Oct 16, 2014

காவல் நிலையத்துக்கு போயிடாதீங்க...

இந்த நாட்டில் அத்தனை துறைகளையும் சீர்திருத்தப்படுகின்றன. நீதித்துறையும், காவல்துறையும் இன்னும் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் எப்படி இருந்ததோ, அதைவிட மோசமாக இருக்கின்றன.

இலக்கு வைத்து வழக்கு பதிவு செய்யும் கொடுமை உலகில் எங்காவது இருக்கிறதா? தமிழ்நாட்டில்  மட்டும் தான் இந்த கொடுமை அரங்கேறி வருகிறது. 

காவல்துறை இல்லை என்றால் குற்றவாளிகள் பெருகி விடுவார்கள் என்பது தான் பலரின் வாதம். ஆனால் இந்த காவல் துறையால் தான் குற்றவாளிகள் பெருகிவருகிறார்கள் என்பது பலருக்கும் தெரியாது.

மதுபான கடைக்கு இலக்கு நிர்ணயித்தால் எதிர்த்து குரல் கொடுக்கிறோம். அதை விட கொடுமையானாது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய இலக்கு நிர்ணயிப்பது. இந்த ஒரு இலக்கால் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் உருவாக்கப்படுகிறார்கள். 

போலீசார் கையில் எதற்கு லத்தி என்ற கேள்விக்கே இன்னும் விடை கிடைக்கவில்லை. இந்த நிலையில் அத்தனை உதவி காவல் ஆய்வாளர் கையிலும் துப்பாக்கியை கொடுத்திருக்கிறார்கள். 

தற்காப்புக்கு தான் துப்பாக்கி என்றால், பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு துப்பாக்கியுடன் செல்லவேண்டும். குறைந்தபட்சம் சமபல ஆயுதமாவது கையில் வேண்டாமா?

ராமநாதபுரம் சம்பவத்தில் பலரும் குற்றவாளி காவல் ஆய்வாளர் காளிதாசுக்கு எதிராக தான் போராடுகிறார்கள். ஆனால் குற்ற சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த காவலர்கள், காளிதாசை காப்பாற்ற முயன்ற ஆய்வாளர், காவல் கண்காணிப்பாளர், தினமலர் பத்திரிக்கை போன்றவற்றிக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்ய யாரும் குரல் கொடுப்பது இல்லை.

காளிதாசு என்ற உதவி ஆய்வாளர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த காவல்துறையையே குறை சொல்லலாமா என பலர் கேட்கலாம். விசாரனை கைதியை சுட்டவுடன் காளிதாசு மீது வழக்கு பதிவு செய்து முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால் காவல்துறைக்கு ஒரு ராயல் சலியூட். ஆனால் என்ன செய்தார்கள்?   

காளிதாசு கொலையாளி என்றால் காளிதாசின் குற்றத்தை மறைக்க காவல்துறையும், தினமலர் பத்திரிக்கையும் முயன்று உள்ளது. இவர்களை எல்லாம் யார் தண்டிப்பது?

 இந்த நாட்டில் ஒரு மாநில முதல் அமைச்சரை நிமிட பொழுதில் சிறையில் அடைக்க முடியும். ஆனால் கொலை குற்றம் செய்த காவல் ஆய்வாளர் மீது குறைந்த பட்சம் வழக்கு கூட பதிவு செய்ய முடியாது. சட்டம் அனைவருக்கும் சமமாம். வாழ்க இந்திய சனநாயகம், வளர்க்க இந்தியாவின் சட்ட தீவீரவாதம்.

பொதுமக்களுக்கு ஒரே ஒரு அலோசனை : தயவு செய்து காவல் நிலையத்துக்கு போயிடாதீங்க, அப்படியே போக வேண்டிய நிலை வந்தாலும் சுயமரியாதையை கழட்டி வைத்துவிட்டு போங்க...

No comments:

Post a Comment

Popular Posts