தமிழ்மணம் வலைபதிவுகளை இணைக்க கட்டணம் கேட்பதை ஏற்க முடியாது.
தமிழ்மணம் நிதிசேகரிப்பது தவறு இல்லை. அதற்கு விளம்பர யுக்தியை கையாளலாம். அதற்காக பதிவுக்கே கட்டணசேவை என்பது மிகத்தவறானது.
என் பதிவை முன் அறிவிப்பு இன்றி கட்டணசேவைக்கு மாற்றியதை தான் கண்டிக்கிறேன். இது ஏதோ ஆதிக்க போக்குபோல உள்ளது.
பதிவர்கள் எழுதாவிட்டால் தமிழமணம் என்ற இணையமே இல்லை என்பதை தமிழ்மணம் நிர்வகத்தார் புரிந்துகொள்ள வேண்டும்.
இணையம் நிர்வகிக்க நிதி தேவைதான். அதை விளம்பரம் மூலமாக எடுக்கலாம். அதற்காக பதிவையே விளம்பரமாக தரவேண்டும் என்று கோருவதை ஏற்க முடியாது.
இன்று கூகுள் பிளாக்கை இலவசமாக தருவதால் தான் நம்மால் விரும்பிய நேரத்தில் விரும்பியதை எழுதமுடிகிறது. இதற்கும் கட்டணம் என்றால் யோசித்துபாருங்கள்.
நான் தனிப்பட்ட ரீதியில் எனது பத்திரிக்கை குறித்து தமிழ்மணத்தில் விளம்பரம் செய்ய தயார். அதே போல தமிழ்மணம் சேவையை தொடர நிதிஉதவி அளிக்கவும் தயார். ஆனால் அதற்காக என் பதிவுக்கே கட்டணம் கேட்பது பகல்கொள்ளை போலவே தோன்றுகிறது.
கடந்த ஒரு வாரத்தில் தமிழ்மணம் மூலம் எனது பதிவை படித்தவர்கள் 20 ஆயிரம் பேர். எனது பத்திரிக்கையை படித்தவர்கள் 0. என் மூலம் தமிழ்மணத்தின் சேவையை அறிந்தவர்கள் பயன்படுத்தியவர்கள் 20 பேர்.
தமிழ்மணம் சேவையை நான் பயன்படுத்துவதால் எனக்கு எந்தவித வருமானமும் கிடைப்பது இல்லை.
அரசியல்வாதிகள் தான் தங்களை குறித்து தாங்களே செய்தியாக எழுதி அதை பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்வார்கள். மக்களுக்கு அது செய்தியா விளம்பரமா என்றுகூட தெரியாது.
500 ரூபாய்க்கு விளம்பரம் செய்தால் அந்த 500 ரூபாயை விளம்பரம் மூலம் வரும் வாடிக்கையாளரிடம் இருந்த எடுக்கும் யுக்தி தான் விளம்பரம்.
என் எழுத்துக்களை ஒன்றும் நான் விற்பனை செய்யவில்லை. விளம்பரம் செய்வதற்கு. மாதம் மாதம் 700 ரூபாய் கொடுத்து தான் என் எழுத்துக்களை விளம்பரப்படுத்த வேண்டுமா?
ரூ.500 கொடுத்தால் நேர கட்டுப்பாடு இல்லாத இணைய தொடர்பு கிடைக்கிறது. ஆண்டுக்கு ரூ. 500 கொடுத்தால் நமக்கு சொந்தமான டொமைனில் இணையம் வைத்துக்கொள்ளலாம். இப்படி இருக்க கூகிள் இலவசமாக தரும் பிளாக்கில் என் எழுத்துக்களை வாசகர்களிடம் கொண்டுசெல்ல மாத மாதம் ரூ.700 கேட்பது எந்தவிதத்தில் நியாயம்?
சென்ற வாரம் முல்லைபெரியாறு சென்றிருந்தேன். உயிரை பணையம் வைத்து என் சொந்த முயற்சியில் சொந்த செலவில் முல்லைபெரியாறு சென்று அங்குள்ள உண்மை நிலவரத்தை சேகரித்து வந்தேன். எதற்காக அதை வைத்து வியாபாரம் செய்யவா? என் உழைப்பை வலைபதிவில் எழுதி ஆறுதல் பட்டேன். ஆனால் அதை தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.
பல மொழிகளில் பல திரட்டிகள் செயல்படுகின்றன. யாரும் பதிவையே விளம்பரமாக தரசொல்லி கேட்பது இல்லை.
தமிழ்மணம் நிச்சயமாக இந்த போக்கை மாற்றியே ஆகவேண்டும். இல்லை என்றால் தமிழின் முதன்மை பதிவுதிரட்டி என்ற பெருமையை தார்மீகமாக இழக்க நேரிடும்.
நான் கேட்பது இது தான். குறைந்பட்சம் எனக்கு ஒரு முன் அறிவிப்பை தந்திருக்கலாமே.
கூகிள் இலவசமாக வலைபதிவை தருகிறது. அதை வாசகரிடம் கொண்டு சேர்க்க தமிழ்மணம் பணம் கேட்கிறது. என்ன கொடுமை.










