம் போல திட்டம் தீட்டுவது எல்லாம் எளிது தான். அறைஎடுத்து யோசித்தால் உலகுக்கே நிதிநிலை அறிக்கை தயாரித்துவிடலாம். ஆனால் அதை செயல்படுத்த என்னென்ன முயற்சிகள் எடுக்கவேண்டும் என்பதை இவரிடம் தெரிந்துகொள்ளலாம்.

 ஆயிரம் கதவுகளை தட்ட வேண்டும் ஒன்றாவது திறக்கும் என்ற நம்பிக்கையில். இந்திய அரசியல்வாதிகளிகளின் கதவை 24 வருடங்களாக தட்டி வரும் இந்த போரளிக்கு எப்போது கதவுதிறக்குமோ?

1986ல் ஆப்பரேசன் இந்தியா 2000 என்ற திட்டத்தை தீட்டினார் இந்த இளைஞர்.

1. பிரதமரை மக்களே நேரடியாக தேர்ந்தெடுத்தல்


2. நாட்டில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை கொண்ட சிறப்பு ராணுவம் ஏற்படுத்துதல்


3. சிறப்பு ராணுவத்தை கொண்டு இந்திய நதிகளை இணைத்தல்


4. கூட்டுரவு பண்ணை விவசாய முறையை அமல்படுத்துதல்


5. தற்போது உள்ள கரண்சியை ரத்து செய்து, பழைய கரண்சி உள்ளவர்கள் அது சட்டபடியான வருவாயே என நிரூபித்த பின்னர் புதிய கரண்சி வழங்குதல்

இது தான் அந்த இளைஞரின் கனவு.

இதில் முக்கியமான இரண்டு விடயங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.

ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது எல்லைகள் மட்டுமல்ல, உள்நாட்டு உற்பத்தி, பொருளாத வளர்ச்சி, வருமையின்மை இவைகள் தான் ஒரு நாட்டின் உண்மையான பாதுகாப்பு.


அதே போல ராணுவம் என்பது ஆயுத பயிற்சி பெற்று எல்லையில் போர்புரிவதற்கா மட்டுமல்ல, உள்நாட்டு பொருளாதாரத்தை காப்பதற்கும் ஒரு ராணுவம் தேவை.

இந்த பாதுகாப்பை வழங்க ஏன் சிறப்பு ராணுவத்தை ஏற்படுத்த கூடாது? இந்த பெருமை மிகு ராணுவத்தில் சேர எத்தனை எத்தனை இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள்.

என் மகன் நாட்டுக்காக சாகிறான் என்பதை விட, நாட்டுக்காக உழைக்கிறான் என்பதில் எவ்வளவு பெருமை இருக்கிறது?

நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு இதை விட வேறு என்ன தீர்வு இருக்கப்போகிறது?

சாராயம் விற்கும் வேலையை இளைஞர்களுக்கு அரசுபணியாக தரும்போது, விவசாயத்தை ஏன் அரசுபணியாக தரக்கூடாது? 

சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தால் வரட்சி என்பது இருக்குமா?
கிராமங்கள் தோறும் கூட்டுரவு பண்ணைகள் மூலம் விவசயாம் செய்வதால் வருமையும், பட்டினி சாவுகளும் இருக்குமா?

அரசுபணி என்றால் சாராயம் விற்கவும் தயாராக இருக்கும் இளைஞர்கள் , உலகுக்கே சோறுபோடும் உழவுபணியை எவ்வளவு உணர்வுபூர்வமாக செய்வார்கள்! 

இதை ஏன் அரசியல்வாதிகள் யோசிக்க மறுக்கிறார்கள்?

இந்தியா 2020ல் வல்லரசு நாடகா வேண்டும் என்று முழங்கும் அரசியல்வாதிகளுக்கு இந்த சித்தூர் முருகேசின் சிந்தனை ஏன் கண்ணில்படவில்லை?

2 வருடங்களுக்கு முன்பு வரை அப்துல்கலாம் அப்துல்கலாம் என்று குதித்துகொண்டிருந்த அரசியல்வாதிகளும் இளைஞர்களும், அதிகாரிகளும், ஆசிரியர்களும் இப்போது எங்கே போனார்கள்?

நதிகளை இணைக்க தேவை வெறும் 1000 கோடி ரூபாய். இது இந்திய அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய தொகையாக இருந்தது. ஆனால் இன்று அலைகற்றை வரிசை ஒதுக்கீட்டில் இழந்தது ரூ.1.73 லட்சம் கோடி ?

தனது தாய்நாடு குறித்து ஒரு கனவு கண்டு, தினம் முயன்றால், ஒருநாள் நிசமாகும் என்ற நம்பிக்கையில் 24 வருடங்களாக சித்துர் முருகேசனின் முயற்சி தொடர்கிறது.

இந்திய குடியரசு தலைவர், சபாநாயகர், பிரதமர், எதிர்கட்சி தலைவர், ஆளும்கட்சி தலைவர், அமைச்சர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள், இந்தியா ஆட்சிபணி அதிகாரிகள், மாநில முதலமைச்சர், அரசியல்கட்சி தலைவர்கள், பத்திரிக்கைகள், நீதிமன்றம், காவல்துறை, உண்ணாவிரதம், நடைபயணம், தெருமுனை பிரச்சாரம், (இதுக்கமேல எதாவது போரட்டம் இருந்தால் சித்தூர் முருகேசனுக்கு தெரியப்படுத்துங்க)

ஒரு கதவு கூட திறக்கப்படவில்லை இளைஞர்கள் தான் பலம் என்ற இந்த இந்திய திருநாட்டில்.

தன் போராட்ட வரலாற்றை சித்தூர் முருகேசனே இங்கு விளக்கியிருக்கிறார். சக வலைப்பதிவரின் போராட்டதிற்கு நம்மால் முடிந்த ஊக்குவிப்பு ஒரு பின்னூட்டம். அதை வழங்கும் நல்ல மனசுகளுககு என் சிரம்தாழ் வணக்கங்கள்...

நன்றி.

Nov 22, 2010

நல்ல வலைபதிவுக்கு கிடைக்கும் உயரிய விருது : சோசபின்

செனற வாரம் கொஞ்சம் ஓய்வு கிடைத்தது. வலைப்பதிவுகளை பார்வையிட்டபோது சில வலைப்பதிவுகள் என்னை ஆழமாக யோசிக்க வைத்தன.

அந்த பதிவர்களுக்கு பதிவுலகின் உயரிய விருதை கொடுத்து பாராட்ட தோன்றியது. அந்த விருதை அறிவிக்கும் முன்னர் அப்படி என்ன பதிவின் சிறப்பு என்பதை பார்ப்போம்

முதல் பதிவு :

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கேரளத்து வாசனையுடன் எழுதும் சோசபின் கதைக்கிறேன் என்ற பெண் வலைபதிவர் அவர்.
 அவரது வலைப்பூவில் இரண்டு பதிவுகள் மிகமிக பாரட்டுக்கு உரியவைகள்

1. தமிழ் ஈழ வலைப்பதிவுகள் ஒரு ஆய்வு;
2. மனித உயிர்கொல்லி என்டோசல்ஃபான்.

முதல் பதிவில் ஈழ வலைப்பதிவுகள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளார்.

நான்காம் ஈழப்போரின் இறுதியில் உண்மை நிலையை பல முன்னனி ஊடகங்கள் பயந்தும் பணத்துக்கு அடிமையாகிவிட்டன. இந்த நேரத்தில் உண்மை செய்திகளை கொண்டுவருவதில் வலைப்பதிவர்கள் ஆக்கப்பூர்வமான ஒரு பங்கை அளித்தனர். என்பதை கட்டுரையில் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இந்த கட்டுரை மூலம் வலைப்பதிவுகளுக்கு மிகப்பெரிய கவுரவத்தை கொடுத்துள்ளார் சோசபின்.

இன்று பல ஊடகங்களும் அரசியல் மற்றும் விளம்பரம்(வியாபாரம்) பிடியியில் சிக்கிவிட்டன. இருட்டடிப்பு மற்றும் கருத்துதிணிப்பு இல்லாத செய்திகளை பார்ப்பது அரிதாகிவிட்டது.

 இந்த நிலையில் வலைப்பதிவுகளில் வரும் பின்னூட்ட விவாதங்களில் செய்திகளின் உண்மை தன்மையை கொஞ்சமாவது புரிந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கையை துளிர்க்க வைத்துள்ளது சோசபின் பதிவுகள்.

வலைப்பதிவர்களுக்கு நல்ல கவுரவத்தை கொடுத்த சோசபினுக்கு வலைப்பதிவர்கள் என்ன செய்யபோகிறீர்கள்?

ஒரு சிறந்த வலைப்பதிவுக்கு கிடைக்கும் 
மிகப்பெரிய விருது - பின்னூட்டம்.
 நல்ல பதிவுகளுக்கு 1 நிமிடம் ஒதுக்கி பின்னூட்ட விருதை நம்மால் கொடுக்க முடியும் என நினைக்கிறேன். இதை கூட செய்யாவிட்டால் நாம் வலைப்பதிவர் என்பதற்கு அர்த்தமே இல்லை.

மனித உயிர்கொல்லி என்டோசல்ஃபான் குறித்த பதிவில், பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தை இந்தியாவில் சோதனையிட்டதன் விளைவை படங்களுடன் விளக்கியுள்ளார். சமுதாய அக்கறையுடன் எழுதப்பட்ட இந்தபதிவை தமிழ்மலர் கவுரவிக்கிறது.

திட்டம் தீட்டுவது எளிது, ஆனால் அந்த திட்டத்தை செயல்படுத்த எடுக்கும் முயற்சிகள் தான் கடினம். பல கடினங்களை தாண்டி தனது திட்டத்தை செயல்படுத்த இந்திய அரசியல்வாதிகளுடன் மல்லுக்கட்டி வருகிறார் ஒருவர். அரசியல்வாதிகள், இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள், பத்திரிக்கைகள், நீதிமன்றங்கள் இவற்றுடன் போராடி தோற்றுபோனவர் இறுதியாக தமிழ்வலைப்பதிவர்களை சரணம் அடைந்துள்ளார். அப்படி என்ன அவசியமுள்ள திட்டம்? அப்படி என்ன அதிசய போராட்டம்? அடுத்த பதிவில் தருகிறேன்.

அதற்கு முன்னர் சோசபின் வலைபதிவுக்கு சென்று ஒரு பின்னூட்ட விருதை கொடுத்து வாருங்கள். உங்கள் நல்ல மனசுக்கு பாரட்டுக்கள்.

1. தமிழ் ஈழ வலைப்பதிவுகள் ஒரு ஆய்வு;
 2. மனித உயிர்கொல்லி என்டோசல்ஃபான்.

நன்றி.

Nov 21, 2010

பத்திரிக்கை செய்திகளின் உண்மை தன்மை: கருத்து கணிப்பு

பத்திரிக்கைளில் வரும் செய்திகளின் உண்மை தன்மையை நீங்கள் எப்படி நம்புகிறீர்கள் என்பது குறித்த இந்த கருத்து கணிப்பில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்

இணைய வாசகர்கள், தமிழ்மலர் செய்திதாள் வாசகர்கள், இந்தியா முழுவதும் உள்ள பத்திரிக்கை நண்பர்களின் நேரடி அலசல், துறைசார் அறிஞர்களின் கருத்து இவற்றை தொகுத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.

தமிழ்மலர் செய்திதாளில் வெளிவர இருக்கும் சிவப்பு இதழியல் (Red Journalism) என்ற கட்டுரை தொடரில் வாசகர்களின் சிறந்த கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும்.
நன்றி...

தமிழின் இழுக்கை போக்க ஒன்றுசேர்வோம் வாருங்கள்

ஸ, ஜ, ஷ, ஹ ஸ்ரீ இந்த எழுத்துக்களை ஒன்று சேர்த்துக்கொள்ள வேண்டும். அல்லது வெட்டிவிட வேண்டும். அது அல்லாமல் இப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் தமிழ்செம்மொழி என்பதற்கு அர்த்தமே இல்லை.

 வீர தீரம் பேசும் புலிகேசி தமிழர்கள் வேண்டுமானால் இந்த எழுத்துக்களை சமசுகிருதம் இல்லை, கிரந்தம், இது தமிழ் எழுத்துக்கள் தான் என்று வெரும் வாயை மென்றுகொண்டு இருக்கலாம்.

ஆனால் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கப்படும் பள்ளி பாடம் முதற்கொண்டு உலகம் தழுவிய மொழி ஆய்வு வல்லுனர்கள் வரை இந்த எழுத்துக்களை சமசுகிருத எழுத்துக்களாகவே சொல்லி வருகின்றனர்.

தமிழுக்கு என்று ஒரு இலக்கண நடை உள்ளது. தொல்காப்பிய இலக்கணமும் இன்றைய இலக்கணத்துக்கும் வேறுபாடுகள் அதிகம் இல்லை. ஆனால் இந்த எழுத்துக்களை எங்கே சேர்ப்பது.

காலத்தின் கட்டாயம் இந்த எழுத்துக்கள் நிச்சயம் வேண்டும் என்றால் முறையாக தமிழரிஞர்கள் கூடி இலக்கணத்துக்கு களங்கம் ஏற்படுத்தாமல் தமிழ் அட்டவணையில் சேர்த்து விடுங்கள். அல்லது வேண்டாம் என்றால் அதற்கு மாற்றை யோசியுங்கள்.

அதை விட்டுவிட்டு வேணும் வேண்டாம் என்று குருட்டு கண்ணன் காரை ஓட்டிய கதையாக இருந்தால் வடிவேலு போல ஊர்போய் சேர முடியாது.

ஒன்று சேர்த்துக்கொள்ளுங்கள் அல்லது வெட்டிவிடுங்கள்

ஜ, ஸ, ஷ, ஹ, ஸ்ரீ எழுத்துக்களுக்கு மாற்றாக தாராளமாக ஆயுத எழுத்தை பயன்படுத்தலாம். இது குறித்து விரிவான ஆய்வுகள் செய்து தமிழக அரசுக்கு பரிந்துரைக்க உள்ளோம்.

உங்களது ஆலோசனைகளையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்.

ஃ பயன்படுத்தி எழுதுவதில் உங்களுக்கு என்ன தயக்கம்?

ஃசிடாலின் ஃசிபெயின் இப்படி ஒலிப்பதில் என்ன கடினம் இருக்கப்போகிறது ?

ஃ இதற்கு க் என்பதல்ல ஒலி. எந்த எழுத்துடன் சேருகிறதோ அங்கு அந்த எழுத்தை மெல்லெலுத்தாக மாற்றி ஒலிக்கசெய்வது.

உதாரணமாக: ஃபோட்டான் என்பதை க்போட்டான் என நாம் வாசிப்பதில்லை. அதாவது பகரத்தின் மெல்லொலியை (fa) உச்சரிக்கிறோம். அதே போல ஃசிடாலின், ஃசிட்ரான்சியம், என தெளிவாகவே உச்சரிக்கலாமே.

தமிழ் மீது மரியாதை வைத்துள்ள வலைப்பதிவர்களே தமிழ் அறிஞர்களே, வாசகர்களே உங்கள் ஒத்துழைப்பு தேவை. தமிழுக்காக கொஞ்சம் சிந்தியுங்கள், ஒன்றுசேர்ந்து போரடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

Nov 20, 2010

மனித உயிர்கொல்லி என்டோ சல்ஃபான்

என்டோ சல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்து மனிதர்களை கொன்று திண்னும் கொடூரத்தை கேரள மாநிலம் உணர்ந்துவிட்டது.

இதற்கு தடை விதித்து விழித்துக்கொண்டாலும், விடிவுவரவில்லை. காரணம் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இருந்து மறைமுகமாக கேரளாவுக்குள் நுழையும் என்டோ சல்ஃபானால் இன்றும் தொடர்கிறது மனித உயிர் இழப்புகள்.

 மனித கொல்லியாக உருவெடுத்துள்ள என்டோசல்ஃபானுக்கு இந்தியா முழுவுதும் தடை வேண்டும் என கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் நாளை பிரதமரை நேரடியாக சந்தித்து கோரிக்கை வைக்கிறார். தனது மாநிலத்தில் என்டோ சல்ஃபோனால் நிகழ்ந்த கொடூரத்தை ஆதாரத்துடன் எடுத்து சென்றுள்ளார்.

 அப்படி என்ன கொடூரம் ? 

இந்த வலைபதிவர் (ஜோசபின் கதைக்கிறேன்) இன்னும் விரிவாக விளக்கியிருக்கிறார். சென்று படித்துபாருங்கள். உங்களால் முடிந்த எதிர்ப்பை தெரிவியுங்கள். மனித உயிர்கள் விலைமதிப்பற்றது.

தமிழுக்காக, தமிழீழத்துக்காக ஆயுதம் ஏந்துங்கள்

கோவையில் என்னுடன் பணியாற்றும் பெண்நிருபர் ஒருவர் எழுத்துக்கள் குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது வலைப்பதிவில் எழுதியிருந்த கட்டுரைகளை கொடுத்தார். அதை அப்படியே இங்கு கொடுத்திருக்கிறேன்.

அவரது கருத்த சரியா தவறா என்பதை படித்து சொல்லுங்கள் :


தமிழுக்காக, தமிழீழத்துக்காக ஆயுதம் ஏந்துங்கள்


தமிழுக்கு திறன் இல்லை என்ற சொல்லும், தமிழீழக் கொடூரங்களை கேட்க நாதியில்லை என்ற உண்மையும் சென்ற வாரங்களில் என்னை வெகுவாக பாதித்த விடயங்கள்

இந்த இரண்டு அநீதிகளுக்காகவும் ஆயுதம் ஏந்தி போராட தமிழர்களை தயார் செய்வது தான் இந்த பதிவின் நோக்கம்.

முதலில் தமிழுக்கு இழைக்கப்படும் கொடுமையை பார்ப்போம்.

என் மகனுக்கு 2 வயது கடந்துவிட்டது. தமிழ் எழுத படிக்க கற்றுக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன். உயிர் எழுத்துக்கள் 12. 

மெய் எழுத்துக்கள் 18. 
உயிர்மெய் எழுத்துக்கள் 216. 
ஆயுத எழுத்து 1., 
மொத்த எழுத்துக்கள் 247. 
இப்படி கற்றுக்கொடுக்கும் போது எதற்காக அம்மா இந்த ஆயுத எழுத்து என்றான் அறிவு. அப்போதைக்கு பதில் சொல்ல தெரியாத நான் தமிழை காப்பதற்காக என எதார்த்தமாக பதில் சொன்னேன். 
இனி கூடுதலாக ஸ,ஷ,ஜ,ஹ இந்த எழுத்துக்களை என்ன சொல்லி கற்றுக்கொடுப்பது?

தமிழில் சில எழுத்தக்கள் இல்லை அதனால் வடமொழியில் இருந்து கடன்வாங்கியது. இப்படி தான் தமிழ் சமுதாயம் எனக்கு கற்றுக்கொடுத்தது.


தமிழக அரசு இந்த நான்கு எழுத்துக்களை நீக்கவும் இல்லை, சேர்க்கவும் இல்லை. இதனால் இன்றுவரை தமிழ் ஒரு கடன்மாறி மொழியாகவே உள்ளது. நமது குழந்தைகளுக்கு மட்டுமல்ல தமிழ் கற்க விரும்பும் வேற்று மொழியினரிடமும் தமிழுக்கு திறன் இல்லை என்று தான் இநத நான்கு எழுத்துக்களுக்கான விளக்கத்தை தருகிறோம்.
உண்மையில் இந்த நான்கு எழுத்துக்கள் சமசுகிருத விரும்பிகளால் தமிழில் திணிக்கப்பட்டது என்பது தான் வரலாற்று உண்மை. தமிழ் இலக்கணத்திலோ, தமிழின் முதன்மை நூல்களிலோ இந்த நான்கு எழுத்துக்கள் இல்லை.

கொடுமை என்னவென்றால் தமிழை குறைகூறி வடமொழி எழுத்துக்களை திணித்தவர்கள் எளிதில் வெற்றிபெற்று விட்டார்கள். ஆனால் தமிழில் வடமொழி எழுத்துக்களை சேர்க்ககூடாது, நீக்கவேண்டும் என 2 ஆயிரம் ஆண்டுகளாக போராடுபவர்கள் இன்றுவரை இந்த தமிழ் சமுதாயத்திடம் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்.

தமிழர்கள் இந்த நான்கு எழுத்துக்களை தவிர இன்னபிற எழுத்துக்களை ஒதுக்கிவிட்டார்கள். ஆனாலும் இந்த நான்கு எழுத்துக்களை ஏன் ஒதுக்க மறுக்கிறார்கள் 

1. பலரின் பெயர்களில் வருவது
2. உலக இணைப்பு மொழியாக அரங்கேரி வரும் ஆங்கிலத்துடன் தொடர்பை வைக்க இந்த நான்கு உச்சரிப்புகள் மிகமிக அவசியமாக இருப்பது.
3. பழகிவிட்டது

நியாயமான காரணங்கள் தான்.

இங்கு தமிழர்கள் ஒன்றை சிந்தித்தாக வேண்டும். இந்த நான்கு உச்சரிப்புகள் தேவை என்றால் அதற்கு நம்மீது திணிக்கப்பட்ட வடமொழி எழுத்துக்கள் தான் வேண்டும் என்றில்லை. தமிழ் எழுத்துக்களே அந்த உச்சரிப்பை தரும். நாம் தான் பயன்படுத்த தாழ்வுமனபான்மை கொண்டுள்ளோம்.

இந்த நான்கு உச்சரிப்புகளுக்கு மட்டுமல்ல ஓராயிரம் உச்சரிப்புகளையும் ஒலிக்க தமிழில் எழுத்து இருக்கிறது. இந்த தனிச்சிறப்பு தான் தமிழை உலக செம்மொழிகளில் இருந்து தனித்து காட்டுகிறது.

தமிழை எந்த சூழலிலும் காக்க தான் அதற்கு ஆயுத எழுத்து வழங்கப்பட்டிருக்கிறது.
ஆயுத எழுத்து உயிர், மெய், உயர்மெய் எழுத்துக்களுக்கு பொதுவானதாக இருப்பதோடு தமிழை காக்கும் ஆயுதமாகவும் இருக்கும் என்பது எனது எண்ணம்.

இன்று சிலர் கட்டாயம் தேவைப்படுவதாக கூறும் நான்கு உச்சரிப்புகளுக்கான தமிழ் எழுத்தை பார்க்கலாம்.

ச-ஸ, சா-ஸா, சி-ஸி, சீ-ஸீ, சு-ஸ§, சூ-ஸ¨, செ-ஸெ, சே- ஸே, சை-ஸை, சொ-ஸொ, சோ-ஸோ, சௌ-ஸெள,  ஃச்-ஸ்

இந்த வரிசையில் ஸ் என்ற எழுத்தை தவிர பிற எழுத்துக்கள் எல்லாம் ஒரே உச்சரிப்பை தருகிறது. ச்(ஸ்) என்ற மெய் உச்சரிப்பு ஆயுதத்துடன் சேரும் போது ஃச்,  என்பது சாத்தியப்படுகிறது.

ஸ் என்ற எழுத்தை தவிர நாம் பிறதை பயன்படுத்துவதில்லை.

உதாரணத்துக்கு காங்கிரஸ் என எழுத்தும்போது தான் ஸ் பயன்படுத்துகிறோம். காங்கிரசார், காங்கிரசிடம், காங்கிரசுடன், என்று தான் பயன்படுத்துகிறோம். 

ஒரு ஒலிக்காக தனி ஒரு எழுத்துவரியையே ஏற்பதற்கு பதிலாக ஸ் - ஃசு என்று ஆயுதத்தை பயன்படுத்தலாமே.
இதற்கு க் என்பதல்ல ஒலி. எந்த எழுத்துடன் சேருகிறதோ அங்கு அந்த எழுத்தை மெல்லெலுத்தாக மாற்றி ஒலிக்கசெய்வது.

உதாரணமாக: ஃபோட்டான் என்பதை க்போட்டான் என நாம் வாசிப்பதில்லை. அதாவது பகரத்தின் மெல்லொலியை (fa.) உச்சரிக்கிறோம். அதே போல ஃசிடாலின், ஃசிட்ரான்சியம், என தெளிவாகவே உச்சரிக்கலாமே.

அடுத்து ஷ

ஷ-ஃச,  ஷா-ஃசா,  ஷி-ஃசி,  ஷீ-ஃசீ,  ஷ§-ஃசு,  ஷ¨ - ஃசூ,  ஷெ-ஃசெ,  ஷே-ஃசே,  ஷை-ஃசை,  

ஷொ-ஃசொ,  ஷோ-ஃசோ,  ஷைள-ஃசௌ,   ஷ்-ஃச்

எல்லா உச்சரிப்பும் எளிதாகவே வருகிறதல்லவா? மேலும் ஷ என்ற உச்சரிப்பு மொழிக்கு இடையிலும் இறுதியிலும் வரும்போது ட வாக தமிழில் பயன்படுத்தி வருகிறோம். அதை அப்படியே எடுத்துக்கொள்ளலாம். எ.கா: இலட்சுமி, நட்டம், விடம். 

அடுத்து ஜ 

இந்த உச்சரிப்புக்கு பதிலாக ச என்ற நேரடி உச்சரிப்பையே பயன்படுத்திவருகிறோம்.

இல்லை ஜ உச்சரிப்பு தான் வேண்டும் என பிடிவாதம் பிடிப்பவர்கள் ஞ்+ச பயன்படுத்தலாமே

ஞ்சா, ஞ்சி, ஞ்சூ, ஞ்செ என பயன்படுத்தலாமே..

அடுத்து ஹ

ஃக, ... இப்படி தாரளம் பயன்படுத்தலாமே.

இங்கு சிலர் வடமொழி எழுத்து வேண்டாம் ஆனால் அதன் உச்சரிப்பு மட்டும் வேண்டுமா என கேட்கலாம். இந்த உச்சரிப்புகள் எல்லாம் ஏற்கனவே தமிழில் உள்ளது. உதாரணமாக க என்ற வல்லின எழுத்து எல்லா இடங்களிலும் வலிந்தே ஒலிப்பதில்லை. அதனுடன் சேரும் இன எழுத்து, குற்றிய லுகரம் போன்ற இடங்களில் வலிந்தும் மெலிந்தும் திரிந்தும் ஒலிக்கும். அதுபோன்றே தமிழின் எல்லா எழுத்துக்களும் எந்த உச்சரிப்புக்கும் உட்படும். 

இந்த உச்சரிப்புகளுக்கு எல்லாம் இலக்கணம் படித்துவிட்டு வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரணமாக எழுத்து கூட்டி வாசிக்கும் போதே இவை ஒலித்துவிடும். ஒத்த உச்சரிப்புகளுக்கு தனித்தனி எழுத்துக்கள் இல்லாமல் எல்லாவற்றிற்கும் பொருந்தும் ஒரு எழுத்தை கொண்டிருப்பது தான் தமிழின் எளிமையும் சிறப்பும். 

வடமொழி எழுத்துக்களுக்கான உச்சரிப்புகள் தமிழ் எழுத்துக்களிலேயே சாத்தியப்படும் போது எதற்காக இன்னும் தமிழை கடன்வாங்கி மொழியாகவே வைத்திருக்க வேண்டும்?

தமிழர்கள் சிந்திப்பார்களா?

பழக்கத்தில் இருப்பதை மாற்றுவது கடினம் என எண்ணும் தமிழர்களுக்கு ஒரு நினைவூட்டல். வடமொழி எழுத்துக்களை தமிழில் திணிக்கும்போது நம் முன்னோர் அதை பழக எவ்வளவு கடினப்பட்டிருப்பார்கள். ஆனால் இன்று நாமோ அதை எளிதாக பயன்படுத்துகிறோம். அதே போல தான் நாம் இந்த எழுத்துக்களை நீக்க முயற்சிக்கும் போது சிறிறு காலம் கடினப்பட வேண்டி வரும். ஆனால் நமது குழந்தைகள் வடமொழி எழுத்து இல்லாமல் எளிமையாக தமிழை எழுதிவிடுவார்கள். 

கடன்வாங்கி மொழி என்ற இழுக்கும் தமிழைவிட்டு நீங்கும்.

Nov 19, 2010

நாசம் செய்யும் நான்கு எழுத்துக்ளுக்காக ஏன் வரிந்துகட்டுகிறீர்கள்

கோவையில் என்னுடன் பணியாற்றும் பெண்நிருபர் ஒருவர் எழுத்துக்கள் குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது வலைப்பதிவில் எழுதியிருந்த கட்டுரைகளை கொடுத்தார். அதை அப்படியே இங்கு கொடுத்திருக்கிறேன்.

அவரது கருத்த சரியா தவறா என்பதை படித்து சொல்லுங்கள் :



நாசம் செய்யும் நான்கு எழுத்துக்ளுக்காக

ஏன் வரிந்துகட்டுகிறீர்கள்



தமிழில இருந்து வடமொழி எழுத்துக்களை நீக்கவேண்டும் என்றால் தமிழர்களே அதை எதிர்க்கிறார்கள். இந்த நான்கு எழுத்துக்களால் தமிழுக்கு வரும் தீங்கை புரியச்செய்வதே இந்த பதிவு. மேலும் இந்த நான்கு எழுத்துக்களை நீக்கினாலே அறிவியல தமிழ் எளிமையாகிவிடும் என்பதையும் பார்க்கலாம்.

தமிழில் வடமொழி எழுத்துக்களை நீங்குவதால் அறிவியல் சொற்களை எழுத முடியாது என்றும், ஸ, ஷ, ஜ, ஹ இந்த நான்கு எழுத்துக்கள் தமிழோடு இருப்பதால் தமிழ் மேலும் வளமையடையும் என்றும் சில தமிழர்களே கூறுகின்றனர்.

இந்த நான்கு எழுத்துக்கள் இல்லை என்றால் தமிழில் அறிவியலை எழுதவே முடியாது என சொல்வது தமிழரின் இயலாமை தான் காட்டுகிறது. இந்த நான்கு எழுத்துக்கள் நச்சு கிருமிபோல ஒட்டிக்கொண்டு தமிழுக்கு செய்யும் தீங்கை புரிந்துகொண்டீர்கள் என்றால் இதற்காக வரிந்துகட்ட மாட்டீர்கள்.

பல நாள்நைஷ்டிக அதிகரணம் பூண்டு போதகாசிரிய சன்னிதியில் தாழ்ந்து சகபாடிகளோடு சூழ்ந்து சுரஒலி பேதங்களை தேர்ந்து உழைப்பெடுத்து ஓதினாலும், பாடமாவதற்கு அருமையாயும், பாடமானாலும் பாஷ்யம் டீக்கா டூக்காடிபணி முதலிய உரைகோள் கருவிகளை பொருள்தேடிக் கைவரினும் அக்கருவிகளால் போதகம் பெற வேண்டியதற்கு பாஷ்யகாரர்கள் வியாக்கியான கர்த்தாக்கள் டீக்கா வல்லவர்கள், டூக்காசூசகர்கள் முதலிய போதக உபபோதக ஆசிரியர்கள் கிட்டுவது அருமையினும் அருமையுமாய் இருக்கிற ஆரியபாஷை. என்று வள்ளார் சொல்வதை பாருங்கள்.

இன்னும் புரியாதவர்கள் 20, அல்லது 30 வருடங்களுக்கு முந்தைய தமிழ்செய்திதாழ்கள், வடமொழி கலந்து எழுதப்பட்ட புத்தகங்களில் தமிழின் கொடுமை பாருங்கள்.

வடமொழி எழுத்துகளுக்கு எதிராக போரடியதன் விளைவு தான் இன்று இந்த எளிமை தமிழ் கிடைத்திருக்கிறது. பல்லாயிரம் தமிழ் வார்த்தைகள் விடுதலையாகி வந்திருக்கிறது.

இந்த நான்கு எழுத்துக்கள் தமிழோடு தொங்கிக்கொண்டு இருப்பதால் என்னென்ன தொழுநோய் தமிழுக்கு வந்திருக்கிறது என பாருங்கள்

1. தமிழின் சீரான இலக்கணம் அழிகிறது
2. தமிழ் உச்சரிப்புகள் கெடுகிறது
3. பல தமிழ் வார்த்தைகள் அழிகிறது.
4. புதிய சொல்லாக்கங்களே இல்லாமல் போகிறது
5. தமிழை சமசுகிருதம் தான் தாங்கிப்படித்திருக்கிறது. அது இல்லாவிட்டால் அறிவியல் அறியாத பிறபோக்கு மொழியாகிவிடும் என்கிறார்கள் சில பித்தலாட்டவாதிகள்.
6. நான்கு எழுத்துக்கள் போதாது. நான்கை ஏற்றுக்கொண்டதை போல நாற்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள்.
7. வடமொழி எழுத்துக்கள் இல்லாமல் எழுதப்பட்ட திருக்குறள் உட்பட பல அரிய தமிழ் நூற்களும் மதிப்பற்று போகிறது.
8. இந்த நான்கு நான்கு எழுத்துக்கள் இல்லாமல் எழுதப்படும் தமிழ்சொற்களை உலக அரங்கில் மதிப்பற்ற பழமைவாத சொற்களாக்குகிறார்கள்
9. எதிர்காலத்தில் இந்த நான்கு எழுத்துக்கள் இல்லாமல் தமிழே இல்லை என்ற நிலையை உருவாக்குகிறார்கள்
10. கால வளர்ச்சிக்கு ஏற்ப தமிழில் சொற்கள் பிறக்காமல் போகிறது. இதனால் தமிழ் மலட்டு மொழியாகிறது.

இன்று உலகின் ஒப்பற்ற உயரிய நூல் திருக்குறள் என பெருமைபடுகிறோம். அதில் எங்கே போனது இந்த நான்கு எழுத்துக்கள்?
இந்த நாசமாக போன( தமிழை நாசமாக்கியதால் இப்படி குறிப்பிடுகிறேன்) நான்கு எழுத்துக்களை தூக்கி எரிவதால் தமிழ்அன்னைக்கு என்னென்ன ஆற்றல்கள் வருகிறது?

1. சீரிய, உயரிய, வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இலக்கணம் கொண்ட மொழியாகிறது.
2. தனித்து வாழும் செம்மொழியாகிறது
3. அறிவியல் தமிழ் எளிதாகிறது.
4. சீரிய உச்சரிப்புடைய உன்னதமொழியாகிறது
5. சமசுகிருதம் என்ற சாயல் இல்லாமல் தனித்து நிற்கிறது.
6. காலவளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் சொற்களும் வளர்கிறது.
7. கணிணி உட்பட தகவல் தொழில்நுட்பங்களில் தன்னிகரற்ற மொழியாகிறது.
8. குழந்தைகளிடம் கொஞ்சும் மழலை தமிழை கேட்க முடிகிறது.
9. இயல், இசை நாடகம் காக்கப்படுகிறது.
10. என்றும் இளைமை மிளிர்கிறது தமிழுக்கு

இன்று பெரும்பாலான அறிவியல் வர்ர்த்தைகள் எல்லாம் கிரேக்கம் லத்தீன் மொழிகளில் இருந்து எடுக்கப்படுகிறது. இதற்கு காரணம் பழமையான ஒரு பொதுமொழியில் இருக்கட்டும் என்பது தான். இந்த மொழிகளுக்கெல்லாம் தமிழ் எந்த விதத்தில் சளைத்தாக உள்ளது? 


உதாரணத்திற்கு அவர்கள் ஆல்பா, பீட்டா, காமா, என்கிறார்கள். இதன் பொருள் முதலாவது இரண்டாவது, மூன்றாவது என்பது தான். இதை மொழிபெயர்க்க நாம் fa , ba,. ga போன்ற உச்சரிப்புகள் தமிழில் இல்லை என வாதிடுகிறோம். ஆல்பா பீட்டா காமா என்று எழுதினாலும் புரிகிறது. அதைவிட தமிழில் நேர்மின் கதிர், எதிர்மின்கதிர், மின்சுமையற்ற என எளிமையாக மொழிபெயர்க்கும் போது இன்னும் கருத்தூன்றி படிக்க முடிகிறது.

இன்னும் சமசுகிருதத்தின் மீது வெறுப்பேற்றாதீர்கள்

கோவையில் என்னுடன் பணியாற்றும் பெண்நிருபர் ஒருவர் எழுத்துக்கள் குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது வலைப்பதிவில் எழுதியிருந்த கட்டுரைகளை கொடுத்தார். அதை அப்படியே இங்கு கொடுத்திருக்கிறேன்.

அவரது கருத்த சரியா தவறா என்பதை படித்து சொல்லுங்கள் :
......................................
இன்னும் சமசுகிருதத்தின் மீது வெறுப்பேற்றாதீர்கள்

ஒரு நாட்டுக்கு எதிராக சதிதிட்டம் தீட்டுபவர்கள் தீவிரவாதிகள் என்றால், ஒரு மொழிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுபவர்களை என்னவென்று சொல்வது?

சமீபத்தில் சில வலைப்பதிவுகளில் தமிழ் எழுத்துக்களில் சிலவற்றை சேர்ப்பது விலக்குவது குறித்த விவாதங்களை காண முடிந்தது. அந்த பதிவர்களின் ஒருசார் கருத்துக்கள் எனக்குள் கொதிப்பை மட்டுமல்ல சமசுகிருதத்தின் பால் இன்னும் வெறுப்பையும் கூட்டியது.
அந்த பதிவருக்கு மட்டுமல்ல அவரை போலவே எதற்கெடுத்தாலும் சமசுகிருதத்திற்கும் ஆங்கிலத்திற்கும் வரிந்து கட்டும் சில பிரபல எழுத்தாளர்களுக்குமான கண்டிப்பும், ஏமாளி தமிழர்களுக்கான எச்சரிக்கையும் தான் இந்த பதிவு.

தமிழுக்கும், பிற மொழிகளுக்கும் உள்ள சிறப்பு வேறுபாடே எழுத்துஅமைப்பும், உச்சரிப்பு நடையும் தான.

உச்சரிப்பு என்பது வெவ்வேறு மொழியினருக்கு மட்டுமல்ல, ஒரே மொழினருக்கு கூட வேறுபடும். அத்துனை ஏன் ஒரு மனிதனுக்கே குளிர்காலத்தில் ஒரு உச்சரிப்பும், வெயில்காலத்திலும் வேறு உச்சரிப்பும் வரும். கனேசன் என்ற சொல்லை குளிர்காலத்தில் ஒரு உச்சரிப்பிலும், வெயில் காலத்தில் ஒரு உச்சரிப்பிலும் சொல்வோம்.

அதற்காக குளிர்காலத்தில் க என்பதற்கு ka.. என்றும் வெயில்காலத்தில் ga.. இடைபட்ட காலத்தில் ca.. என்றும் எழுத்துக்கள் கேட்பது மொழி பண்பாட்டுக்கு அழகு அல்ல.

ஒவ்வொரு உச்சரிப்புக்கும் ஒவ்வொரு எழுத்து கொடுத்தால் எந்த மொழிக்கும் எழுத்துக்கள் போதாது. எழுத்துக்கு ஏற்ப உச்சரிப்பு தான் பண்பட்ட மொழியே தவிர, உச்சரிப்புக்கு ஏற்ப எழுத்தை ஏற்பது பண்பட்ட மொழி அல்ல.

தமிழ் என்பது ஒரு பழமையான மொழி அதேநேரத்தில் பண்பட்ட மொழி. இதற்கு மிகச்சிறந்த ஆதாரமாக தமிழ் எழுத்துக்களே திகழ்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளில் இருந்து தமிழ் எழுத்துஅமைப்பு தனித்து நிற்கிறது. பிறமொழி எழுத்துக்களை சேர்த்து தான் வாழவேண்டும் என்ற நிலை தமிழுக்கு இல்லை. 

தமிழ் தவிர இந்தியாவின் மற்ற மொழிகளின் எழுத்துநடைகள் எல்லாமே உச்சரிப்புக்கு ஏற்ப எழுத்துக்களை சுமந்துகொண்டிருக்கும். தமிழ் அப்படி அல்ல. எழுத்தை ஒட்டியே உச்சரிப்புகளையும் அமைத்துக்கொண்டது. இதற்காக தான் தமிழை இயல் இசை நாடகம் என தனித்தனியே பிரித்துள்ளார்கள்.

திருநெல்வேலி தமிழும், கோவை தமிழும், சென்னை தமிழும், ஈழத் தமிழும். சிங்கை தமிழும் இன்னும் உலகெங்கும் ஓங்காரமாய் ஒலிக்கும் ஒவ்வொரு தமிழும் மேற்சொன்ன இயல் இசை நாடகத்தில் ஒன்றிணைந்துவிடும்.

ஒரு மொழியினர் மற்ற மொழியினரோடு தொடர்பு கொள்ளும்போது இருமொழியிலும் சொற்கள், உச்சரிப்புகள் கலப்பது இயல்பு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ்மொழியில் வந்து கலக்கும் பிறமொழிகளின் சொற்களையும் உச்சரிப்பையும் எப்படி ஒலிபெயர்ப்பு செய்யவேண்டும் என தொல்காப்பியர் காலத்திலேயே தமிழுக்கு இலக்கணம் வகுக்கப்பட்டு விட்டது.

பிறமொழி சொற்களையோ எழுத்துக்களையோ தாங்கிதான் தமிழ் வளரவேண்டும் அல்லது வாழவேண்டும் என்ற நிர்பந்தம் தமிழுக்கு கிடையாது. பிறமொழி ஆதிக்கம் செலுத்தப்பட்ட ஒவ்வொரு காலகட்டத்திலும் தனித்தமிழை நிலைநாட்ட பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு இன்றும் தமிழ் தன் இயல்பு மாறாமல் மிளிர்கிறது.

வடமொழியோடு ஒன்றிப்போவதை நாகரீகமாக நினைத்த சமுதாய போக்கால் தான், இன்று மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற திராவிட மொழிகளில் வடமொழி ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. ஆனால் தமிழிடம் வடமொழி ஆதிக்கம் செல்லுபடியாகவில்லை.

பிரபல தமிழ் வார இதழ்களில் வாசகர் கேள்வி பதில் சொல்லும் சில எழுத்தாளர்கள் எதற்கெடுத்தாலும் இந்த தமிழ் சொல்லினுடைய வேர் சமசுகிருதத்துடையது. இந்த தமிழ் சொல் சமசுகிருதத்தில் இருந்து வந்தது. என தூய தமிழ்சொற்களை கூட சமசுகிருத சொறகளாக குறிப்பிடுகிறார்கள். அதே போல தான் தமிழில் இருந்து வடமொழி எழுத்துக்களை நீக்கக்கூடாது என துள்ளுகிறார்கள்.

இவர்களது துள்ளலை பார்க்கும் போது தான் சமசுகிருத மொழியையே வெறுத்து தனித்தமிழ் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணமே வருகிறது.

தெரியாமல் கேட்கிறேன். தமிழில் இருந்து வடமொழி சொற்களையும் எழுத்துக்களையும் நீக்கவேண்டும் என்றால் சமசுகிருதவாதிகளுக்கு ஏன் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது? நாங்கள் என்ன சமசுகிருதத்தில் தமிழ் எழுத்துக்களை சேர்க்கவா சொல்கிறோம்? உங்கள் மொழியை காப்பாற்ற தமிழனின் முதுகுதான் கிடைத்ததா? ஏன் தனியாக நடக்க திறன் இல்லாத முடத்தன மொழியா சமசுகிருதம்?

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்ற பாரதியும், கரையான் அரித்துக்கொண்டிருந்த தமிழ் ஓலைசுவடிகளை எல்லாம் மீட்டு தந்த வ.வே.சு ஐயரும்., சமசுகிருதத்தின் கடுமையை நேரடியாக விமர்சித்த விவேகானந்தரும் சமசுகிருதம் தெரியாதவர்கள் அல்ல என்பது ஏன் துக்கடா எழுத்தாளர்களுக்கு புரிவதில்லை.

பலநூற்றாண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் தனித்தமிழுக்கு மிகச்சரியான இலக்கணத்தை வகுத்துத்தந்திருக்கிறார். ஆனாலும் இன்றுவரையும் வடமொழி எழுத்துக்களை தமிழோடு இழுத்துவரும் தமிழர்களின் ஏமாளி தனத்தை என்னவென்று சொல்வது. 

வடமொழி எழுத்துக்கள் இருந்தால் இருந்துவிட்டு போகட்டும் என பயன்படுத்திவந்த நான் கூட, சமசுகிருதபிடிவாதிகளின கருத்துக்களை படித்த பின்புதான் தனிந்தமிழை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற முடிவிற்கே வந்திருக்கிறேன்.

போலி சமசுகிருதவாதிகளே சமசுகிருதத்தை வளர்ப்பதாக எண்ணி இன்னும் அதை குழிதோண்டி புதைக்காதீர்கள். ஒரு மொழி அழிவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

தனித்தமிழுக்காக எடுக்கும் ஒவ்வொரு ஆக்கப்பூர்வமான முயற்சிக்கும் இனி நானும் துணைநிற்பேன்

Popular Posts