Nov 7, 2010

ஒவ்வொரு பத்திரிக்கையாளனும் வெக்கப்பட வேண்டிய விசயம்

லஞ்சம் வாங்கக்கூடாது, இயன்றவரை தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை கட்டுப்படுத்திவிடவேண்டும் என்ற கொள்கை உடையவர் அந்த வட்டாட்சியர்.

தீபாவளிக்கு அந்த அதிகாரியை கோவை நிருபர் பட்டாளம் சந்தித்தது.

தனக்கு வாழ்த்து சொல்ல வந்ததாக எண்ணிய வட்டாச்சியருக்கு அதிர்ச்சி.

‘‘இதற்கு முன்பு இருந்த வட்டாச்சியர்கள் தீபாவளி தோறும் நிருபர்களுக்கு அன்பளிப்பாக போனஸ் தொகை தருவார்கள். அதுபோல நீங்களும் ஏற்பாடு செய்யுங்கள் என்றுள்ளனர்.’’

அது என்ன நிருபர் போனஸ் தொகை என்று அதிகாரிகளிடம் விசாரித்தபோது அதிர்ச்சியடைந்து விட்டார் தாசில்தார்.

நிருபர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.1000 கவரில் வைத்து கொடுக்கவேண்டும். 150 நிருபர்கள் உள்ளார்கள், நிருபர்களுக்காகவே பொதுமக்களிடம் ஆண்டுதோறும் தீபாவளி வசூல் (லஞ்சம்) வாங்குவோம். என்றுள்ளனர் ஊழியர்கள்.

அதிர்ச்சியடைந்த தாசில்தார் சில நிருபர்களை அழைத்து தனக்கு சம்பளம் 20 ஆயிரத்துக்கும் குறைவுதான். பணியில் வேலைக்கு சேர்ந்து 34 வருடங்கள் ஆகிறது. இதுவரை யாரிடமும் லஞ்சம் வாங்கியதில்லை. என்னால் தீபாவளிக்கு வாழ்த்துக்களை மட்டும் தான் சொல்ல முடியும். வேறு எதாவது கையெழுத்து போன்ற உதவிகள் இருந்தால் வாருங்கள் செய்து தருகிறேன் என்றுள்ளார்.

நீங்கள் ரொம்ப யோக்கியமான அதிகாரி என்பது எங்களுக்கு தெரியும். தாசில்தார் அலுவலகத்துக்குள் இருக்கும் கடைகளில் இருந்து உங்களுக்கு எவ்வளவு பங்கு வருகிறது என்பதும் எங்களுக்கு தெரியும். தீபாவளிக்கு பின்னர் பத்திரிக்கையில் செய்தியை பார்த்துக்கொள்ளுங்கள் என்று மிரட்டி சென்றுள்ளனர்.

இந்த மிரட்டல் குறித்து வேறு சில பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் தனது உயர் அதிகாரிகளிடமும் கூறியுள்ளார்.

அவர்களிடம் இருந்து வந்த பதில் தான் அதை விட அதிர்ச்சி

பத்திரிக்கையாளர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். கலெக்டர் அலுவலகத்தில் இருந்தே கவர் போகும்போது உங்களுக்கு கொடுக்க என்ன தயக்கம். உடனடியாக ஏற்பாடு செய்து பத்திரிக்கையாளர்களுக்கு கவரை கொடுங்கள் என்றுள்ளனர்.

34 ஆண்டுகளாக என் உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரையும் சமாளித்து, லஞ்சம் வாங்காமல் இருந்து விட்டேன். இந்த பத்திரிக்கையாளர்களை எப்படி சமாளிப்பது?

நீண்ட யோசனைக்கு பின்னர் முடிவெடுத்தார் தாசில்தார்.

தனது ஊழியர்களை அழைத்து வண்டியை எடுங்கள் இன்ஸ்பெக்சன் போகவேண்டும். அப்படியே மொய் கவரையும் ரெடி பண்ணுங்கள் என்றார்.

நிருபர்களுக்கு ரூ.500 கவரில் கொடுக்கப்பட்டது.

....................................

இது ஒரு அதிகாரியின் நிலையல்ல, தமிழகம் முழுவதும் உள்ள பல அதிகாரிகளுக்கும் இதே நிலை தான்.

ஒரு பத்திரிக்கையாளன் என்ற முறையில் மிகவும் வெட்கப்படுகிறேன்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை.

லஞ்சத்தை நிச்சயம் ஒழிக்க முடியாது.

7 comments:

  1. பாஸ்!
    நானும் ஆந்திரபிரபா,தினத்தந்திலல்லாம் ஒர்க் பண்ணியிருக்கேன்.இந்த மாதிரி சந்தர்ப்பம்லாம் நிறைய வரும்.

    ஆனால் நமக்கு இந்த கவர் வாங்கறது, அவிகளுக்கு கவர் வாங்கிட்டு போறதுல்லாம் ஒத்துவராது.

    அரசாங்கம் நிருபர்களுக்கு தர்ர ஹவுசிங் சைட்டை கூட வேணாம்னுட்டன்

    நாளைக்கு அந்த அரசாங்கத்தை எப்படி பாஸ் நேர்மையா விமர்சிக்க முடியும்?

    ReplyDelete
  2. வணக்கம் சித்தூர் முருகேசன்
    //கவர் வாங்கறது, அவிகளுக்கு கவர் வாங்கிட்டு போறதுல்லாம்// அருமையாக சொல்லியுள்ளீர்கள்.
    பத்திரிக்கைதுறையில் இருக்கும் இந்த அவலத்துக்கு முக்கிய காரணம் பத்திரிக்கை நிறுனங்கள் தான். இது குறித்து அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.
    நேர்மையான ஆற்றல் மிக்க ஒரு சர்வதேச ஊடகத்தை உருவாக்க வேண்டும். அது தான் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு.
    என்ன செய்வது? பத்திரிக்கை துறை அரசியல்வாதிகளின் கையில் உள்ளது. பணியாளர்களால் என்ன சாதித்துவிட முடியும்?

    ReplyDelete
  3. ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று பீற்றிக்கொள்ளும் பத்திரிக்கையாளர்கள் இவ்வாறு கீழ்த்தரமாக நடந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது..தங்களது இந்த பதிவை எனது வலைத்தளத்தில் ( www.marmayogie.blogspot.com) பதிந்து வெளியிட அனுமதி உண்டா?

    ReplyDelete
  4. வணக்கம் மர்மயோகி
    பத்தரிக்கை துறையின் இதுபோன்ற அவலங்களுக்கு பத்திரிக்கை நிறுவனங்கள் தான் முக்கிய காரணமாக உள்ளன.

    அதுகுறித்த விரிவான விவரங்களை அடுத்த பதிவில் தருகிறோம்.

    தாரளமாக உங்கள் வலைபூவில் பகிர்ந்துகொள்ளலாம்.

    ReplyDelete
  5. தங்களது இந்த பதிவை எனது வலைத்தளத்தில் ( www.saigokulakrishna.blogspot.com) பதிந்து வெளியிட அனுமதி உண்டா?


    (Taken as an advantage)
    தமிழ்மலர் கூறியது...

    தாரளமாக உங்கள் வலைபூவில் பகிர்ந்துகொள்ளலாம்.
    Thank you!
    Sai Gokulakrishna

    ReplyDelete
  6. நன்றி நண்பரே..
    உங்களது பதிவு www.marmayogie.blogspot.com இல் பதிவு செய்யப்பட்டுள்ளது..

    ReplyDelete
  7. நண்பரே... ஒரு செய்தி பத்திரிகையாளராய் நான் முதன் முதலில் 1997ம் ஆண்டில் குறிப்பிட்ட மலர் பத்திரிகையில் காலடி எடுத்து வைத்த போது, வெ-க-ச-ம் என்ற பூனூல் போட்ட போட்டோகிராபர் நாய் ஒன்று தீபாவளி இனாமாய் போத்தீஸ் தந்த கைக்கடிகாரத்தை பரிசாக பெற்றது. இதை நான் அப்பாவித்தனமாக சப்-எடிட்டரிடம் சுட்டிக்காட்டிய போது வந்த விளைவுகள் ஏராளம்.

    இதே போன்று பல சம்பவங்களை கண்முன்னே பார்த்திருக்கிறேன். நானும் பத்திரிகையாளராக இருந்திருக்கிறேன். நேர்மையான பத்திரிகையாளர் நாய் பிழைப்பு தான் பிழைக்க வேண்டும். எங்கள் எஜமானியாக இருந்தவருக்கு அப்பளம், வடகம் வரை இலவசமாய் வாங்கிக்கொடுப்பதில் இருந்து எஜமானருக்கு குற்றாலத்தில் உல்லாசமாய் குளிக்க எண்ணெய் தேய்த்து விடுவது வரையில் பல பணிகளை செய்த சப்-எடிட்டர் தி-க-ஜன் வரையில் பலரை நான் பார்த்திருக்கிறேன்...

    தமிழகம் முழுவதுமே... பத்திரிகையாளர் வேலை என்பது இன்னொரு அரசு அதிகாரி வேலை போல ஆகி விட்டது வேதனைக்குரியது.

    இப்போது நான் மன நிம்மதியுடன் இருக்கிறேன். யாருடைய நெருக்குதலுக்கும் அடிபணிய வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. ஏனென்றால் நான் இப்போது பத்திரிகையாளன் இல்லை.

    இன்னெரு விசயம்... முழுநேர பத்திரிகையாளர் மட்டுமல்ல உள்ளூரில் பகுதிநேரமாக பத்திரிகையாளர் பணியாற்றுபவர்கள் கூட கவர் வாங்காமல் செய்தி சேவை செய்வதில்லை. விளம்பரம் தராத நிறுவனங்கள் மீது அவதூறு பரப்புவது, தனியார் கல்வி நிறுவனங்களை மிரட்டி காசு பார்ப்பது வரையில் இவர்களின் சேவை தொடர்ந்து வருகிறது.

    இந்தியாவில் பத்திரிகைகள் ஜனநாயகமாக செயல்படுவதாக ஒபாமா தெரிவித்திருக்கிறார். ஜனநாயக இந்திய பத்திரிகை உலகில் இவர்கள் செல்வ சீமான்களாக,, உல்லாசத்தில் மிதக்கட்டும்.

    ReplyDelete

Popular Posts