Oct 17, 2014

செயலலிதா சாமீனில் விடுதலை,

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் செயலலிதாவை உச்சநீதிமன்றம் சாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டது. 

மேல் முறையீட்டு விசாரனையை 3 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுவரை செயலலிதாவை விடுதலை செய்வதோடு தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து, நீதிபதிகள் மதன் பி. லோகூர், ஏ.கே.சிக்ரி அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதை தொடர்ந்து செயலலிதா உடனடியாக விடுதலையாகிறார். 

தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க தடை இல்லை என்பது கூடுதல் செய்தி.

Oct 16, 2014

காவல் நிலையத்துக்கு போயிடாதீங்க...

இந்த நாட்டில் அத்தனை துறைகளையும் சீர்திருத்தப்படுகின்றன. நீதித்துறையும், காவல்துறையும் இன்னும் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் எப்படி இருந்ததோ, அதைவிட மோசமாக இருக்கின்றன.

இலக்கு வைத்து வழக்கு பதிவு செய்யும் கொடுமை உலகில் எங்காவது இருக்கிறதா? தமிழ்நாட்டில்  மட்டும் தான் இந்த கொடுமை அரங்கேறி வருகிறது. 

காவல்துறை இல்லை என்றால் குற்றவாளிகள் பெருகி விடுவார்கள் என்பது தான் பலரின் வாதம். ஆனால் இந்த காவல் துறையால் தான் குற்றவாளிகள் பெருகிவருகிறார்கள் என்பது பலருக்கும் தெரியாது.

மதுபான கடைக்கு இலக்கு நிர்ணயித்தால் எதிர்த்து குரல் கொடுக்கிறோம். அதை விட கொடுமையானாது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய இலக்கு நிர்ணயிப்பது. இந்த ஒரு இலக்கால் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் உருவாக்கப்படுகிறார்கள். 

போலீசார் கையில் எதற்கு லத்தி என்ற கேள்விக்கே இன்னும் விடை கிடைக்கவில்லை. இந்த நிலையில் அத்தனை உதவி காவல் ஆய்வாளர் கையிலும் துப்பாக்கியை கொடுத்திருக்கிறார்கள். 

தற்காப்புக்கு தான் துப்பாக்கி என்றால், பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு துப்பாக்கியுடன் செல்லவேண்டும். குறைந்தபட்சம் சமபல ஆயுதமாவது கையில் வேண்டாமா?

ராமநாதபுரம் சம்பவத்தில் பலரும் குற்றவாளி காவல் ஆய்வாளர் காளிதாசுக்கு எதிராக தான் போராடுகிறார்கள். ஆனால் குற்ற சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த காவலர்கள், காளிதாசை காப்பாற்ற முயன்ற ஆய்வாளர், காவல் கண்காணிப்பாளர், தினமலர் பத்திரிக்கை போன்றவற்றிக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்ய யாரும் குரல் கொடுப்பது இல்லை.

காளிதாசு என்ற உதவி ஆய்வாளர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த காவல்துறையையே குறை சொல்லலாமா என பலர் கேட்கலாம். விசாரனை கைதியை சுட்டவுடன் காளிதாசு மீது வழக்கு பதிவு செய்து முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால் காவல்துறைக்கு ஒரு ராயல் சலியூட். ஆனால் என்ன செய்தார்கள்?   

காளிதாசு கொலையாளி என்றால் காளிதாசின் குற்றத்தை மறைக்க காவல்துறையும், தினமலர் பத்திரிக்கையும் முயன்று உள்ளது. இவர்களை எல்லாம் யார் தண்டிப்பது?

 இந்த நாட்டில் ஒரு மாநில முதல் அமைச்சரை நிமிட பொழுதில் சிறையில் அடைக்க முடியும். ஆனால் கொலை குற்றம் செய்த காவல் ஆய்வாளர் மீது குறைந்த பட்சம் வழக்கு கூட பதிவு செய்ய முடியாது. சட்டம் அனைவருக்கும் சமமாம். வாழ்க இந்திய சனநாயகம், வளர்க்க இந்தியாவின் சட்ட தீவீரவாதம்.

பொதுமக்களுக்கு ஒரே ஒரு அலோசனை : தயவு செய்து காவல் நிலையத்துக்கு போயிடாதீங்க, அப்படியே போக வேண்டிய நிலை வந்தாலும் சுயமரியாதையை கழட்டி வைத்துவிட்டு போங்க...

Oct 14, 2014

வலைப்பதிவில் அதிமுக - திமுக விளையாட்டு

மாவட்டம் தோறும் இணையதளங்கள் துவங்கப்படும் என்று திமுக அறிவித்தது. வலைதளங்களில் திமுக குறித்த விமர்சனங்களை சமாளிக்கவே இந்த ஏற்பாடு. திமுக குறித்த கொள்கைகளை பரப்புவார்கள் என நினைத்தால் அது தவறு. எங்கு, யார் திமுகவுக்கு எதிராக பதிவு எழுதினாலும் அனானியாக பின்னுட்டம் இடுவதையே இவர்கள் செய்கிறார்கள். இதனால் எப்படி திமுக மீது நன்மதிப்பு வரும் என்று தெரியவில்லை.

ஈழப்போரின் இறுதி கட்டத்தில் திமுகவின் செயல்பாடு தமிழர்கள் மத்தியில் வெறுப்பை ஊட்டியது. அந்த வெறுப்பின் காரணமாக திமுகவுக்கு எதிராக உலகம் முழுவதும் பல வலைப்பதிவுகள் வந்தன. இதனால் வலைப்பதிவில் திமுகவுக்கு எதிரான கருத்துக்கள் இன்று வரை விரவி கிடக்கின்றன. இதை எதிர்கொள்ளத் தான் திமுக தற்போது மாவட்டம் தோறும் வலைதளங்களை துவங்கி உள்ளது. இது நல்ல முயற்சி தான். நேரடியாக திமுகவின் விமர்சனங்களை எதிர்கொண்டால் வரவேற்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு, அனானிகளாக நாகரீகமற்ற பின்னூட்டங்களை பரப்புவதால் என்ன பயன்? இதை திமுக ஆதரவாளர்கள் புறிந்து கொள்வார்களா? 

திமுக இப்படி இருக்க அதிமுகவோ அதைவிட மோசம். வலைதளமாவது எலிவலையாவது, அதிமுகவுக்கு எதிராக எவன் எழுதினாலும் அவனை தூக்கி குண்டர் சட்டதில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த குண்டர் சட்டத்தின் காரணமாக பல வலைப்பதிவர்கள் காணாமல் போனார்கள். பலரும் அடக்கி வாசிக்கிறார்கள். பலர் நமக்கு ஏன் வம்பு என கத்தரிக்காய் கூட்டு செய்வது எப்படி என எழுதத் துவங்கி விட்டார்கள்.

இன்று செயலலிதா சிறையில் அடைபட்டதும். அவருக்கு ஆதரவாக பலர் குரல்கொடுக்க முடியாமல் போனதற்கு வலைப்பதிவை குண்டர் சட்டத்தில் கொண்டு வந்ததும் ஒரு காரணம். 

இந்த இரு கட்சிகளின் வருகையால் வலைப்பதிவில் அனானிகளின் சித்து விளையாட்டுகள் தான் அதிகமாகி இருக்கிறது. மக்களின் கருத்துக்களை நேரடியாக அறிந்து கொள்ள அப்பழுக்கற்ற சிறந்த ஊடகம் வலைப்பதிவு. அதை இந்த இரு கட்சியனரும் புறிந்து கொள்ள வேண்டும். 

பத்திரிக்கை, தொலைக்காட்சி போல வலைப்பதிவிலும் அரசியல் அநாகரீகத்தை திணிக்க கூடாது. இது பொதுமக்களின் ஊடகம். இங்கு தான் புதிய சிந்தனைகள் பரவலாக ஊற்றெடுக்கும். இதை சனநாயக அரசாங்கங்கள் உயரிய வரமாக தான் நினைக்க வேண்டும். 

Oct 13, 2014

மனிதஉரிமை கழகங்களை இழுத்து மூடுங்கள்

தமிழ்நாட்டில் மனித உரிமை கழகங்கள் இருக்கின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மூலைக்கு மூலை பெட்டிக்கடை போல மனித உரிமை கழகங்கள் உள்ளன. ஆனால் செயலலிதா விசயத்தில் பேச்சும் காணோம்! மூச்சும் காணோம்!!
செயலலிதா விசயத்தில் மிகப்பெரிய மனித உரிமை மீரல் நடந்துள்ளது. அதை கேள்வி கேட்க எந்த அமைப்பும் இல்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது.

கீழ்நீதிமன்றம் ஒருவரை குற்றவாளி என அறிவித்தால் உடனே அவர் தண்டிக்கப்படுவது மிகப்பெரிய மனித உரிமை மீரல். ஒருவரை தண்டித்து விட்டு மேல்முறையீட்டு வாய்ப்பு தருவது எந்தவிதத்தில் நீதியாகும்?. 

மனித உரிமைகள் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது. ஒரு மாநில முதல் அமைச்சருக்கே இந்த நிலை என்றால், சாதாரன குடிமகனின் நிலை? 

மனித உரிமை கழகங்கள் நிதிவாங்கும் அமைப்புகளாக மட்டும் செயல்படலாமா? மனித உரிமையை கழகம் என்ற பெயரில் நிதிவாங்குவக்கி ஏப்பம் விடுவது தான் உச்சகட்ட மனிதஉரிமை மீரல். உலகை ஏமாற்றும் மனித உரிமை கழங்களை இழுத்து மூடவேண்டும். இவர்களால் யாருக்காவது துளியேனும் பயன் உள்ளதா? 

ஒருவரை குற்றவாளி என்று தண்டித்து விட்டு, பின்னர் எதற்கு மேல் முறையீடு? - இந்த கேள்விக்கு யாருக்காவது பதில் தெரிந்தால் சொல்லுங்கள்!

Oct 12, 2014

திமுகவின் அசைக்கமுடியாத அடித்தளம்.

ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழி உண்டு. தற்போதைய தமிழக அரசியல் சூழலில் பாரதிய சனதா கட்சி தலைகால் புறியாமல் ஆடிக்கொண்டுள்ளது. அடுத்த முதல் அமைச்சர் சுப்பிரமணிய சாமி, தமிழிசை சவுந்திரராசன், ராதாகிருசுணன், ரசினி என பல கோணங்களில் பரபரப்பாக நடிக்கின்றனர்.

அதிமுகவும் திமுகவும் முடிந்து விட்டன. தமிழக மக்கள் இனி திராவிட கட்சிகளை நம்ப மாட்டார்கள். தேசிய கட்சியின் ஆட்சிக்காக தமிழ்நாடு ஏங்குகிறது. அப்பப்பா என்ன ஆழமான கனவுகள்.

தனித்து போட்டியிட்டால் 1 சதவீத வாக்குகளை கூட வாங்க முடியாத பாரதிய சனதா கட்சி இப்படி கனவு காணலாமா?

மதிமுக, தேமுதிக, ஆதரவில் கன்யாகுமரியை பிடித்த பாசக, இப்போது தனித்து போட்டியிட்டு தமிழகத்தையே பிடிக்க கனவு காண்கிறது.

இதில் உச்ச கட்ட சிரிப்பு திமுக முடிந்துவிட்டது என்று சொல்வது தான்.

திமுக மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து இருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் 1 கோடி திமுக தொண்டர்கள் அசைக்கமுடியாத அடித்தளமாக இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?

2014 நாடாளுமன்ற தேர்தல் திமுக அசுர பலத்தில் உள்ளது என்பதை நிரூபித்து உள்ளது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டது. ஆனாலும் பல உதிரி கட்சிகள், அமைப்புகள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தன. அரசின் நலத்திட்டங்கள், ஆளும் கட்சிக்கு ஆதரவான நிலை என பலதரப்பு வாக்குகளும் அதிமுகவுக்கு கிடைத்தது. 70 சதவீதம் பொதுமக்கள் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்கு அளித்தனர். இந்த அடிப்படையில் அதிமுக 44.3 சதவீதம் வாக்குகளை பெற்றது.

மதிமுக, தேமுதிக, பாமக, கொமதேக, புதியநீதிக்கட்சி, என 7 கட்சிகளின் ஆதரவுடன் பாசக கூட்டணி போட்டியிட்டது. மத்தியில் காங்கிரசுக்கு மாற்று அமைய வேண்டும் என்பதற்காக பல நடுநிலை வாக்காளர்களும் பாசக அணிக்கு வாக்கு அளித்தனர். பொதுமக்கள் 20% பேர் பாசக அணிக்கு வாக்கு அளித்தனர். இதன் அடிப்படையில் பாசக அணி 18.5 சதவீதம் வாக்குகளை பெற்றது.

திமுக விசி, மமக கட்சிகள் கூட்டணியிட்டு போட்டி இட்டன. இதில் விசி, மமகவின் வாக்கு வங்கிகள் 1.5 சதவீதம் தான் என்பது அனைவருக்கும் தெரியும். பொதுமக்களை பொருத்தவரை யாரும் திமுகவுக்கு வாக்கு அளித்திருக்க வாய்ப்பு இல்லை. அத்தனை பேரும் திமுக மீது வெறுப்பில் இருந்தார்கள். அதிக பட்சமாக 5 சதவீத பொதுமக்கள் வாக்கு திமுகவுக்கு கிடைத்திருக்கலாம். இப்படிப்பட்ட நிலையில் திமுக பெற்ற வாக்கு சதவீதம் 26.8%. இதில் விசி, மமக, பொதுமக்கள் வாக்குகளை கழித்தால் திமுக மட்டும் 20 சதவீத வாக்குகளை பெற்றிருக்கும். இந்த 20% வாக்குகள் முழுக்க முழுக்க திமுக தொண்டர்களுடையது. 

திமுக அணி மூன்றாம் இடம்தான் பெரும் என்ற பல கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கியது திமுகவின் அசைக்கமுடியாத 20% தொண்டர்  படை தான். 

அதிமுகவின் 20% தொண்டர்களுக்கு இணையாக திமுகவும் 20% தொண்டர்களை கொண்டுள்ளது. பொதுமக்கள் வாக்கு, தேர்தல் கூட்டணி என்பவை தேர்தலுக்கு தேர்தல் மாறக்கூடியவை. இன்று பாசக கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் 2016 தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் என்பதை மறுக்க முடியுமா?

7 கட்சி கூட்டணி, பொதுமக்கள் வாக்கு, இத்தனையும் சேர்த்தே பாசக அணியால் திமுகவின் 20% சதவீதத்தை நெறுங்க முடியவில்லை. இந்த லட்சணத்தில் 2016ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கிறார்களாம். 

அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்ற அதே நேரம், திமுக 30 இடங்களில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது. பாசக அணியால் 8 இடங்களில் தான் திமுக அணியை முந்த முடிந்திருக்கிறது.

செயலலிதா உள்ளவரை அதிமுக அசுர பலத்தில் இருக்கும், கருணாநிதிக்கு பின்னும் திமுக அசுர பலத்தில் தான் இருக்கும். இதை பாசகவும் காங்கிரசும் கவனிக்க தவற வேண்டாம். அணிகள், தலைமைகள் மாறலாம், ஆனால் அதிமுகவையும் திமுகவும் இன்னும் குறைந்தபட்சம் 50 ஆண்டுகளாவது அசுர பலத்துடன் இருக்கும். அதற்கு பின்னர் பாசக, காங்கிரசு என்ற கட்சிகள் தமிழ்நாட்டில் இருந்தால் ஆட்சியை பற்றி யோசிக்கட்டும். 

எம்.சி.ஆருக்கு பின் அதிமுக முடிந்ததுவிடும் என்று கனவு கண்டதை போல, கருணாநிக்கு பின் திமுக முடிந்து விடும் என கனவு காண்பது அடி முட்டாள் தனம்.   

திராவிட கட்சிகளை வீழ்த்துவோம் என்ற தேசிய கட்சிகளின் கனவு ஒருகாலமும் தமிழ்நாட்டில் எடுபடாது. அவ்வளவு சீக்கிரம் இந்த மண்ணில் தந்தை பெரியாரை விழ்த்திவிட முடியாது. 

Oct 10, 2014

குன்கா ஒரு மலிவான சட்ட வியாபாரி

செயலலிதா வழக்குக்காக கர்நாடக நீதிமன்றம் 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த பணத்தை செயலலிதா அபராதமாக செலுத்த வேண்டும் என குன்கா தீர்ப்பில் கூறியுள்ளார். 

நீதிமன்றம் என்ன இலாப நட்டம் பார்க்கும் வியாபார தளமா? சட்டம் தான் அதன் மூலதனமா? அதை வைத்து 6 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட குன்கா முயன்றிருக்கிறாரா?

ஒரு வேளை செயலலிதாவை நிரபராதி என கருதி இருந்தால் இந்த 6 கோடி ரூபாயை யாரிடம் வசூலித்து இருப்பார்? செயலலிதாவை குற்றவாளி என்று தண்டித்தால் நீதிமன்றத்திற்கு 6 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். நிரபராதி என விடுதலை செய்தால் 6 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். அப்படியானால் நீதிபதி இலாபத்தை பார்ப்பாரா நட்டத்தை  பார்ப்பாரா? 

நீதிதேவதையின் சின்னமான தராசை குன்கா தவறாக புறிந்துகொண்டாரோ? 

நல்ல நீதிபதி. வளர்க்க நீதித்துறையின் மாண்பு.  

எந்த அமைப்பும் மக்கள் விமர்சனத்துக்கு உள்ளாகும்போது தான் அதன் தவறுகள் சுட்டிக்காட்டப்படும். மேலும் அந்த அமைப்பை தூய்மைப்படுத்த முடியும். நீதிமன்றங்களும் அப்படி தான் இருக்க வேண்டும். இந்திய அரசியல் சாசனத்திலேயே பல மாற்றங்களை கொண்டு வந்து விட்டோம். ஆனால் நீதிமன்றங்கள் மட்டும் 3 கோடி வழக்குகளை தேக்கிவைத்துக்கொண்டு பெருமை படுகின்றன.

எனக்கு தெரிந்து தீபாவளிக்கு பள்ளிகளுக்கு 1 நாள் விடுமுறை, தனியார் நிறுவனங்களுக்கு 2 நாள் விடுமுறை. ஆனால் நீதிமன்றத்திற்கு 10 நாள் விடுமுறை. என்னத்த வெட்டி முறிச்சிட்டாங்கனு இவங்களுக்கு இத்தனை நாள் விடுமுறை?

இந்த அநியாயத்தை எல்லாம் கேட்க நாட்டில் ஆளே இல்லையா?

செயலலிதா 18 ஆண்டுகள் வழக்கை இழுத்தடித்தார் என்று வாய்கிழிய பேசுகிறோம். இந்த 18 வருடத்தில் நீதிமன்றத்தின் விடுமுறை நாட்கள் எத்தனை என கணக்கிட்டு சொல்ல முடியுமா? அப்படி பார்த்தால் செயலலிதாவை விட நீதிமன்றம் தான் அதிக வாய்தாக்கள் வாங்கி இருக்கும்.

நீதிமன்றத்தின் தவறுகளை தைரியமாக சுட்டிக்காட்டுங்கள். நீதிபதியை பாராட்டி எழுதும் அதே நேரம், நீதிபதியின் தவறுகளையும் சுட்டிக்கட்டுங்கள்.  

Oct 9, 2014

ரசினிகாந்த், ராமதாசு கனவு பலிக்காது

செயலலிதாவுக்கு எதிரான சட்ட தீவீரவாதம் குறித்து இந்தியாவே பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழக அரசியல் தலைவர்கள் ‘‘அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும்’’ என்று அடித்துக்கொள்கின்றனர்.

4 வருடம் சிறை, 6 வருடம் தேர்தலில் போட்டியிட முடியாது. அவ்வளவு தான்! செயலலிதாவால் 10 வருடத்திற்கு திரும்பி வர முடியாது.

கருப்பு எம்.சி.ஆர் நாம் தான் அடுத்த முதல்வர் என விசயகாந்த் கனவு காண்கிறார்

எப்படியாவது 2016ல் ஆட்சியை பிடித்தால் போதும், மெரினாவில் இடம் பிடித்துவிடலாம் என திமுக கனவு காண்கிறது.

பாமக ராமதாசின் பயம் தான் ரொம்ப சிரிக்க வைக்கிறது. செயலலிதா தேர்தல் பரப்புரை செய்வதை தடுக்க வேண்டுமாம். 2004ல் செயலலிதா தேர்தலில் போட்டியிடவில்லை. அந்த அனுதாப அலையிலேயே அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. அதேபோல 2016ல் செயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் மக்கள் அனுதாபம் பெருகுமே என ராமதாசு பயப்படுகிறார். (தனித்தமிழ் கொள்கையில் உறுதியாக இருக்கும் ராமதாசு மீது எனக்கு தனி மரியாதை உண்டு)

இவர்கள் திண்ணையை எதிர்பார்ப்பது நியாயம் தான். ஆனால் பாசகவும், காங்கிரசும் எதற்காக இப்போது துள்ளுகின்றன.

ரசினிகாந்தை வைத்து தமிழக பாரதிய சனதா ஆட்சியை பிடிக்க கனவு கண்டால் அது கனவாகவே தான் இருக்கும். ரசினி மட்டுமல்ல செயலலிதாவே பாரதிய சனதாவில் சேர்ந்தாலும் பாசகவால் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது.
  
தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை தவிர வேறு கட்சியின் ஆட்சியை கனவிலும் நினைக்காதீர்கள். அவ்வளவு சீக்கிரம் இந்த மண்ணில் பெரியாரை வீழ்த்திவிட முடியாது.

செயலலிதாவை இந்த நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஓரங்கட்டி விடலாம் என்று தமிழக அரசியல் கட்சிகள் மனக்கணக்கு போடுவது தவறு.

உச்சநீதிமன்றமே தண்டித்தாலும், தமிழக சட்டசபைக்கு செயலலிதாவின் தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

செயலலிதாவை நீதிமன்றத்தில் எதிர்கொள்வதை விட, மக்கள் மன்றத்தில் எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராக வேண்டும். அது தான் ஆரோக்கியமான அரசியலாக இருக்கும். 

வைகோ ஒரு தமிழரா?

திரு.வைகோவை பார்த்து இந்த கேள்வியை எழுப்ப மனம் கணக்கத்தான் செய்கிறது. ஆனால் தற்போதைய தமிழகத்தின் அரசியல் சூழலில் இதை கேட்காமல் இருக்க முடியவில்லை.

திராவிட இயக்கத்தின் கடைப்புலி என கலைஞர் கருணாநிதியாலேயே பாராட்டப்பட்டவர் வைகோ. ஈழத்தமிழர்களுக்கான வைகோவின் குரலை யாரும் சந்தேகிக்க முடியாது. தமிழக நலன்களின் வைகோவின் துணிச்சலான போராட்டங்களை எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிட்டிட முடியாது. வைகோவின் தமிழ் புலமையையும், ஈடுபாடும் உயரியவை. தமிழக தமிழர்களுக்கு மட்டுமல்ல உலக தமிழர்களுக்கு ஒரு இன்னல் வந்தாலும் முதலில் குரல்கொடுப்பவர் வைகோ தான். 

ஆனால் செயலலிதா விசயத்தில் மட்டும் வைகோவின் அரசியல் நாகரீகம் சற்று தரம் தாழ்ந்ததோ என்று சந்தேகம் எழுகிறது.


செயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பை வரவேற்ற வைகோ, அதேநேரம் தமிழக முதலமைச்சரை கைது செய்த முறையை கண்டித்திருக்க வேண்டும். செயலலிதாவும் ஒரு தமிழர் தான். செயலலிதாவுக்கு எதிரான சட்ட தீவிரவாதத்தை வைகோ வேடிக்கை பார்ப்பது விசித்திரமாக உள்ளது. தமிழருக்கு ஆதரவாக குரல்கொடுப்பவர் தனது அரசியல் எதிரிக்கு ஆதரவாக குரல் கொடுக்காதது அவரது நேர்மையை சந்தேகிக்க வைக்கிறது.

அரசியல் எதிரி வேறு, தமிழர் நலன் வேறு. இதை வைகோ புறிந்துகொள்ள வேண்டும். 

தமிழர் நலனில் உண்மையில் அக்கறை உள்ளவர் என்றால் வைகோ உடனடியாக செயலலிதா மீது திணிக்கப்படும் சட்ட தீவிரவாத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

தமிழக முதல் அமைச்சரை அவமதித்தது ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதித்த செயல். இதற்கு வைகோ தனது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்.

கலைஞருக்கு பின்னர் செயலிதாவை எதிர்க்கும் திறன் வைகோவுக்கு தான் உள்ளது. அதனால் தான் வைகோவிடம் இந்த அரசியல் நாகரீகத்தை எதிர்பார்க்கிறேன்.

ம்.சி.ஆரை எதிர்த்து அரசியல் செய்த கலைஞரின் அனுபவம் வைகோவிடம் தான் உள்ளது. அந்த அனுபவம் கலைஞருக்கு பின்னும் தமிழக அரசியல் களத்தில் தேவை. வைகோ அதை ஈடுசெய்வார் என நினைக்கிறேன்.

செயலலிதாவை அரசியல் எதிரியாகத்தான் வைகோ பார்க்க வேண்டுமே தவிர, மற்ற கட்சி தலைவர்களை போல பழி தீர்க்கும் எண்ணம் கூடாது. வைகோவின் அரசியல் நாகரீகத்தை மதிக்கும் ஒரு தமிழன் என்ற முறையில் இந்த பதிவு.

Oct 8, 2014

கர்நாடக நீதிமன்றத்தின் தீவிரவாதம்

செயலலிதாவை தீவிரவாதி என்று கருதி பிணை மறுத்திருக்கிறதா கர்நாடக உயர்நீதிமன்றம்? கர்நாடகாவில் செயலலிதாவுக்கு எதிராக சட்ட தீவிரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. விசாரணை முடிந்தவருக்கு சாமீன் வழங்க கோரினால் நாங்கள் ஊழலுக்கு எதிராக உள்ளோம் என்று சுய தம்பட்டம் அடித்திருக்கிறார் நீதிபதி சந்திரசேகரா

சந்திரசேகரா போன்ற நீதிபதிகள் உண்மையில் ஊழலுக்கு எதிராக இருந்தால் தங்கள் சொத்துப்பட்டியலை முதலில் பொதுத்தளத்தில் வெளியிடட்டும். வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரரிடம் வாங்கும் பணத்துக்கு ரசீது தரட்டும். 

நீதிமன்றம் என்பது நீதியை நிலைநாட்டும் அமைப்புதானே தவிர, ஓய்வுக்கு பின்னர் பதவி கிடைக்க சால்ரா போடும் தளம் அல்ல. 

இரு கட்சியினர் தங்கள் வாதத்தை முன்வைக்கும்போது பிரதிவாதங்களை கேட்டு நீதியை வழங்குவது தான் ஒரு நீதிபதியின் வேலை. ஆனால் சந்திரசேகரா ஊழலை எதிர்க்கிறேன் என்று கூறி சாமீன் மறுத்திருக்கிறார். சாமீன் அடிப்படை உரிமை இல்லையாம். இது ஒன்றே போதாதா இவர் ஒரு அடி முட்டாள் என்று கூற. இவர் எந்த சட்டக் கல்லூரியில் படித்தார் என்று தெரியவில்லை.

சாமீன் என்பது அடிப்படை உரிமை இல்லை என்று சொல்பவர் நீதிபதி பதவிக்கு தகுதியானவர் தானா என்று இந்திய அரசியல் அமைப்பு சாசனம் பரிசீலிக்க வேண்டும். சாமீனின் அர்த்தம் தெரியாதவர் எல்லாம் நீதிபதி பதவியில் இருப்பது தான் காலத்தின் கொடுமை.

அரசியலில் ஊழல்வாதிகள் பெருகிவிட்டார்கள் என்றால், நீதித்துறையில் முட்டாள்கள் பெருகிவிட்டார்கள்.

தண்டனை என்பது குற்றவாளி திருந்திவாழ கொடுக்கும் ஒரு வாய்ப்பு. ஆனால் குன்காவும், சந்திரசேகராவும் கர்நாடக ஊழல்வாதிகள் திருந்துவதற்காக செயலலிதாவை தண்டித்திருக்கிறார்கள்.  செயலலிதாவை தண்டித்தால் கர்நாடக ஊழல்வாதிகள் திருந்துவார்களா?

கிடைத்தவரை பிடித்து தண்டிப்பதால் மீதியுள்ளவர்கள் திருந்துவார்கள் என்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம். அதைத்தான் பெரும்பான்மையான இந்திய நீதிமன்றங்கள்  செய்கின்றன.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவிப்பதை தடுக்க வேண்டும் என்றால் முதலில் நீதிபதிகள் தங்கள் சொத்துப்பட்டியலை காட்ட வேண்டும். - அதை கேட்க எந்த இந்தியனுக்கும் திராணி இல்லை. 

ஒவ்வொரு வழக்கறிஞரும் கட்சிக்காரரிடம் பெரும் பணத்திற்கு உரிய ரசீது தரவேண்டும். - இதை கேட்க எந்த இந்தியனுக்கும் திராணி இல்லை.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த அம்பானி முதல் டட்டா, பிர்லா, மல்லையா, இன்னும் எத்தனையோ பண முதலாளிகள் உள்ளார்கள். அவர்கள் சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்ய வேண்டும். - இதை செய்ய எந்த இந்திய நீதிமன்றத்திற்கும் திராணி இல்லை.

ஊழலை விட, தவறான தீர்ப்புகள் தான் மனித குலத்துக்கு எதிரானது. தவரான தீர்ப்புகள் கொடுத்த நீதிபதிகள் தண்டிக்கப்பட்டதாக வரலாறு இல்லை ஏன்

  • 1. சொத்துக்கணக்கை காட்ட மாட்டார்கள், 
  • 2. வாங்கும் பணத்துக்கு உரிய ரசீது தரமாட்டார்கள், 
  • 3. தவறான தீர்ப்புகளுக்கு குறைந்தபட்சம் மன்னிப்பு கூட கேட்க மாட்டார்கள், 
  • 4. பள்ளிக் குழந்தைகளை விட அதிக நாட்கள் விடுமுறை வேண்டும். 
  • 5. தீர்ப்பு எழுத எத்தனை வாய்தாக்கள் வேண்டுமானலும் வாங்கிக்கொள்வார்கள், 
  • 6. தினமும் 50 ஆயிரத்துக்கும் குறையாமல் சம்பளம் வேண்டும். 
  • 7. நீதிமன்றத்தை நாடுபவர்கள் இவர்களை பார்த்து கூழை கும்பிடு போட வேண்டும். 
  • 8. சட்டம் படிக்க யாரையும் அனுமதிக்க மாட்டார்கள் ( 30 வயதுக்கு மேல் மருத்துவம், கலை, பொறியியல் என எது வேண்டுமானாலும் படிக்கலாம் ஆனால் சட்டம் படிக்க முடியாது.)


- ஊழலில் திளைப்பவர்களே ஊழலுக்கு எதிராக இருக்கிறார்களாம். 
வாழ்க இந்திய சனநாயகம்! 

வளர்க இந்திய நீதிபதிகளின் சட்ட தீவிரவாதம்!! 

பின்குறிப்பு:-
 செயலிதாவை எதிர்க்கிறேன், ஊழலை எதிர்க்கிறேன் என்ற பெயரில் சட்ட தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருக்காதீர்கள். நாளை நீங்களும் பாதிக்கப்படக்கூடும். அரசியலில் ஊழல்வாதிகள் பெருகிவிட்டதை போல நீதித்துறையில் பதவி வெறியர்கள் பெருகிவிட்டார்கள் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

Oct 3, 2014

பழி தீர்த்த கர்நாடக நீதிபதிகள் ?

செயலலிதா வழக்கில் நீதிபதி குன்காவை ஊடகங்கள் பக்கம் பக்கமாய் பாராட்டுகின்றன. ஆனால் நீதிபதி குன்காவின் தவறுகளை சுட்டிக்காட்ட பயப்படுகின்றன. 

நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கலாம் ஆனால் உள்நோக்கம் கற்பிக்கக்கூடாது என்பது நியாயம் தான். ஆனால் ஒரு நீதிபதி உள்நோக்கத்துடன் செயல்படும் போது அதை சுட்டிக்காட்ட ஏன் பயப்பட வேண்டும்?

நீதிபதி குன்கா அப்பட்டமாக பழி தீர்த்திருக்கிறார். இதற்கு குன்கா விளக்கம் அளித்தாக வேண்டும். 

‘‘18 ஆண்டுகள் நீதிமன்றத்தை இழுத்தடித்தாய், அதற்காக நீதிமன்றம் என்றால் என்ன என்பதை காண்பிக்கிறேன்’’ என ‘‘இது தான்டா போலீசு’’ என்ற பானியில் நீதிபதி குன்கா செயல்பட்டிருக்கிறார். குன்காவுக்கு ஆதரவாக கர்நாடக உயர்நீதிமன்றமும் செயல்படுவது தான் வேதனையாக இருக்கிறது.

நீதிபதி என்பவர் நடுநிலையாளராக இருக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரின் எதிரியாக செயல்படக்கூடாது. நீதிபதி குன்கா செயலலிதாவின் நேருக்கு நேர் எதிரியாக செயல்பட்டுள்ளார்.

செயலலிதாவை கடுமையாக விமர்சித்திருக்கிறார். குற்றவாளியை விமர்சிக்க எந்த நீதிபதிக்கும் அதிகாரம் இல்லை. செயலலிதாவை விமர்சித்தன் மூலம் ஒரு கீழ்த்தரமான அரசியல்வாதியாகி இருக்கிறார் குன்கா.

ஒருவரை குற்றவாளி என நீதிபதி கருதினால் அதற்கான விளக்கத்தை குற்றம் சாட்டப்பட்டவரிடம் கேட்க வேண்டும். அதற்கு விளக்கம் அளிக்க அவருக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். ஆனால் நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவருக்கு அவகாசம் அளிக்காமல் நேரடியாக தண்டனையை அறிவித்திருக்கிறார். இதன் உள்நோக்கம் என்ன என்பதை குன்கா விளக்க வேண்டும்.

ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சரை சிறைப்படுத்த போகிறோம். ஒரு தேசிய கட்சியின் தலைவரை சிறைபடுத்தப்போகிறோம் என்ற பகுத்தாயும் திறன் கூட இல்லாமல் ஒரு மரமண்டை போல செயல்பட்டிருக்கிறார் குன்கா.

தமிழக காவல் ஆணையரிடம் தமிழகத்தின் பாதுகாப்பு குறித்து கேட்காமல் தான்தோன்றித் தனமாக பழி தீர்த்திருக்கிறார் குன்கா.

குன்காவின் தவறுகளை மூடி மறைக்கும் விதமாக கர்நாடக உயர்நீதிமன்றம் செயல்பட்டிருக்கிறது. முதல் நாள் அரசு தரப்பு வழக்கறிஞர் இல்லாமல் வாதத்தை கேட்க முடியாது என்று கூறியிருக்கிறது. இது மிக மோசமான அநீதி. 

 சாமீனில் இரண்டு வகை உண்டு.

1. சாட்சிகளை கலைத்துவிடுவார், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தப்பித்து விடுவார். இந்த காரணங்களுக்காக ஒருவரை கைது செய்யும் போது நீதிமன்றம் உரிய சாமீனை கோரி அவரை உடனடியாக விடுதலை செய்கிறது.

2. கிழமை நீதிமன்றத்தில் விசாரணை முடிந்துவிட்டால் மேற்கொண்டு அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இல்லை. மேல்முறையீடு செய்யாமல் தலைமைறைவாகி விடுவார் என்பதற்காக தான் சாமீன் கோர வேண்டும். செயலலிதாவை பொறுத்தவரை மத்திய அரசின் இசட் பிரிவு பாதுகாப்பில் இருக்கிறார். மட்டுமல்லாது ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சராகவும் இருப்பவர். இப்படிப்பட்டவர் தலைமறைவாக 100% வாய்ப்பே இல்லை. 

இப்படிப்பட்டவரை உடனடியாக சாமீனில் விடுதலை செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் தயங்கியதன் காரணம் என்ன? பழிவாக்கும் நடவடிக்கையா என்பதை விளக்க வேண்டும்.

முதல் நாள் அரசு தரப்பு வாதம் இல்லாமல் வழக்கு நடத்த முடியாது என்று கூறிய நீதிபதி, இரண்டாம் நாள் அரசு தரப்பு வாதத்தை மட்டும் ஏற்றதன் நோக்கம் என்ன? ஏன் செயலலிதா தரப்பு வாதத்தை 1 நிமிடம் கூட கேட்கவில்லை. நீதிபதி யாருக்கு பயந்தார்? தனிப்பட்ட முறையில் இந்த வழக்கை விசாரிக்க எனக்கு விருப்பம் இல்லை என்று நீதிபதி சொன்னதன் காரணம் என்ன? உரிய காரணம் சொல்லாமல் வழக்கை ஒத்திவைக்கும் நீதிபதியின் மனநிலை என்ன?

நீதிபதி என்பவர் நீதிக்கு தலைவணங்குபவராக இருக்க வேண்டும். காரணமே இல்லாமல் இந்த வழக்கை விசாரிக்க எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்வது சரியா? இவருக்கு எல்லாம் நீதிபதி பதவி தேவையா?

நீதிபதி குன்கா மீதான குற்றச்சாட்டுகள் :-

நீதிபதி குன்கா செயலிதாவை ஒரு எதிரியாக சித்தரித்து இருக்கிறார். நீதிமன்றத்தின் அதிகார அத்துமீரலை செயலலிதா மீது செலுத்தி இருக்கிறார். தமிழக காவல் அதிகாரிகளிடம் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்காததால் தமிழக சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்கு தூண்டுதலாக இருந்து இருக்கிறார். செயலலிதாவை வலுக்கட்டாயமாக சிறையில் அடைத்து பழி தீர்த்து இருக்கிறார்.

கர்நாடக உயர்நீதினமன்றத்தின் மீதான குற்றச்சாட்டுகள் :- 

விடுமுறை நாளில் தீர்ப்பு அளித்தது தவறு என்ற வாதத்தை முறியடிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் நாடகம் ஆடியுள்ளது. முதல் நாள் அரசு தரப்பு வாதத்தை கேட்காமல் வழக்கை விசாரிக்க முடியாது என்று மனுதாரருக்கு நீதி மறுத்திருக்கிறது. 2ம் நாள் அரசு தரப்பு வாதத்தை மட்டும் கேட்டு ஒருதலைபட்சமாக நடந்துள்ளது. மனுதாரர்கள் மீது கீழ்த்தரமான சர்வாதிகாரத்தனத்தை காட்டியுள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம் 

எனது பொதுவான சந்தேகம் :-

நீதிபதி குன்கா தமிழ்நாட்டை பழிவாங்கியதன் நோக்கம் என்ன? நீதிபதி குன்காவுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஏதேனும் சொந்த பகை உள்ளதா? அப்படி இல்லை என்றால் தமிழக காவல் துறையிடம் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்காததன் காரணம் என்ன?

விடுமுறை காலத்தில் குன்கா தீர்ப்பு வழங்கியது தவறு என மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் விடுமுறை என்றாலும் செயலலிதா வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் 2 முறை விசாரித்தது என காண்பிப்பதற்காக நாடகம் ஆடியதன் அவசியம் என்ன? ஒரு தரப்பு வாதத்தை மட்டும் கேட்பது தான் விசாரணையா? இந்த வழக்கை விசாரிக்க எனக்கு விருப்பம் இல்லை என்று நீதிபதி சொல்வது தான் விசாரணையா?

காவிரி பிரச்சனை இருப்பதால் வழக்கை கர்நாடகாவில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு செயலலிதா தரப்பு கோரியதன் காரணத்துக்காக தான் கர்நாடக உயர்நீதிமன்றம் இப்படி பழிவாங்கி உள்ளது என்பது எனது ஆழமான சந்தேகம். இதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் பொது தளத்தில் உரிய விளக்கம் அளிக்க முன்வருமா? அல்லது இன்னும் தனது போலி சர்வாதிகாரத்தை பயன்படுத்துமா?

நீதிபதிகள் சர்வாதிகாரிகள் அல்ல. அதுபோல விமர்சனத்துக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஒரு நீதிபதியை புகழ்ந்து எழுத எவ்வளவு உரிமை உள்ளதோ, அதே போல அவரது தவறுகளை சுட்டிக்காட்டவும் உரிமை உள்ளது.

குன்காவின் போலி வீரத்தை ஊடகங்கள் புகழ்ந்து தள்ளும் போது, குன்காவின் கீழ்த்தரமான பழிவாங்கும் நடவடிக்கையை சுட்டிக்காட்ட வலைத்தளங்களாவது பயன்படுகிறதே என நினைக்கும் போது சனநாயகத்தின் மீது  நம்பிக்கை துளிர்கிறது.

கர்நாடக நீதிபதி குன்கா, ரத்தினகாலா ஆகியோர் மீது குறைந்தபட்சம் துறைரீதியான நடவடிக்கையாவது எடுக்க வேண்டும்.

Oct 1, 2014

கர்நாடக நீதிமன்றத்தின் அயோக்கியதை

 ஒரு நீதிமன்றம் இவ்வளவு முட்டாள் தனமாக நடந்துகொள்ளும் என்பதற்கு செயலலிதா வழக்கு மிகச்சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.

இங்கு கர்நாடகா & தமிழ்நாடு பகையை ஊட்டுவதற்காக இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது என யாரும் தவறாக அர்த்தம் கொள்ளக்கூடாது. இது போன்ற சம்பவம் தமிழ்நாட்டில், கேரளாவில், பீகாரில் ஏன் இந்திய உச்சநீதிமன்றத்தில் நடந்திருந்தாலும் அதை சுட்டிக்காட்ட உரிமை இருக்கிறது என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

கர்நாடக நீதிமன்றமும் செயலலிதாவும் நீயா&நானா கபடி விளையாடி உள்ளனர். இப்படி 100 கோடி இந்திய குடிமக்களையும் கேவலப்படுத்தியுள்ளார்கள். இதில் நீதிமன்றத்தின் செயல்பாடு தான் மிகமோசமாக உள்ளது. ஒரு நீதிமன்றம் எப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்பதற்கு கர்நாடக நீதிமன்றம் உதாரணமாக உள்ளது.

நீதிபதி குன்கா ஒரு கீழ்த்தரமான சர்வாதிகாரி போல செயல்பட்டிருக்கிறார். அவரை காப்பாற்ற கர்நாடக உயர்நீதிமன்றமும் நாடகமாடி வருகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நீதிபதிகள் விருப்பு வெறுப்புகளை கடந்து, உணர்ச்சிவயப் படாதவர்களாய், குறிப்பாக தலைக்கணம் இல்லாதவர்களாய் இருக்க வேண்டும். ஆனால் குன்காவின் தலைக்கணம் நீதிமன்ற காவலர்களையும், வழக்கறிஞர்களையும் எச்சரித்ததில் இருந்து துவங்குகிறது.

செயலலிதா வரும் போது யாரும் எழுந்து நிற்கக்கூடாது என அறிவித்திருக்கிறார். ஒருவருக்கு மரியாதை கொடுப்பது  என்பது தனி மனித உரிமை. அதை கேள்வி கேட்ட நீதிபதி குன்காவின் மன நிலையை தலைக்கணம் என்று தானே சொல்ல முடியும்!.

செயலலிதா ஒரு அரசாங்கத்தின் முதல் அமைச்சர் என்பதை மறந்து செயல்பட்டிருக்கிறார். நான் செயலலிதாவுக்கு மரியாதை கொடுக்க சொல்லவில்லை. முதல் அமைச்சர் என்ற மாண்புமிகு பதவிக்கு தான் மரியாதை கொடுக்க சொல்கிறேன். 

நீதிபதி குன்கா தமிழ்நாட்டு முதல் அமைச்சரையும் மதிக்கவில்லை. தமிழ்நாட்டையும் மதிக்கவில்லை. தீர்ப்பு வெளியாவதை ஒட்டி கர்நாடக தலைமை காவல் ஆணையரிடம் ஆலோசித்துள்ளார். ஆனால் தமிழக காவல் துறையிடம் ஆலோசிக்கவில்லை. கர்நாடகாவின் பாதுகாப்பில் அக்கறை எடுத்துக்கொண்ட நீதிபதி குன்கா தமிழ்நாட்டின் பாதுகாப்பை அலட்சியம் செய்துள்ளார். இதிலிருந்தே தெரியவில்லையா இவர் சுயநலவாதி என்று. 

தமிழ்நாட்டு காவல் துறையிடம் பாதுகாப்பு பற்றி ஆலோசிக்காதது மிகப்பெரிய தவறு. தமிழ்நாட்டில் எவன் அடித்துக்கொண்டு செத்தால் எனக்கு என்ன? கர்நாடகா பாதுகாப்பாக இருந்தால் போதும் என்ற எண்ணத்தில் தானே நீதிபதி குன்கா செயல்பட்டிருக்கிறார்.

ஒருவரை குற்றவாளி என்று கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் அவர் குற்றவாளி ஆக மாட்டார். அவருக்கு மேல் முறையீட்டு வாய்ப்புகள் உள்ளன. அங்கு அவர் நிரபராதியாகலாம். இது எல்லா கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியும். இந்த அடிப்படை வீதி கூட தெரியாமல் நீதிபதி குன்கா செயல்பட்டிருக்கிறார். 

நான் உங்களை குற்றவாளி என்று தீர்மானித்திருக்கிறேன் என்று நீதிபதி அறிவித்ததும். பின்னர் அது குறித்து குற்றவாளிகளின் இறுதி வாதத்தை கேட்க வேண்டும். இதை நீதிபதி குன்கா செய்ய தவறியிருக்கிறார். இதில் குன்காவின் கீழ்த்தரமான சர்வாதிகார குணம் வெளிப்பட்டிருக்கிறது.

நீங்கள் தற்போது ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சராக இருக்கிறீர்கள். உங்களை உடனடியாக சிறையில் அடைப்பதால் உங்களது கடமைகள் ஏதேனும் தடைபடுமா? அல்லது அவசர பணிகள் தடைபடுமா? என செயலலிதாவிடம் கேட்டிருக்க வேண்டும். & இதை செய்ய தவறியதன் மூலம் மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் என்ற பதவியை மதிப்பற்றதாக நினைத்திருக்கிறார் குன்கா.

செயலலிதா மீதான குற்றத்தை ஒரு கொடூர குற்றமாக சித்தரித்திருக்கிறார். இது மிகப்பெரிய உளவியல் தாக்குதல். இந்தியாவில் 100% பேர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருக்கிறார்கள். இதில் நீதிபதி குன்காவும் அடக்கம். இதை எந்த நீதிமன்றத்திலும் நிரூபிக்க முடியும். இப்படிப்பட்ட தவறுகளை கொடூர குற்றமாக சித்தரித்ததன் மூலம் தன் பழிவாங்கும் போக்கை குன்கா செய்திருக்கிறார்.

குன்கா தான் இப்படி கீழ்த்தரமாக நடந்துகொண்டார் என்றால், கர்நாடக உயர்நீதிமன்றம் அவரை காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நீண்ட விடுமுறை காலத்தில் தீர்ப்பு அளித்தது மனித உரிமை மீறல் என நீதிபதி குன்கா மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதை முறியடிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் விடுமுறை காலத்தில் செயலலிதா மனுவை 2 நாள் விசாரிப்பது போல விசாரித்து நாடகமாடியுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காலையில் அரசு வழக்கறிஞர் இல்லாமல் வாதத்தை கேட்க முடியாது என்று நீதிபதி மறுத்து விட்டார். மாலையில் நாளை விசாரிக்கப்படும் என பதிவாளர் அறிவிக்கிறார். அடுத்த நாள் காலை அரசு வழக்கறிஞரின் வாதத்தை மட்டும் கேட்டு நீதிபதி வழக்கை ஒத்தி வைக்கிறார். இதில் எங்கு நீதி உள்ளது என்று யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

நீதிபதிகள் என்பவர்கள் சாவி கொடுத்த பொம்மைகளை போல செயல்படக்கூடாது. கொஞ்சம் பகுத்தாயும் திறமை நீதிபதிகளுக்கு வேண்டும். பொதுவாக மருத்துவர்கள் எவ்வளவு மேல்படிப்பு படித்துவிட்டாலும் இன்னும் பயிற்சி எடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம் என்பார்கள். அதே போல தான் வழக்கறிஞர்களும். வழக்கு, சட்டம் இவைகள் எல்லாம் நாள்தோறும் சூழலுக்கு சூழல் பகுத்தாயக்கூடியது. ஆனால் பல கான்வென்ட் நீதிபதிகள் செக்கு மாடுகளாகவே உள்ளார்கள். அதனால் தானே இந்திய குடியரசு தலைவருக்கே பிடிவாரண்ட் கொடுத்தார்கள். 

இப்படிப்பட்ட நிலைகள் மாற வேண்டும். குன்காவை போன்ற ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ நீதிபதிகள் திருந்த வேண்டும். அப்போது தான் இந்தியா வல்லரசாகும். இல்லாவிட்டால் அரசியலை விட நீதித்துறையில் தான் சாக்கடை நாற்றம் அதிகரிக்கும்

பின்குறிப்பு : இந்த கட்டுரையில் தவறுகள் ஏதேனும் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அயோக்கியதை என்ற வார்தை மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தகுதியின்மை என்ற பொருளை குறிக்கிறது.

Popular Posts