Sep 4, 2014

தமிழகத்தை இலங்கையுடன் இணைத்து விடலாம்

தனிஈழம், கச்சத்தீவு, மீனவர் பிரச்சனை, தமிழ்தேசியம் இப்படி தமிழர்களின் தீராத பிரச்சனையை தீர்க்க இதை விட சிறந்த யோசனை இருக்குமா?. 

  தனிஈழம், கச்சத்தீவு குறித்து வீட்டில் குடும்பமாக விவாதித்துக் கொண்டிருந்தோம்.  இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் ஒன்பது வயது மகன் அறிவு பட்டென ஒரு யோசனையை சொன்னான். 
  கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்பதை விட, தமிழகத்தை இலங்கையுடன் இணைத்துவிடலாமே!. குழந்தையின் இந்த எதார்த்த பேச்சு எங்களை வேடிக்கையாக யோசிக்க வைத்தது.  

  தமிழகத்தை இலங்கையுடன் இணைத்தால் தமிழர்களின் அத்தனை பிரச்சனைகளும் தீரும் என்று நினைக்கிறேன். தமிழகத்தில் 8 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். இலங்கையில் சிங்களவர்களோ 2 கோடி பேர் மட்டுமே. தமிழகத்தை இலங்கையுடன் இணைப்பதால் தமிழர்கள் பெரும்பான்மையினராகி விடுவோம். சிங்களவர்கள் சிறுபாண்மையினராகி விடுவார்கள். அப்புறம் இலங்கையில் தனிநாடு கேட்டு சிங்களர்கள் தான் போராட வேண்டும். அதை இனத் தீவிரவாதம் என்று ஒடுக்க பெரும்பான்மையினராக இருக்கும் தமிழகர்களுக்கு மிக எளிதானது. 

 தமிழர்கள் தான் இலங்கையின் அத்தனை அதிகாரங்களிலும் இருப்பார்கள். சிங்களவர் எந்த காலத்திலும் இலங்கையின் சனாதிபதியாக முடியாது. தமிழக முதல்வர் சனாதிபதியாகவிடுவார். இந்தியாவில் சிறுபான்மையினராக இருப்பதை விட இலங்கையில் பெரும்பான்மையினராக இருக்கலாமே. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே பெரும்பாண்மையினர் கருத்து தானே எடுபடுகிறது. தமிழர்கள் கொஞ்சம் மாற்றி யோசித்துப் பாருங்கள்.

 இந்த கருத்துக்காக தடா, பொடா, குண்டர், தேசதுரோகம் எதுவரும் என்று தெரியவில்லை. பயம் இருக்கிறது. ஆனாலும் பயத்தை தான்டி மன உணர்வுகள் வெளிப்பட்டு விடுகிறது. 

 இந்த கருத்துக்கள் யார் மனதை புண்படுத்தியிருந்தாலும் மன்னித்துக்கொள்ளுங்கோள். இப்படி யோசிப்பது தேச துரோகம் என்றால் அதற்கும் சேர்த்து ஒரு மன்னிப்பு. 

‘‘நமக்கு வாய்த்த அடிமைகள் மிகமிக திறமைசாலிகள், ஆனால் வாய் தான் கொஞ்சம் நீளம்!’’ தமிழர்களைப் பார்த்து சும்மாவா சொல்லி வைத்தார்கள்?  இந்தியா வாழ்க. இலங்கை வாழ்க!, இன்னும் ஒரு படி மேலேபோய் இலங்கையின் இறையாண்மையும் வாழ்க!! அப்புறம் என்ன? விடுங்க சாமி என்னை! எதோ கூலி வேலை செய்து பிழைத்துக்கொள்கிறேன். 

பின் குறிப்பு : பெரும்பாண்மையினர் சிறுபாண்மையினரை அடக்கும் ஆட்சி முறைக்கு எதிரான உதாரண கட்டுரை மட்டுமே இது. மாறாக வேறு அர்த்தம் கொண்டால் அதற்கு நீங்களே பொறுப்பு.

1 comment:

  1. தமிழ்நாட்டை இலங்கையுடன் இணைப்பது நடக்காத செயல்.

    வேண்டுமானால், இலங்கையை இந்தியாவுடன் இணைத்து விடலாம்.

    இலங்கையிலுள்ள தமிழர் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைத்து விடலாம்.

    சிங்களப் பகுதிகளை இந்தியாவின் தனி மாநிலம் ஆக்கி விடலாம்.

    ReplyDelete

Popular Posts