Dec 11, 2010

சப்பானால் கொல்லப்பட்ட 1.5 லட்சம் தமிழர்கள் : மறக்கப்பட்ட வரலாறு

மலேசிய எழுத்தாளர் சீ.அருண் கோவை வந்துள்ளார். தமிழோசை பதிப்பகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறார் என சக நிருபர் ஒருவர் கூறினார். பிரபலமான சயாம் &பர்மா மரண ரயில் பாதை குறித்த புத்தகம் எழுதியவர் தான் சீ.அருண் என அறிமுகம் செய்துவைத்தார்.

‘‘சயாம்-பர்மா மரணரயில் பாதை’’ குறித்த செய்திகளை கேட்டதும், உண்மையில் அதிர்ச்சியடைந்து விட்டேன்.
1.5 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட வரலாறு ஒரு பத்திரிக்கையாளரான எனக்கே தெரியவில்லை என்றால் அது நிச்சயம் மறக்கப்பட்ட வரலாறு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். 

முதலில் என்னால் நம்ப முடியவில்லை. புத்தகத்தில் உள்ள ஆதாரங்களை பார்த்தபின்னும் கூட சிறு சந்தேகம் இருந்தது. 2 லட்சம் தமிழர்களை கொத்தடிமைகளாக பர்மாவுக்கு கொண்டுசென்றிருக்க முடியுமா? அது நடைமுறை சாத்தியமா?

இந்த சந்தேகங்களை சில வரலாற்று ஆசிரியர்கள், அந்த கால பெரியவர்கள் சிலரிடம் கேட்டேன்.

ஆம் உண்மை தான் என்ற பதில் இன்னும் என்னை திகைக்கவைத்துவிட்டது.

இன்று வெளிநாட்டுவேலை என்றால் துபாய் என்பது போல, அன்று ரங்கூன்(பர்மா) வேலை மோகம் தமிழர்கள் மத்தியில் இருந்துள்ளது. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற தமிழர் தாரகமந்திரத்தின் சிவப்பு பக்கங்கள் உண்மையில் கொலை நடுங்க வைக்கிறது.

சயாம்-பர்மா மரணரயில்பாதை பணியில் பலியான சுமார் 1.5 லட்சம் தமிழர்களின் பரிதாபவரலாற்றை புத்தகமாக்கியுள்ளார் சீ.அருண்.

232 பக்கங்களுடன் கோவை தமிழோசை வெளியிட்டுள்ள அந்த புத்தகத்தின் சுருக்கத்தை அடுத்தடுத்த பதிவுகளில் தருகிறேன்.

தற்போது சீ. அருணுடனான சந்திப்பு :

இன்று மடிந்துகொண்டிருக்கும் தமிழர்களையே காப்பாற்ற முடியவில்லை நீங்கள் 50 வருடங்களுக்கு முன்னர் இறந்து போன தமிழர்களை பற்றி கவலைப்படுகிறீர்கள்

அருண் : 50 வருடங்களுக்கு முன்னர் இறந்த சுமார் 1.5 லட்சம் தமிழர்களின் மரணம் மறைக்கப்பட்டுவிடக்கூடாது. சப்பான் நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் கொடுத்தது உழைப்பையும் உயிரையும். உயிருக்கு விலையில்லையென்றால் கூட பரவாயில்லை. அந்த தமிழர்களின் உழைப்பை உலகம் மறந்துவிடக்கூடாது. அதற்காக தான் இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன்.

ஈழத்தில் தமிழர்கள் இறந்ததையும், பர்மாவில் இறந்ததையும் எப்படி கருதுகிறீர்கள்?

அருண் : ஈழத்தில் தமிழர்கள் போராடி இறந்தார்கள். அது ஒரு விடுதலைபோராட்டம். விடுதலைப்போராட்ட மரணங்களை போரில் வீரமரணங்களாக கூட சீரணித்துக்கொள்ளலாம். ஆனால் சயாம்&பர்மா ரயில்பாதை பணியில் தமிழர்கள் கொத்தடிமைகளாக கொல்லப்பட்டனர். சப்பான் நாட்டுக்காக தமிழர்களின் உழைப்பும் உயிரும் எடுக்கப்பட்டது. ஈழத்தில் தமிழினம் தன் சுய விடுதலைக்காக உயிரிழந்தது. அது வீர மரணம். ஆனால் பர்மாவில் யாருக்காக 1.5 லட்சம் தமிழர்கள் உயிர் போனது? அந்த வரலாறு மறக்கப்படகூடாது.

மலேசியாவில் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்களா?

அருண் : மலேசியா வாழ் தமிழர்களின் மனநிலை 3 அடுக்குகளில் உள்ளது. 1 சிறப்பாக வாழ்கிறோம். 2. ஏதோ தமிழ்நாட்டைவிட பரவாயில்லை. 3. ஒரு அடிமையை போல. பொதுவாக பார்க்கும்போது மலேசியாவில் தமிழர்கள் மொழி, இனம், பொருளாதாரத்தில் இன்னும் ஒடுக்கப்பட்டவர்களாகவே உள்ளனர் என்பது தான் உண்மை.

மலேசியாவில் தமிழ்மொழி வளர்ச்சி, கல்வி எப்படி உள்ளது.

அருண் : முன்பை விட இப்போது மொழி வளர்ச்சி, கல்வி அதிகரித்துள்ளது. தமிழர்கள் மத்தியில் தாய்மொழிமீதான அக்கறை கூடியுள்ளது.

மலேசியாவில் தமிழ்வளர்ச்சிக்காக தமிழக அரசு எதாவது உதவிகள் செய்கிறதா?

அருண் : இதுவரை ஒரு துரும்பை கூட கிள்ளவில்லை. மலேசிய தமிழர்களின் ஒருமித்த முயற்சியால் தான் தமிழ்பள்ளிகள் அதிகளவில் செயல்படுகின்றன.

தொடரும்...

Popular Posts