Nov 29, 2011

முல்லைபெரியாறு: தமிழக அரசுக்கு பரிந்துரை


முல்லைப்பெரியாறு அணை பிரச்சனைக்கான எளிமையான தீர்வுகளை கோவை பத்திரிக்கையாளர்களுக்கு இன்று விளக்கம் அளித்தோம்.

கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மதியம் 2.30 மணிக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. எனது கணவரும் பத்திரிக்கையாளருமான ஆனந்த்துடன் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினேன்.

தினமலர், தினதந்தி, தினகரன், தினமணி போன்ற தமிழ்பத்திரிக்கை நிருபர்கள் வரவில்லை. சன் டிவி, கேப்டன் டிவி, டெக்கன் கிரானிக்கல், எ.என்.ஐ, உட்பட ஒரு சில பத்திரிக்கையாளர்களே நட்பு ரீதியாக வந்திருந்தார்கள்.   

பின்னர் மாலை 5 மணி அளவில் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தோம். இந்த தீர்வுகள் குறித்த முகாந்திர ஆய்வுகளை செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யும்படி கேட்டுக்கொண்டோம்.  உளவுத்துறை அதிகாரிகள் மூலம் உடனடியாக தமிழக முதல்வர் செயலலிதாவின் பார்வைக்கும் கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்துள்ளோம்.

இதன் தொடர்ச்சியாக நாளை பாலக்காடு மாவட்ட பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்க உள்ளோம். பாலக்காடு மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளிக்க திட்டமிட்டுள்ளோம்.

பாலக்காடு பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெரும் கூட்டத்தில் தமிழக மூத்த பொரியாளர்கள் தயாரித்த 40 நிமிட குறும்படத்தை வெளியிட்டு காட்ட உள்ளோம்.

இதுகுறித்த கூடுதல் தகவல்கள் இருந்தால் அனுப்பி வையுங்கள். மேலதிக ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வலைபதிவர்களுக்கு ஒரு அவசர அழைப்பு


முல்லைபெரியாறு பிரச்சனை தொடர்பாக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். கோவை பத்திரிக்கையாளர் சங்கத்தில் இது குறித்து விளக்கம் அளிக்கிறோம்.

முல்லைபெரியாறு பிரச்சனை குறித்து இந்த வலைபதிவில் எழுதிவந்தோம். பலர் நல்ல ஆலோசனைகளை பகிர்ந்துகொண்டீர்கள். மிக்க நன்றி. தற்போது முல்லை பெரியாறு பிரச்சனை உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலையில் வலைப்பதிவில் எழுதிய தீர்வுகளை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய திட்டமிட்டுள்ளேன். 

முல்லைபெரியாறு பிரச்சனை குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று மதியம் 2 மணிக்கு கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடக்கிறது.
  
பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு பின்னர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்த கட்டுரைகளை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யும் படி மனுவாக அளிக்க உள்ளோம்.

பத்திரிக்கையாளர் சந்திப்பு சுருக்கத்தை தந்துள்ளேன். மாற்று கருத்துக்கள் ஆலோசனைகள் இருந்தால் உடனியாக தெரியப்படுத்துங்கள். 

முல்லை பெரியாறு : தமிழகம் மாற்றை யோசிக்க வேண்டும்


எம்.சி.ஆர் காலத்தில் பரிசீலிக்கப்பட்ட தீர்வுக்கு ஏன் புத்துயிர் அளிக்க கூடாது?

முல்லைபெரியாறு பிரச்சனை உச்சகட்டத்தை அடைந்துள்ள இந்த நிலையில் தமிழகம் கட்டாயம் மாற்றை யோசித்தாக வேண்டும். அதற்கான சிறு முயற்சி தான் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஒரு பக்கம் 70 லட்சம் மக்களின் மரண பயம், மறுபக்கம் 70 லட்சம் மக்களின் உயிர் ஆதார பிரச்சனை. இந்த இரண்டுமே அரசியல் விளையாட்டுகளில் சிக்காமல் ஒரு முழுமையான தீர்வை நோக்கி செல்ல வேண்டும்.

தமிழகத்துக்கு இது உயிர் ஆதார பிரச்சனை. கேரளாவுக்கு இது உயிர் போகும் பிரச்சனை.

இது அரசியல்வாதிகளுக்கு இடையேயான பிரச்சனையோ, ஆவணங்களின் அடிப்படையில் போராடும் அட்டைக்கத்தி சண்டையோ அல்ல. தமிழனுக்கும் மலையாளிக்கும் உள்ள இனப்போராட்டமோ, ஈகோ பிரச்சனையோ அல்ல.

இயற்கைக்கும் மனிதகுலத்திற்கும் எதிரான போராட்டம். இயற்கையோடு அளவோடுதான் எதிர்த்து நிற்க வேண்டும். அளவுக்கு மீறிய ஆற்றலோடு வரும் இயற்கையிடம் வளைந்து கொடுத்துத்தான் போகவேண்டும். இல்லாவிட்டால் அழிவு மனிதனுக்குத்தான்.

அரசியலை கடத்து முல்லைபெரியாறு அணை போராட்ட குழுவினர் சில தீர்வுகளை முன் வைக்கின்றனர். இதை ஏன் தமிழக அரசு பரிசீலிக்க கூடாது.

1. தற்போது உள்ளதை விட தாழ்வாக சில கால்வாய்கள் வெட்டி அதிகப்படியான தண்ணீரை தமிழகம் கீழ்பகுதிக்கு எடுத்து வரலாம். இவ்வாறு கூடுதலாக வரும் தண்ணீரை வைகை அணையில் சேமிக்கலாம். அல்லது கூடலூர் பகுதியில் புதிய அணை கட்டலாம்.

2. ஒரே அணையாக வைத்து தண்ணீர் எடுப்பதை தவிர்த்து, கூஃபர் எனப்படும் சிற்றணைகளாக பிரித்து கூட தண்ணீரை தமிழகம் எடுத்துச்செல்ல முடியும்.  இதனால் தற்போதைய அணை இல்லாமலும் தண்ணீர் தமிழகத்துக்கு முழுமையாக கிடைக்கும்.

3. பெரியாறு அணைகட்டில் இருந்து உட்புறமாக 12 மீட்டர் தொலைவில் தமிழக எல்லை( புதிய மாநில எல்லைகள் வரையறை படி) உள்ளது. இந்த பகுதியில் தமிழகம் புதிய அணை கட்டலாம். இந்த அணை கட்டுவதன் மூலம் தமிழகம் கேரளாவுக்கு எவ்வித பணமும் தர வேண்டியது இல்லை. ஒப்பந்தங்களும் தேவை இல்லை. இது முழுக்க முழுக்க தமிழகத்தில் இருக்கும் தமிழகத்துக்கு சொந்தமான அணையாக இருக்கும்.

( இந்த திட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.சி.ஆர் ஆட்சி காலத்தில் பரிசீலிக்கப்பட்டுள்ளது. 1979 ஆண்டுகளில் முல்லைபெரியாறு பிரச்சனை தீவிரமான போது இந்த திட்டம் முன்வைக்கப்பட்டது. இதனால் கேரளாவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் அப்போதைய கேரள அரசு அணையை பலப்படுத்தினால் போதும் என்ற தீர்வை நோக்கி நழுவிக்கொண்டது).

பழமையான அணைக்கு மாற்று அணை கட்டவேண்டும் என்ற கோரிக்கை தீர்வைநோக்கி வந்துள்ள இந்த நிலையில், புதிய அணையை கேரள அரசு கட்டுவதை விட தமிழக அரசே தமது எல்லைக்குள் கட்டிக்கொள்வது கௌரவமானதும், நீண்டகால தண்ணீர் தேவைக்கு உறுதியான தீர்வுமாக அமையும். மேலும் அச்சத்தில் உள்ள 70 லட்சம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த மனிதநேய மாண்பும் தமிழகத்துக்கு கிடைக்கும்.

தமிழகம் அணை கட்டினால் தற்போது உள்ள முல்லைபெரியாறு அணையை உடைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில் முழுமையாக பயன்பாட்டை தவிர்க்க வேண்டிய நிலையும் வராது. 104 அடிக்கு கீழ்நிலையில் உள்ள தண்ணீர் பென்னி குயின் விருப்பப்படி அப்பகுதி வனவிலங்குகளுக்கு கிடைக்க செய்யலாம். அணையும் பாரம்பரிய அணையாக நீடித்து நிற்கும்.

கேரளா அணை கட்டினால் இயற்கை ரீதியாக தமிழகத்திற்கு ஒரு லிட்டர் தண்ணீர் கூட கிடைக்காது. மேலும் மீண்டும் மீண்டும் இருமாநில தண்ணீர் பிரச்சனை தொடர்கதையாகும்.

தொடர்புக்கு : 9787678939, 
9715833443.

Nov 28, 2011

ஒரு மலையாளியின் குரல் - தமிழக அரசு யோசிக்குமா?


வண்டிப்பெரியாறு பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு மேல் பாதுகாப்பு கேட்டு போரடிவரும் போராட்டகுழுவில் உள்ள ஒரு மலையாளியின் குரலை தான் தற்போது கேட்டீர்கள்.

அவர்களது குரலின் தமிழ் மொழிபெயர்ப்பு :

2800 அடி உயரத்தில் உள்ள முல்லைபெரியாறு அணையில் இருந்து சிறிய பல புதிய கால்வாய்கள் வெட்டுவதன் மூலம் அணையே இல்லாமல் கூட தமிழத்துக்கு முழுவதுமான தண்ணீரை கொண்டு செல்ல முடியும். அல்லது சிறு சிறு சிற்றணைகள் மூலம் தண்ணீரை பாதுகாப்பாக எடுத்து செல்ல முடியும். தண்ணீரை பாதுகாப்பாக எடுத்துசெல்லவேண்டிய பொருப்பை தமிழகம் ஏற்கவும், தண்ணீரை கொடுக்கும் தார்மீக பொருப்பை நாங்கள் வகிக்கவும் செய்வது தான் நாங்கள் முன்வைத்து போராடும் கருத்து. 

தமிழக அரசு யோசிக்குமா

Nov 27, 2011

கல்லணையும் பெரியாறு அணையும் ஒன்றா?


இன்று கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள ஒரே பகை முல்லைபெரியாறு தான்.

உண்மையில் முல்லைபெரியாறு விடயத்தில் தமிழகம் தான் கேரளாவுக்கு துரோகம் செய்கிறது. சுண்ணாம்பு கற்கலால் கட்டப்பட்ட முல்லைபெரியாறு அணை பாதுகாப்பு அற்றதாக உள்ளது என்பது உலகறிந்த விடயம்.


இதுவரை ஆய்வு செய்த 23 நிபுணர் குழுவும் முல்லைபெரியாறு அணை பாதுகாப்பு அற்றது என்பதை சொல்லியிருக்கிறார்கள். தமிழகத்துக்கு சாதகமாக சொன்ன உச்சநீதிமன்றம் கூட அணை பலப்படுத்தப்பட்டு உள்ளது, என்றுதான் சொல்லியிருக்கிறதே தவிர பாதுகாப்புடன் இருக்கிறது என்பதை சொல்லவில்லை. 

இந்த விடயத்தில் தமிழகம் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும். வீண்பிடிவாதம் பிடித்துக்கொண்டு இருப்பது நமக்கு தான் இழப்பை தரும். நாம் ஏன் வீம்பு (ஈகோவை) விட்டுவிட்டு மாற்றை யோசிக்கக்கூடாது?




நமக்கு தேவை தண்ணீர். அதை தர கேரள முழுமனதுடன் சம்மதிக்கிறது. அதை எங்கு சேமிப்பது என்பதில் தான் பிரச்சனை. முல்லைபெரியாறு அணையில் கூடுதலாக தண்ணீர் சேமிப்பது கேரளாவுக்கு ஆபத்தை தரும். என்றால் சேமிப்பிடத்தை ஏன் மாற்றக்கூடாது?



1975ல் சீனாவில் 2 அணைகள் உடைந்து ஏரத்தாள 2 லட்சம் மக்கள் இறந்தார்கள். இது நடந்தது நம் கண்முன் தான். 35 ஆண்டுகள் தான் கடந்துள்ளது. நம்மைபோல தான் அணை பலமாக உள்ளது பலமாக உள்ளது என பாட்டுப்பாடிக்கொண்டு இருந்தார்கள். இறுதியில் அந்த பாட்டு 2 லட்சம் மக்களுக்கு மரண ஓலமானது. அது கூட உள்நாட்டு பிரச்சனையாக முடிந்துவிட்டது.



ஆனால் முல்லை பெரியாறு விடயத்தில் கொஞ்சம் யோசித்து பாருங்கள். அணைக்கு எதாவது சம்பவித்தால் அப்புறம் கேரளா தமிழகம் நல்லுறவு என்பதை கனவில் கூட நினைத்துப்பார்க்க வேண்டியதில்லை. ஏற்படும் இழப்பிற்கு நம்மால் என்ன பதில் சொல்ல முடியும்.



இன்று தமிழகத்தின் வாதம் இதுதான் கல்லணை. கல்லணை. கல்லணை. 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கல்லணை உறுதியாக இருக்கும்போது 112 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய பெரியாறு அணை உறுதியாக இருக்காதா என்பது தான் தமிழகத்தின் வாதம்.



இது தவறாதும் மடத்தனமான வாதமுமாகும்.



கல்லணையும் பெரியாறு அணையும் ஒன்றா? நீங்களே ஒப்பிட்டுப்பாருங்கள்

  • கல்லணை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 500 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. 
  • பெரியாறு அணை 2890 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. 
  • கல்லணையின் உயரம் 20 அடிகள் 
  • பெரியாறு அணையின் உயரம் 177 அடிகள். 
  • கல்லணையில் இருந்து அவசர காலத்தில் ஒரே நேரத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான கன அடி நீரை வெளியேற்ற முடியும். 
  • பெரியாறு அணையில் இருந்து 2000 கன அடி நீரை மட்டுமே வெளியேற்ற முடியும் அதுவும் அவரசர கதியில் வெளியேற்ற முடியாது. 
  • கல்லணையின் கீழ்பகுதி 20 டிகிரி சரிவையுமே 20 அடி ஆழமும் கொண்டுள்ளது. 
  • பெரியாறு அணையின் கீழ்பகுதி 90 டிகிரி சரிவும் 300 அடி ஆழ பள்ளத்தாக்கையும் கொண்டுள்ளது. 
  • கல்லணை பகுதியில் நிலச்சரிவு, நிலநடுக்க அபாயம் இல்லை. 
  • பெரியாற்றில் இந்த இரண்டு அபாயங்களும் உள்ளது. பலமுறை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 2006 ல் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.1 ஆக பதிவாகியுள்ளது.
  • கல்லணையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பில்லை. மேட்டூர், அமராவதி, பவானிசாகர் இந்த மூன்று அணைகளை வைத்தே கல்லணையின் அவசர காலத்தை கணித்து விட முடியும்.
  • ஆனால் பெரியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. அணை கட்டுமானத்தின் போதே அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கட்டுமானம் கைவிடப்பட்டிருக்கிறது. பலத்த உயிர் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இறுதியில் பென்னி குயிக் தன் சொத்துக்களை விற்று சொந்த செலவில் கட்டி முடித்திருக்கிறார். கட்டும்போதே 185 இடங்களில் தடுப்பணை கட்டி, பிரதான பாதையை பேபி டேம் பக்கம் திருப்பியிருக்கிறார்.  பெரியாற்றில் எதை வைத்து அவசர காலத்தை கணிப்பது. 
  • பெரியாறு அணையானது 12க்கும் மேற்பட்ட காட்டாறுகளை இணைத்து மலை உச்சியில் கட்டப்பட்ட அணை.
  • மலைசிகரத்தில் உள்ள காட்டாற்றின் அழுத்தம், வேகத்தை சமவெளி பகுதியில் ஓடும் நதியுடன் ஒப்பிடலாமா?
  • கல்லணையில் தண்ணீரை தடுத்து நிறுத்தும் மதகுகள் உள்ளன. இந்த மதகுகள் வழியாகவே நான்கு திசைகளில் தண்ணீரை பிரித்து விடக்கூடிய வசதிகள் இருக்கிறது.
  • ஆனால் பெரியாறு அணையில் தண்ணீரை தடுத்து வைப்பது ஒரு பகுதி, வெள்ளம் அதிகமாகும் போது திறந்து விட வேறு ஒரு பகுதி, தண்ணீரை தமிழகத்திற்கு திருப்ப ஒரு பகுதி என மூன்றாக, மூன்றும் மூன்று திசையில் இருக்கிறது. 
  • பெரியாறு அணையில் அழுத்தம் அதிகமான பகுதியில் தண்ணீர் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதில் மதகுகள் இல்லை. அழுத்தம் கூடும்போது தண்ணீரை திறந்துவிட அணையின் இடது புறத்தில் பேபி டேம் உள்ளது. இது ஆற்றின் பிரதான பாதையைவிட மேடான இடத்தில் உள்ளது. அடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் எடுக்க வடக்குப்பக்கம் சுரங்கப்பாதை உள்ளது. அணையில் 104 அடி தண்ணீர் இருந்தால் மட்டுமே இங்கிருந்து தண்ணீர் கீழே வரும்.
  • கல்லணை என்பது தண்ணீரை பிரித்துவிடும் அணைதானே தவிர தேக்கி நிறுத்தும் அணை அல்ல. மேலும் இயற்கையான போக்கில் கட்டப்பட்ட அணை.
  • ஆனால் பெரியாறு அணையில் தண்ணீர் தடுத்து தேக்கப்பட்டு அணையின் மற்றொரு மூலையில் சுரங்கம் வழியாக கீழே கொடுவரப்படுகிறது. இது இயற்கைக்கு எதிராக கட்டப்பட்ட அணை. 
  • இரு அணைகளின் அழுத்தமும், நீர் அரிப்பும் மிகஅதிக வேறுபாடு உடையது.
  • கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை என்பது தற்போது மதகுகளுக்கு கீழ் உள்ள அடிப்பகுதி. அதாவது ஒரு செக் டேம் போன்றது. அதன்மீது உள்ள பாலங்களும், மதகுகளும் சமீபத்தில் கட்டப்பட்டது. 
  • கல்லணை தடுப்பு சுவற்றின் அகலம் அடிப்பகுதியில் இருந்து மேல் பகுதிவரை ஒரேமாதிரியாக உள்ளது. 
  • ஆனால் பெரியாறு அணையின் தடுப்பு சுவற்றின் அடியில் அகலமான சுவரும்,மேலே வரவர கூர்மையான பகுதியாக உள்ளது. இந்த கட்டமைப்பு தான் ஆபத்தாக உள்ளதாக கேரளா கூறுகிறது.
  • கல்லணை ஒரு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. 
  • பெரியாறு அணை இரு அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
  • கல்லணைக்கு பாதுகாப்பு பிரச்சனை இல்லை.
  • பெரியாறு அணைக்கு பாதுகாப்பு பிரச்சனை இருக்கிறது. 
  • கல்லணைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை. 
  • பெரியாறு அணைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிது.
  • காவிரியாற்றில் கர்நாடகாவுக்கும், நமக்கும் தேவை ஒரேமாதிரியானது. குடிநீர், விவசாயம், மின்சாரம்.
  • ஆனால் பெரியாற்று நீர் கேரளாவுக்கு ஆபத்தானது, தமிழ்நாட்டுக்கு தேவையானது.
  • தண்ணீரை பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
  • தண்ணீரை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.
  • கேரளாவின் குடிநீர், விவசாயம், மின்சாரத் தேவைகளுக்கு பெரியாறு பயன்படுவதில்லை, தேவையும் இல்லை.
  • பெரியாற்றின் வெள்ளப்பெருக்கால் உயிர்சேதமும், கொச்சி நகர அழிவும் பலமுறை ஏற்பட்டிருக்கிறது.
  • ஆனால் தமிழகத்தின் 7 மாவட்டங்களின் குடிநீர், விவசாயம்,மின்சார தேவைகளுக்கு பெரியாறு இன்றியமையாதது.
  • நமக்கு இது உயிர் ஆதார பிரச்சனை.கேரளாவுக்கு இது உயிர் போகும் பிரச்சனை.
  • கர்நாடகாவைப் போல தண்ணீர் தரமாட்டோம் என்று கேரளா ஒரு போதும் சொல்லவில்லை.
  • காவிரி பிரச்சனையில் தீர்வை முன்வைத்து யாரும் போராடுவதில்லை.
  • ஆனால் பெரியாற்று பிரச்சனையில் போராட்டக்காரர்கள் ஒரு தீர்வை முன்வைக்கிறார்கள்.


அணையின் பகுதியில், தமிழகத்தின் பக்கம், தற்போது உள்ளதைவிட தாழ்வாக சில கால்வாய்களை வெட்டவேண்டும். அதனால் அணை இல்லாமலும் தண்ணீரை கீழே கொண்டுசெல்ல முடியும். இல்லாவிட்டால் ஒரே அணையாக வைத்து தண்ணீர் எடுப்பதை தவிர்த்து, கூஃபர் எனப்படும் சிற்றணைகளாக பிரித்து கூட தண்ணீரை எடுத்துச்செல்ல முடியும். தண்ணீரை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தார்மீக கடமை எங்களுக்கு இருக்கிறது. அதே சமயம் தண்ணீரை பாதுகாப்பாக எடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பு தமிழகத்திற்கு இருக்கிறது. மேற்கூறிய தீர்வுகளுக்கு தற்போதைய ஒப்பந்தத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் கூட இல்லை என்ற தீர்வை அவர்கள் முன்வைக்கிறார்கள். 



இதைப்பற்றி நாம் ஏன் யோசிக்க கூடாது.
இந்த தீர்வால் தமிழகத்திற்கு செலவு குறைவும், பிரச்சனைக்கு தீர்வும், அதிக தண்ணீரும் கிடைக்க வாய்ப்புள்ளது.

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப
காய் கவர்ந் தற்று 
அல்லவா..



முல்லைப்பெரியாறு பிரச்சனையோடு, காவிரியையும், பாலாற்றையும், ஈழத்தையும் சேர்த்து முடிச்சு போட்டு, எங்கு பார்த்தாலும் தமிழர்களுக்கு தொல்லை என்று ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. நமது கண்ணோட்டத்தை முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும். 

இது அரசியல்வாதிகளுக்கு இடையேயான பிரச்சனையோ, ஆவணங்களின் அடிப்படையில் போராடும் அட்டைக்கத்தி சண்டையோ அல்ல. தமிழனுக்கும் மலையாளிக்கும் உள்ள இனப்போராட்டமோ ஈகோ பிரச்சனையோ அல்ல.



இயற்கைக்கும் மனிதகுலத்திற்கும் எதிரான போராட்டம். இயற்கையோடு அளவோடுதான் எதிர்த்து நிற்க வேண்டும். அளவுக்கு மீறிய ஆற்றலோடு வரும் இயற்கையிடம் வளைந்து கொடுத்துத்தான் போகவேண்டும். இல்லாவிட்டால் அழிவு மனிதனுக்குத்தான்.



அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்  



இந்த பதிவை வாசிப்பவர்கள் ஒரு முறை கூகிள் இணையத்தில் உள்ள மேப் பகுதி வழியாக அணையை பார்வையிடுங்கள். நான் சொல்வதில் உள்ள உண்மை புரியும்

Nov 23, 2011

முல்லைபெரியாறு:தமிழரிடம் மனசாட்சி இருக்கிறதா?


முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்றுவந்த என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

முல்லைபெரியாறு பிரச்சனையில் கேரளாவில் ஏதோ மலையாளிகள் எதிர்க்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். முல்லைபெரியாறு அணையால் ஆபத்து என்று சொல்பவர்கள் தமிழர்கள் தான். அதுவும் அந்த அணையின் கட்டுமான பணிகளில் ஈடுபட்ட தமிழர்களின் இன்றைய தலைமுறையினர்.

முல்லை பெரியாறு அணைக்கு கீழே குடியிருப்பதும், விவசாயம் செய்வதும் தமிழர்கள் தான். 10 லட்சம் தமிழர்கள் உட்பட 40 லட்சம் மனிதர்களின் உயிர் பிரச்சனை அது. 

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அரபிக்கடலில் வீணாக கலக்கும் பெரியாற்றை(பெரிய+ஆறு) மதுரை ராமநாதபுரம் பகுதிகளுக்கு திருப்பும் திட்டம் தான் முல்லை பெரியாறு அணை திட்டம்.

முல்லை + பெரியாறு என்ற இரு ஆற்றுப்பகுதிகளை இணைத்து அணையாக நீரை தேக்கி மேற்கு திசையில் பாயும் நீரின் போக்கை கிழக்கு திசைக்கு திருப்புவது தான் அணையின் பிரதான நோக்கம்.

அணை இருக்கும் மலைபகுதி முக்கோண சரிவை உடையது. சரிவில் மேற்குநோக்கி பாயும் ஆற்றுநீரை தடுத்து தேக்கி நிரப்பி கிழக்குநோக்கி எதிர்திசையில் வழிய செய்யப்படுகிறது.

இயற்கைக்கு எதிராக மிகப்பெரிய போரட்டத்தில் கட்டப்படும் இந்த அணையின் ஆபத்தை அப்போதே உணராமல் இல்லை. அதை 999 ஆண்டு ஒப்பந்தபடிவத்தில் தெளிவாகவே சொல்லியுள்ளார்கள்.

பிரதான அணையின் மொத்த உயரம் 177. இதில் 162 அடி வரை தண்ணீரை தேக்கியிருக்கிறார்கள். 104 அடிக்கு கீழான தண்ணீரை எதிர்திசையில் திருப்பகூடாது. அந்த நீர் தேக்கடி பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு சொந்தமானது. 104 முதல் 152 அடிவரையிலான நீரை தமிழகம் பயன்படுத்திக்கொள்ளலாம்.

115 அடியிலிருந்து தமிழகம் தேவையான அழுத்தத்தில் நீரை எடுக்க முடியும்.

அணையின் பலத்தை பொருத்தவரை 50 ஆண்டுகள் மட்டுமே முழுமையான உறுதியிருக்கும் என்பது உலகின் பொதுவிதி.

112 ஆண்டுகளுக்கு முன்னர் சுண்ணாம்பு கலவையில் கட்டப்பட்டது அணை. இதன் மேற்பூச்சு நீர்அரிப்பு தன்மையுடையது. கற்களுக்கு இடையிலான கலைவை பகுதியில் நீர்உறிஞ்சும் தன்ம¬யும் உள்ளது. இதன் வழியாக அரிப்பும் நீர்கசிவும் உள்ளது என்பது உண்மை. நீர் கசிவின் தன்மை ஆண்டுதோறும் வழக்கத்தைவிட அதிகரித்து வருகிறது என்பதும் உண்மை. 

உலகில் பயன்பாட்டில் இருக்கும் மிகப்பழமையான 4 அணைகளில் முல்லைபெரியாறு அணையும் ஒன்று. மற்ற மூன்று அணைகளிலும் நீர்தேக்கம் பாதியாக குறைக்கப்பட்டுவிட்டது. ஆபத்தான அணைகள் பட்டியலில் முல்லைபெரியாறு அணையும் உள்ளது.

முல்லை பெரியாறு அணையின் முக்கிய உடல் பகுதியின் நீர்அழுத்தம் கூர்மையாக முக்கிய அணைகட்டின் அடிப்பகுதியை நோக்கி செல்கிறது. அணையிருக்கும் நிலபகுதியும் அதே சாய்வில் சரிவாகவே அழுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் அதிகப்படியான அழுத்தத்தை அணைக்கு கொடுப்பது ஆபத்தையே தரும்.

முல்லை பெரியாறு பிரதான அணையின் பயன்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்வது தான் அறிவுடமை. இதற்கு இன்றுவரை தமிழகம் மாற்றை யோசிக்காதது தான் வேதனை. ஒரு அணையால் ஆபத்து இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு மாற்றை யோசிப்பது தான் மனிதநேயம். அந்த மனிதநேயம் இன்றுவரை தமிழத்திற்கு வராதது ஏன்?

முல்லை பெரியாறு அணையில் அதிகப்படியான நீர் மேற்குநோக்கி வெளியேற்றப்பட்டால் வரும் ஆபத்தை இடுக்கி அணையை பற்றி தெரிந்துகொண்டால் புரிந்துகொள்ள முடியும்.



பெரியாற்றின் குறுக்கே மலை உச்சியில் கட்டப்பட்டுள்ளது முல்லைபெரியாறு அணை. இங்கிருந்து கசியும் நீர் வல்லகடவு, வண்டிப்பெரியார் நகரங்களை கடந்து இடுக்கி அணையை அடைகிறது. பெரியாறு அல்லாமல் பல காட்டாறுகளும் இடுக்கி அணையின் பிரதான நீர்ஆதாரங்கள். எப்போதும் நிரம்பிவழியும் இடுக்கி அணையும் மிகவும் ஆபாத்தான அணைகளில் ஒன்று தான்.
 உலகில் வளைவு (ஆர்ச்) வடிவில் கட்டப்பட்ட நவீன அணை இடுக்கி அணை. மூன்று மலை இடுக்குகளில் தடுப்பணை ஏற்படுத்தி செங்குத்தாக நீர் தேக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட கூடுதால் அழுத்தம் கொடுத்தால் இடுக்கி சிறுதோணி அணை உடையும் என்பது நிபுணத்துவம்.

முல்லைபெரியாறு அணையின் வெள்ளப்பெறுக்கால் இடுக்கி அணை உடையுமானால் 40 லட்சம் மனிதர்கள் நீரில் அடித்துசெல்லப்படுவார்கள். கொச்சி என்ற அழகிய துறைமுகமே சுவடற்று போகும். ஏராளமான வனவிலங்குள் கடலில் செத்துமிதக்கும்.

இதெல்லாம் சம்பவிக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அது தான் நிதர்சன உண்மை.

சரி அடுத்து தமிழகம் பக்கம் பார்வையை திருப்புவோம்.

முல்லை பெரியாறு அணையின் உதவியால் தேனி, மதுரை, ராமநாதபுரம் உட்பட 7 மாவட்டங்கள் செழிப்படைகிறது. இந்த உதவி நிறுத்தப்பட்டால் இந்த பூமி பாலைவனமாகிவிடும் என்பதும் நிதர்சன உண்மை.

இந்த பகுதிகளின் குடிநீர் உயிர் ஆதாரம் முல்லை பெரியாறு என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை.

கேரள மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும். தமிழக மக்களுக்கு தண்ணீர் வேண்டும். இது தான் முல்லைபெரியார் பிரச்சனைக்கான முழுமையான தீர்வு.

115 அடி முதல் 136 அடி வரை நீரை தேக்குவதால் நிச்சயமாக தமிழகம் போதிய நீரை பெறமுடியும். ஆனால் அதை நீண்டநாட்களுக்கு தேவைக்கு ஏற்ப பிரித்து பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. 

மேலும் தமிழகத்தின் முக்கிய மின்உற்பத்தி நிலையங்களில் ஒன்றான கூடலூர் மின் உற்பத்தி நிலையத்திற்கு 152 அடி வரை நீரை தேக்கினால் மட்டுமே போதிய மின்உற்பத்தி செய்ய முடியும். இங்கு தான் பிரச்சனையே இருக்கிறது.

நமக்கு தண்ணீரா? மின் உற்பத்தியா? எது பிரதானம் என்பதை பார்க்க வேண்டும். 

இதே அணை புவியல் ரிதியாக நேர் எதிர் திசையில் திரும்பி இருந்தால் நாம் ஒத்துக்கொள்வோமா?

நிச்சயம் தமிழகம் மாற்றை யோசித்தேயாகவேண்டும். இல்லாவிட்டால் கேரளாவின் துயரத்தின் மிகப்பெரிய சாபம் தமிழகத்தின் மீது நீங்கா வடுவை ஏற்படுத்தி விடும்.

அரசியலை தாண்டி கேரள மக்களின் கோரிக்கை இதுதான். அணைக்கு மாற்று அணை கட்டவேண்டும். அல்லது அணையின் அழுத்தத்தை குறைத்து நீரை தமிழகம் எடுத்து செல்ல வேண்டும்.

எதிர்பகுதியில் சில கால் வாய்களை வெட்டுவதன் மூலம் எளிதாக இந்த பிரச்சனையை தீர்க்கலாம். ஆனால் தமிழகத்தின் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அவ்வளவே. எதிர்திசையில் கால்வாய் வெட்டுவது முல்லைபெரியாறு அணை பிரச்சனைக்கு மிகஎளிதான தீர்வாக இருக்கும். இதற்கு அதிககால அவகாசமோ, நிதியோ தேவைப்படாது. மேலும் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் கிடைக்கும். கேரள மக்களும் நிம்மதியாக உறங்க முடியும். இப்படி ஏராளமான நன்மைகள் இருக்கிறது. இதை அரசியல்வாதிகள் யோசிப்பார்களா?

கர்நாடகா, ஆந்திராவை ஒப்பிடும்போது கேரளா தமிழகத்துக்கு மிகப்பெரிய தண்ணீர் கொடையளிக்கிறது. ஆந்திரா, கர்நாடகாவுக்கு தமிழகம் ஒரு டி.எம்.சி தண்ணீருக்கு 3 கோடி ரூபாய் தருகிறது. ஆனால் கேரளாவுக்கு 70 டிஎம்சி தண்ணீருக்குநிலகுத்தகையாக 40 ஆயிரம் மடடுமே தருகிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. மேற்கு தொடர்ச்சி மலையில் கேரளா நோக்கி பாயும் 36 ஆறுகளை தடுத்து தமிழகம் நோக்கி திருப்பியிருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடகூடாது.

கேரளா நமது நண்பன். அவர்கள் கோரிக்கையை மனிதநேயத்தோடு பார்ப்போம். நிச்சயம் தீர்வு உள்ளது. 

குமரிக்காக மேற்கு தொடர்ச்சி மலையின் அத்தணை அணைகளையும் ஆறுகளையும் கேரளாவுக்கு விற்றுவிட்டு இன்று மீண்டும் உரிமைகொண்டாடுவதில் அர்த்தம் இல்லை.

வரலாற்றை கொஞ்சம் திருப்பி பாருங்கள் 
காமராசரால் அனாதையாக்கப்பட்ட 50 லட்சத்திற்கும் மேற்பட்ட கேரள தமிழர்களின் குரலை ஒருநாளாவது தமிழர்கள் கேட்டதுண்டா?

50 ஆண்டுகால வரலாற்றில் ஒரு தலைவராவறு வண்டிபெரியாறு உட்பட பகுதிகளுக்கு சென்று தமிழர்கள் குறைகளை கேட்டிருக்கிறார்களா?

தமிழகம் என்பது தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமான பாதுகாப்பு தரும் நாடு என்றால் தயவு செய்து தமிழ் என்ற பெயரை தூக்கிவிட்டு சென்னை மாகாணம் என்றே வைத்துக்கொள்ளுங்கள். உலக தமிழர்களுக்கு ஒரு நாடாக இருக்குமானல் அதற்கு தமிழ்நாடு என்று பெயர் இருக்கட்டும்.

வண்டிபெரியார், இடுக்கி இந்த பகுதிகளில் இருக்கும் தமிழர்களின் நலனுக்காக தமிழக அரசு ஒரு துரும்பை கிள்ளியிருக்குமா?

தமிழகம் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கொடுமை யாருக்காவது தெரியுமா? ஆழியாறு நீர் கிடைக்காமல் பாலக்காடு மாவட்டத்தில் கருகிபோகும் நெற்கதிர்களின் மரணக்குரலை எப்போதாவது தமிழகம் காதுகொடுத்து கேட்டதுண்டா?

கோவை அருகே அட்டப்பாடி என்ற ஒரு பகுதி இருக்கிறது. உலகின் தலைசிறந்த சுற்றுலா தளமாகவும் விவசாய பூமியாகவும் இருந்த மண் இன்று வீணாக போனது.

காரணம் ஒரு மேம்பாட்டு முயற்சிக்கும் தமிழகம் சம்மதிப்பதில்லை.

புவியியல் மற்றும் கலாச்சர அமைப்பில் தமிழகமாக இருந்த பகுதிகளை காமராசர் தன் சுயநலனுக்காக கேரளாவிடம் அடகுவைத்துவிட்ட கொடுமை யாருக்காவது தெரியுமா?

தமிழக அரசின் உதவி கிடைக்கும் என காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்துபோன தமிழர்கள் தான் இன்று கேரளாவின் ஆதரவு கரத்தை பிடித்துள்ளனர்.

காமராசரால் அநாதையாக்கப்பட்ட இந்த தமிழர்களை இன்றும் கவுரவமாக வைத்துள்ளது கேரளா. இவர்களுக்கு தமிழ்பள்ளிகள், தமிழில் அரசு ஆவணங்கள், தமிழில் குடும்ப அட்டை, தமிழில் வாக்காளர் அடையாள அட்டை, தமிழில் பெயர்பலகைகள்  என தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தள்ளது.

ஆனால் கேரள மக்களின் உயிர் பயத்திற்கு நாம் என்ன மதிப்பளித்துள்ளோம். குறைந்தபட்சம் அவர்களின் கருத்து என்ன என்றாவது காது கொடுத்து கேட்டுள்ளோமா? 

மதுரை உட்பட தென்மாவட்ட விவசாயிகளே தயவு செய்து தமிழக அரசியல்வாதிகளை நம்பாதீர்கள். நமது தொப்புள்கொடி உறவுகளின் கையில் உள்ளது முல்லைபெரியாறு தீர்ப்பு.

அவர்களை சென்று சந்தியுங்கள். அவர்கள் நிலையை பாருங்கள். அவர்களது அச்சத்தை போக்குங்கள். அவர்களுக்கு நம்பிக்கை அளியுங்கள். அவர்கள் மனது வைத்தால் முல்லைபெரியாறு என்றும் உங்களுடையது தான்.

Popular Posts