கொஞ்சம் வேதனையான விடயம் தான். சக பத்திரிக்கை நண்பர்களை பற்றி வெளிப்படையாக எழுதுவது அநாகரீகம் தான். ஆனாலும் கம்பீரமாக இருக்கவேண்டிய பத்திரிக்கையாளர்கள் கூட்டுகளவானிகளாகும்போது அதை வெளிப்படுத்தாமல் இருக்க முடியுமா?
நான் எழுத தயங்கியதை நண்பர் ரா.வேலுசாமி எழுதிவிட்டார். அந்த நிகழ்வை நானும் கொஞ்சம் படம்பிடித்து காட்டிவிடுகிறேன்.
கோவையில் பத்திரிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனை ஒதுக்கும் அரசு உத்தரவுக்கான அடிதடி தான் அது.
விண்ணப்பித்ததில் 162 பத்தரிக்கையாளர்கள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 130 பேருக்கு தான் இடமாம். இந்த 130 பேரை தேர்ந்தெடுக்க குலுக்கல் நடத்தினர். எதற்காக இந்த குலுக்கல்?
தகுதியான 162 பேருக்கும் இடம் தருவது தான் சரியான வழிமுறை. ஆனால் திடீர் என 130 பேருக்கு என ஒரு வட்டம் போட்டார்கள். இதற்கான காரணம் கேட்ட போது அவ்வளவு தான் இடம் இருக்கிறதாம். ஒப்புக்கொள்ள தான் வேண்டும்.
162 பேரில் இருந்து 130 பேரை தேர்ந்தெடுக்க தகுதிமுதிர்ச்சி அடிப்படையை கையாளலாம் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. வேடிக்கையான குலுக்கல் நடந்தது.
குலுக்கல் முடிவில் குலுக்கல் நடத்திய மாவட்ட வருவாய் அதிகாரியிடம் ஒரு கேள்வியை கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதில் தான் எல்லோரையும் தூக்கிவாரி போட்டது.
இன்னும் இடமே தேர்வு செய்யவில்லையாம்!
இடமே தேர்வு செய்யாமல் எப்படி 130 பேருக்கு தான் இடம் என்றார்கள்? எதற்காக இந்த குலுக்கலை நடத்தினார்கள்? இதன் பின்னால் இருக்கும் உந்து சக்தி என்ன?
இதில் இன்னொரு வேதனை என்னவென்றால் ஒரு நபருக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் நில அளவை கூடுதலாக கேட்கும் பத்திரிக்கையாளர்கள், இருக்கும் இடத்தை தகுதியான அனைத்து சக பத்திரிக்கையாளர்களுக்கும் பகிர்ந்துஎடுக்க மறுக்கிறார்கள்.
இருக்கும் இடத்தை தகுதியானவர்களுக்கு பகிர்ந்துகொடுத்தால் எதற்கு இந்த குலுக்கல் அசிங்கம்?
குலுக்கல் நடத்தியது தவறு. இடமே தெரிவுசெய்யாமல் குலுக்கல் நடத்தியது மிகப்பெரிய தவறு. மாவட்ட வருவாய் அதிகாரி முன்பு குலுக்கலுக்கு பத்திரிக்கையளார்கள் கைதட்டி ஆர்ப்பரித்தது உண்மையில் கேவலமாக இருந்தது.
எடிசனே இன்னும் வெளிவராத டைம்சு ஆப் இந்தியா, கோவையில் நிருபராக ஒரு நாள் கூட பணிபுரியாத பத்திரிக்கை ஆசிரியர்கள், பத்திரிக்கையாளர்களே அல்லாத வடிவமைப்பு துறையாளர்கள், பெயருக்கு கூட வெளிவராத பத்திரிக்கையில் பணிபுரிவதாக சொல்வோர். பத்திரிக்கை முதலாளிகள். மாதம் ஒரு முறை வெளிவரும் இதழ்கள். இவர்கள் எல்லாம் எப்படி கோவையில் உழைக்கும் பத்திரிக்கையாளர்களானார்கள்?
இன்னும் ஏராளம் இருக்கிறது. அரசு அதிகாரிகளுக்கு டாசுமார்க் பார் நண்பர்கள் எல்லாம் பத்திரிக்கையாளர்கள் என்றால் உண்மையாக உழைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு என்ன விலைஇருக்கப்போகிறது?
பத்திரிக்கையாளர்களுக்கு சமுதாயம் உச்ச கவுரவத்தை தந்துள்ளது. இதை இப்படி கேவலப்படுத்திக்கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதுவும் கோவை பத்திரிக்கையாளர்கள்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்களை கேட்டுள்ளோம். வரட்டும் அப்புறம் இருக்கிறது வேடிக்கை.
உண்மையில் பெரிய தமிழ் பத்திரிக்கைகளில் பணிபுரியும் நிருபர்களுக்கு குறைந்த சம்பளம் தான் கிடைக்கிறது. அன்பளிப்பு வாங்காத நேர்மையான நிருபர்கள் இன்றைய விலைவாசியில் எவ்வளவு கடினப்படுகிறார்கள் என்பது சக பத்திரிக்கையாளர்களு தெரியமால் இல்லை.
ஊருக்கெல்லாம் போனசு கிடைக்க குரல்கொடுக்கும் பத்திரக்கையாளர்கள், தங்களுக்கு போனசு கேட்டால் பணியே இல்லை. தங்கள் நிர்வாகத்தை எதிர்த்து எதற்குமே போராட முடியாத நிலையில் தான் உள்ளனர் பத்திரிக்கையாளர்கள். கிடைக்கும் சம்பளத்தை வாங்கிக்கொண்டு நேர்மையாக பணியாற்றும் நிருபர்கள் உண்மையில் நாட்டின் தலைசிறந்த சமூக சேவகர்கள். இவர்களுக்கு அரசு தரும் சலுகையை கூட சிலர் தட்டிப்பறிப்பதை எப்படி வேடிக்கை பார்க்க முடியும்?
தனக்கு கிடைத்தால் போதும் மற்றவை எப்படியோ நடந்துவிட்டு போகட்டும் என்று இருப்பதற்கு பத்திரிக்கையாளர்கள் ஒன்றும் சாதாரண பொதுமக்கள் அல்ல.
தங்களுக்கு கிடைப்பது நேர்மையாக கிடைக்கவேண்டும். இன்னொருவனுக்கு கிடைக்கவேண்டியதை தட்டி பறிக்ககூடாது. அதே நேரத்தில் நேர்மையற்ற முறையில் கிடைப்பதை ஏற்க கூடாது. அதை நேர்மையாக தரும்படி போராட வேண்டும் இது தான் உண்மையான பத்திரிக்கையாளனுக்கு அழகு.
அரசும், அதிகாரிகளும் செய்யும் ஊழலுக்கு சுயநலனுக்காக பத்திரிக்கையாளர்களே துணை போனால் பத்திரிக்கை தர்மத்தை மூட்டைகட்டி வைக்கவேண்டியது தான்.