Feb 22, 2012

முல்லைப்பெரியாறு கொலைநடுங்க வைக்கும் படுபாதகம்


மிகவும் வருத்தத்துடனும், பீதியுடனும் இந்த பதிவை எழுதுகிறேன். 

முல்லைப்பெரியாறு பிரச்சனையை புதிய கால்வாய் என்ற திட்டத்தின் மூலம் சுமூகமாக தீர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இதற்காக கேரள தமிழக மக்கள், அரசியல்வாதிகள், நிபுணர்கள் ஆகியோரை சந்தித்து பேசி வருகிறோம். பல மகிழ்சியான கருத்துரைகளை கடந்து சில வேதனையான கருத்துக்களையும் பகிராமல் இருக்க முடியவில்லை.

முல்லைப்பெரியாறு என்ற பிரச்சணைக்கு சிலர் மறுமுகம் கொடுத்து வருகின்றனர். இதை இருமாநில மக்களும் எப்படி முறியடிப்பார்கள் என்ற பீதி இப்போதே கொலைநடுங்க வைக்கிறது.

தங்கள் இலக்கை அடைய உயிர்பலிக்கும் தாயாரக இருக்கும் சில குரூர எண்ணக்காரர்களை பற்றி தான் இங்கு எழுதுகிறேன். 

முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையை வைத்து கேரளாவில் சில இனவெறியர்கள் ஒரு இலக்கை சாதிக்க துடிக்கின்றனர். 

திருவிதாங்கூர் அரசர் செய்த வரலாற்று பிழையை திருத்துகிறோம் என்ற பேரில் எந்த பிரச்சனைக்கும் தாயர் என்ற மனநிலையில் உள்ளனர்.

பெரியாறு முழுக்க முழுக்க கேரளாவுக்கு சொந்தமானது. ஆங்கிலேய அரசு திரவிதாங்கூர் மன்னரை மிரட்டி நதியை அணை கட்டி திருப்பி விட்டது. அதை நாங்கள் மீட்டெடுபோம் என்று விசமத்தை பரப்பி வருகிறார்கள். இதற்கு கேரளாவின் முக்கிய பத்திரிக்கையும் உடந்தையாக கொம்பு சீவி வருகிறது. எவ்வளவு உயரிபலி கொடுத்தேனும் நதியை மீட்பது ஒன்று எங்கள் குறிக்கோள் என்கின்றனர். 

அதே பாணியில் தமிழகத்திலும் சில அரசியல்வாதிகளும் ஊடகங்களும் உள்ளன. பீர்மேடு, தேவிகுளம் பகுதியை மீட்டுவிட வேண்டும் என கொலைவெறி பிடித்து அலைகிறார்கள். இதற்காக இன கலவரத்தை ஏற்படுத்தவும் தயாராகி வருகிறார்கள். (அபாயகரமான உண்மை என்பதால் அந்த அரசியல்வாதிகள், பத்திரிக்கைகள் பெயரை குறிப்பிடவில்லை)  

கேரள ஊடகங்களையும் அரசியல்வாதிகளையும் பார்த்து ஒற்றை கேள்வியை முன் வைத்தோம்.

2006ல் தண்ணீரை 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தது. ஆனால் அதை கேரளா மதிக்கவில்லை. அதே போல 2012 ல் கேரளாவுக்கு சாதகமாக புதிய அணை கட்டிக்கொள்ளலாம் என்று தீர்ப்பு வந்தால் அதை தமிழகம் ஏற்றுக்கொள்ளுமா? 

ஒருவர் சட்டென உச்சசநீதின்றம் தீர்ப்பளித்தால் மதித்து தானே ஆக வேண்டும் என்றார். பின்னர் ஏன் 2006ல் நிறைவேற்றவில்லை என்ற கேள்விக்கு மவுனம் மட்டுமே பதில்.

நீதிமன்ற தீர்ப்பை யாரும் மதிக்கப்போவதில்லை பின்னர் எதற்கு இவ்வளவு பொருட்செலவில் விவாதங்கள்?    நிபுணர் குழுவையும் பத்திரிக்கைகளையும் வாழ வைக்கவா?

நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னனியில் ஒரு இனக்கலவரத்தை தூண்டி தங்கள் தாகத்தை தீர்த்துக்கொள்ள இரு பிரிவினரும் தயாராக இருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கொம்பு சீவிக்கொண்டு இருக்கிறார்கள். 

தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும் கலவரம் வெடிக்க காத்திருக்கிறது. இரு பிரிவினரும் வரலாற்று பிழையை திருத்தி தங்கள் ஆற்றையும், பகுதியையும் மீட்டெடுக்க தயாராகி வருகிறார்கள். இந்த போருக்கு துவக்கம் இட நீதிமன்ற தீர்ப்பு வரவேண்டும். தீர்ப்பு வரும் நாள் போருக்கான மணி அடித்துவிடும். ( எத்தனை மக்களுக்கு மரண மணியோ?) 

பீர்மேடு, தேவிகுளத்தை தமிழகம் மீட்கப்போவதும் இல்லை, பெரியாற்றை கேரளம் மீட்கப்போவதும் இல்லை. ஆனால் ஆயிரக்கணக்கான மக்களை கலவரக்காரர்களும் இராணுவமும் கொன்று குவிப்பது மட்டும் உண்மை. 

கம்பம், கூடலூர், குமுளி, வண்டிப்பெரியாறு, பீர்மேடு, மூணாறு பகுதியில் வாழும் அப்பாவி மக்களுக்கு சமாதி கட்டும் அந்த கோரத்தை அரங்கேற்ற நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள். இதை மானுடம் பேசும் நல்லுலகம் எப்படி முறியடிக்கும் என்று தெரியவில்லை....

வருத்தங்களுடன்...

No comments:

Post a Comment

Popular Posts